5 ஸ்டார் ஓட்டலுக்கு வந்த தெக்கத்தி கிராமம்!
சுதன் சுந்தரத்தின் ‘பேஸன் ஸ்டுடியோஸ்’ + சிவகார்த்திகேயனின் ’எஸ்.கே.புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து வரும்27—ஆம் தேதி ரிலீசாகிறது ‘தாய்கிழவி’. சிவகுமார் முருகேசன் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ‘கலையரசி’ ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், ரேச்சல் ரெபேக்கா உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங் : ஷான் லோகேஷ், ஆர்ட் டைரக்டர் : ராமு தங்கராஜ், மேக்கப் : வினீஷ், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
‘தாய்கிழவி’யின் முதல் புரமோ நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஓட்டலில் பிப்.22-ஆம் தேதி இரவு நடந்தது. விழா நடந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றினை அச்சுஅசலாக செட் போட்டு, அதில் கோவில் திருவிழாக் கடைகளையும் கண்முன்னே கொண்டு வந்து அசத்தியிருந்தார்கள். எங்கெங்கும் காணினும் தாய்கிழவி ராதிகா சரத்குமாரின் பவுனுத்தாய் கெட்டப் தான்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சரத்குமார், சூரி, சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா டைரக்டர்கள் சிபி சக்கரவர்த்தி, இரா.சரவணன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராதிகாவுடன் நடித்தவர்கள், மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் பேச வாய்ப்பளித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
வேறு படத்தின் ஷூட்டிங் இருப்பதால் சுருக்கமாகப் பேசிவிட்டு கிளம்பினார் சரத்குமார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட டைரக்டர்கள் அனைவருமே சிவகார்த்திகேயனின் தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் நல்ல படங்களைத் தயாரிக்கும் அவரது உயரிய நோக்கத்தையும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.
டைரக்டர் சிவகுமார் முருகேசன் பேசும் போது, “என் மீதும் எனது கதை மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் சுதன் சார், சிவகார்த்திகேயன் சார், ராதிகா மேடம் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படம் ரிலீசாவதற்கு முன்பே ‘சேயோன்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்த சிவா சாருக்கும் தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனத்திற்கும் நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து டெக்னீஷியன்கள், தயாரிப்பு நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சூரி பேசும் போது,
“நான் நடிக்கிற படங்களில் எல்லாத்தையும் திணிக்க முடியாது. ஆனால் தயாரிக்கும் படங்களில் இந்த சமூகத்திற்குத் தேவையான நல்ல விஷயங்கள் இருக்க வேண்டும் என தம்பி சிவகார்த்திகேயன் சொல்லிக் கொண்டே இருப்பார். அதைத் தான் செய்து கொண்டும் இருக்கிறார்” என்றார்.
”இந்த விழாவுக்கு சிவகார்த்திகேயன் என்னைக் கூப்பிடவில்லை. ஆனாலும் ராதிகாவுக்காக வந்தேன்” என்றார் ஸ்ரீப்ரியா.
ராதிகா பேசும் போது,
“இந்த கிழவி மேக்கப் போடுவதற்கு கமல் சார் தான் இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தைத் தயாரித்த தம்பி சிவகார்த்திகேயனுக்கும் அற்புதமான படத்தை எடுத்துள்ள டைரக்டர் தம்பி சிவகுமார் முருகேசனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். தலைவர் கலைஞர் எனக்குக் கொடுத்த ‘கலையரசி’ பட்டத்தைத் தான் இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலும் போஸ்டரிலும் போடச்சொன்னேன். அதான் எனக்குப் பெருமை” என்றார்.
சிவகார்த்திகேயன் பேசும் போது,
“நல்ல நிலைக்கு நான் வந்த பிறகு நண்பர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதற்குக் காரணம் எனது நெருங்கிய நண்பன் அருண்ராஜா காமராஜ் தான். எனக்கு பேரும் புகழும் கொடுத்த சினிமாவுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன் தான் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
நான் யாருக்கும் போட்டி இல்லை, யாரையும் தாண்டி வரும் நோக்கமுமில்லை. ஆனால் என் மீது ஒரு கும்பல் தொடர்ந்து கல் எறிந்து கொண்டே இருக்கு. அதைப் பற்றி எனக்கு கொஞ்சமும் கவலையில்லை. மக்களின் ஆதரவை மட்டும் நம்பி எனது பயணத்தைத் தொடர்கிறேன்” என சில கூலிப்படை யூடியூபர்களை போட்டுத் தாக்கினார்.
— ஆண்டவர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.