தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?
திருச்சிராப்பள்ளி டிவிஷனில் தஞ்சாவூர் ரயில் நிலையம் என்பது மிகப்பெரிய ரயில் நிலையம் ஆகும். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தினமும் 40-க்கு மேற்பட்ட ரயில்கள் வருவதும் போவதுமாக உள்ளது. இச்சூழலில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பின்புறமும் முன்புறமும் வாகனம் நிறுத்தும் இடங்கள் ரயில்வே நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரையின்றி வெயில், மழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் புல், பூண்டுகள் மண்டி கிடப்பதால் வாகனங்களை வைக்கும்போதும், எடுக்கும் போதும் மிகவும் பய உணர்வுடனே இருப்பதாக வாகனம் வைப்பவர்கள் மிகவும் வேதனையடைகின்றனர்.
நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனம் வைப்பதும், எடுப்பதுமாக இருக்கும் நிலையில், வாகன நிறுத்துமிடத்தின் தரைப்பகுதி மண் தரையாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்தை சிமெண்ட் தரை அமைக்கக்கோரியும் மழை, வெயிலிலிருந்து வாகனங்களை பாதுகாக்க மேற்கூரை அமைக்க வலியுறுத்தியும் காவிரி டெல்டா ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரயில்வே நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
— தஞ்சை க.நடராசன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.