மாணவி ஸ்ரீமதி மரணம்..நள்ளிரவில் நடந்தது என்ன!

0

மாணவி ஸ்ரீமதி மரணம்..நள்ளிரவில் நடந்தது என்ன!

கனியமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா, தற்கொலையா என்ற விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சில ஊடகங்களும், பிரமுகர்களும் இது கொலைதான் என்று வாதிட்டு வருகிறார்கள்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இந்த விவகாரம் குறித்து இன்னமும் குழப்பமே நிலவிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிற ஒவ்வொரு பெற்றோருக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி வெளியாகும் செய்திகள் பயத்தையும் பதற்றத் தையும் உண்டு பண்ணிக் கொண்டே இருக்கின்றன.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்நிலையில் மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகை புலன் விசாரணையில் இறங்கியது, அதில் கிடைத்துள்ள உண்மையும், சிபிசிஐடி போலீஸார் மற்றும் சேலம் டிஐஜி தலைமையில் ஸ்பெஷல் டீம் போலீஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த உண்மைகளையும் வெளியிட்டுள்ளது. அவற்றை அங்குசம் செய்தி வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மேல்நிலைப் பள்ளியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்திலேயே இருக்கும் ஹாஸ்டலில் தங்கியிருந்தார் ஸ்ரீமதி. கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு பள்ளி வளாகத்துக்குள் வழக்கமான முறையில் ஊழியர்கள் சுற்றி வர, அப்போதுதான் ஒரு மாணவி வளாகத்துக்குள்ளேயே சடலமாக விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவி ஸ்ரீமதிதான். சடலமாகக் கிடந்த மாணவி ஸ்ரீமதி உடலைக் கண்ட பெண் ஊழியர்கள் மற்றும் விடுதி மாணவிகள் பதறிவிட்டார்கள்.


அந்த அதிகாலை நேரத்தில் ஸ்ரீமதிக்கு என்னாச்சோ ஏதாச்சோ என அந்த மாணவி யைத் தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஓடுகிறார்கள். அதிகாலையில் மாணவிகளும் ஊழியர்களும் பதறியபடி ஓடும் காட்சிகள் பள்ளி வளாகத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. அந்த அதிர்ச்சியான பிரத்யேக காட்சிகள் மின்னம்பலத்துக்குக் கிடைத்துள்ளன.

ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தாயார் செல்வி வீட்டில் இருந்துவருகிறார். ஸ்ரீமதி, கனியாமூர் சக்தி பள்ளிக்கு வீட்டில் இருந்து அன்றாடம் பள்ளிப் பேருந்தில்தான் சென்று வந்தார். பனிரெண்டாம் வகுப்புக்கு சென்றபோது தன் மகள் ஸ்ரீமதியை தாயார் செல்வி ஏதோ காரணத்தினால் கண்டிக் கிறார். என்ன நினைத்தாரோ. ‘நீ ஒழுங்கா ஹாஸ்டல்ல தங்கிப் படி. இல்லேன்னா பக்கத்துலயே இருக்குற வேற ஸ்கூல்ல போய் படி’ என்று கண்டிக்கிறார் தாய்.

ஆனால் இதற்கு ஸ்ரீமதி ஒப்புக் கொள்ள வில்லை. ‘நான் ஸ்கூல் பஸ்லதான் போவேன். சக்தி ஸ்கூலுக்குதான் போவேன்’ என்று அடம்பிடித்திருக்கிறார் ஸ்ரீமதி. இந்த விவகாரத்தில் ஸ்ரீமதிக்கும், அவரது அம்மாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது,

ஒருகட்டத்தில் ஸ்ரீமதியின் அம்மா ஒரு முடிவெடுக்கிறார். கடந்த ஜூன் மாதம் சக்தி பள்ளியில் படித்த, ஸ்ரீமதியின் டிசியை கேட்டு வாங்கி தனது ஊர் அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார் அவரது அம்மா. ஸ்ரீமதியோ அந்த பள்ளிக்கு போகமறுக்கிறார். குழந்தையின் படிப்பு ஒரு வருடம் வீணாய் போய்விடக் கூடாதே இந்த வருடம் பிளஸ்டூ ஆச்சே என்ற பதைபதைப்பில் வேறு வழியில்லாமல் மீண்டும் சக்தி மேல் நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டு விடுதியில் கட்டாயப்படுத்தித் தங்க வைக்கிறார் தாயார் செல்வி. விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் அவர்களின் பெற்றோருடன் உரையாட ஹாஸ்டல் நிர்வாகமே செல் போன் தரும். ஹாஸ்டல் வார்டனின் கட்டுப்பாட்டில் மாணவிகள் தங்கள் வீடு களுக்கு பேசுவதற்காகவே செல்போன்கள் இருக்கும். ஏற்கனவே மாணவி களின் பெற்றோருடைய எண்கள் ஹாஸ்டல் வார்டனிடம் ரெக்கார்டில் இருக்கும்.

அந்த எண்களுக்குதான் மாணவிகள் போன் செய்ய முடியும். அதுவும் ஒவ்வொரு மாணவிக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் பேசி முடித்துவிட வேண்டும். அந்த வகையில்தான் அனுமதிக்கப்பட்ட செல்போனிலிருந்து 11 ஆம் தேதி மாலை குறிப்பிட்ட நேரத்தில் தாயும் பிள்ளையும் உரையாடியுள்ளார்கள், அப்போது கூட ஸ்ரீமதி, ‘அம்மா எனக்கு ஹாஸ்டலே பிடிக்கலைம்மா நான் வீட்லேர்ந்தே படிக்கிறேம்மா. ப்ளீஸ்மா என்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்கம்மா’ என்று தன் அம்மாவிடம் கேட்டிருக்கிறார் ஸ்ரீமதி

கடிந்துகொண்ட ஆசிரியை முடிவெடுத்த ஸ்ரீமதி

ஸ்ரீமதியின் இந்த மனப்போக்கை அறிந்த அவரது ஆசிரியை ஜூலை 11, 12 தேதிகளில் ஸ்ரீமதியை அழைத்து ’உங்கம்மா உன் நல்லதுக்குதானம்மா இங்க சேர்த்துவிட்டிருக்காங்க. இந்த ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சா அடுத்த வருஷம் நல்ல காலேஜ்ல சேர்ந்துடலாம். உன் லைஃபே நல்லா இருக்கும். நல்லா படிம்மா’ என்று கூறியுள்ளார்.

குறிப்பாக ஜூலை 12 ஆம் தேதி, ஸ்ரீமதியை அழைத்த ஒரு டீச்சர், ‘உன்னை என் பொண் ணா நினைச்சு சொல்றேம்மா நல்லா படிம்மா. உங்க அம்மா எதுக்கு இங்க உன்னை சேர்த்து விட்டிருக்காங்கனு தெரியுமில்ல? நீ உன் பாய் பிரண்டோட பேசிக்கிட்டே இருக்கேனுதானே உன்னை இங்க கொண்டுவந்து விட்டிருக்காங்க. அப்புறமும் வீட்டுக்கு கூட்டிட்டு போ, வீட்டுக்குக் கூட்டிட்டு போனு உங்க அம்மாவை ஏன் நச்சரிக்கிற? அவனோட மறுபடி பேசறதுக்கும் பாக்கறதுக்கு ம்தானே இப்படி வீட்டுக்குப் போகணும்னு ஒத்தைக் கால்ல நிக்கிறே? இனிமேலாச்சும் ஒழுங்கா படி ’ என்று சொல்ல, ‘அப்படியல்லாம் இல்ல மேடம் இனிமே நல்லா படிக்கிறேன் மேடம்’ என்று கண் கலங்கியபடியே வெளியே வந்து வகுப்புக்குப் போனார் ஸ்ரீமதி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கொஞ்ச நேரத்தில் ஸ்ரீமதிக்கு டீச்சர் செய்த அட்வைஸ் மாணவிகளுக்கும் பரவியது. ’என்னடி பாய் ஃபிரண்டோட பேசிக்கிட்டே இருப்பியாமே. அதான் புடுச்சி ஹாஸ்டல்ல போட்டுட் டாங்களா?’ என்றெல்லாம் சக மாணவிகள் கேலியும் கிண்டலுமாய் கேட்க, ஸ்ரீமதிக்கு அவமானமாக போய்விட்டது. அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

ஜூலை 12 இரவு
ஜூலை 12 ஆம் தேதி இரவு டிபன் சாப்பிட்டு விட்டு சுமார் 8. 15 மணிக்கு இரண்டாவது மாடியில் உள்ள ஸ்டெடி ஹாலுக்கு சோகமாக சென்றார் ஸ்ரீமதி. அங்குள்ள பெஞ்ச்சில் உட்கார்ந்து உடனே சாய்ந்து படுக்கிறார். இரண்டு நிமிடத்தில் பின்னாடியே ஒரு மாணவி டிபன் சாப்பிட்டுவிட்டு வாட்டர் பாட்டிலைத் தலையில் வைத்துக்கொண்டு ஹாயாக ஸ்டெடி ஹாலுக்கு வருகிறார். மீண்டும் ஸ்டெடி ஹாலில் இருந்து மூன்றாவது மாடியில் உள்ள விடுதி அறைக்கு ஸ்ரீமதி உட்பட மாணவிகள் செல்லும் காட்சி இரவு 9.45 மணி வரையில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இரவு 10 மணிக்கு விடுதி லைட் ,வராண்டா லைட் அனைத்தும் வழக்கமாக ஆஃப் செய்து விடுவார்கள். மூன்றாவது மாடியில் உள்ள விடுதி யில் இரண்டடுக்குக் கட்டில்கள் உள்ளன. விடுதியில் மொத்தம் 70 மாணவிகள் தங்கியிருக்கிறார்கள். ஒரு ஹாலில் (வகுப்பறையைதான் விடுதியாக ஆல்டர் செய்துள்ளார்கள்) 24 பேர் வீதம் மாணவிகள் தங்கியிருக்கிறார்கள். இடது பக்கம் ஆறு கட்டில் வலது பக்கம் ஆறு கட்டில் என போடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டிலும் இரண்டு அடுக்கு கொண்டது.

அதில் தனது இரண்டாவது அடுக்குக் கட்டிலில் ஏறிப் படுத்துள்ளார் ஸ்ரீமதி. சக மாணவிகள் நன்கு உறங்கியதும் இரவு 10.30 மணியில் இருந்து 10.40 மணிக்குள் இரண்டாவது அடுக்குக் கட்டிலில் இருந்து தனக்கு கீழுள்ள கட்டிலில் உறங்கும் மாணவியை தொந்தரவு செய்யாமல் லாவகமாக இறங்கி, கதவைத் திறந்து வெளியில் வந்திருக்கிறார் ஸ்ரீமதி. பாத்ரூம் செல்வதென்றால் கட்டில்கள் இருக்கும் அறைக்கு வெளியேதான் வரவேண்டும் என்பதால், பாத் ரூம் செல்வது போலவே வெளியே வந்திருக்கிறார்.

அதிகாலையில் பார்த்த வாட்ச்மேன்!
ஜூலை 13ஆம் தேதி காலை சுமார் 5.00 மணியளவில் வாட்ச்மேன் பள்ளி வளாகத்தை சுற்றி வரும்போது ஒரு மாணவி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தபடியே வார்டனுக்கு தகவல் சொல்கிறார். உடனே வார்டன் உட்பட நான்கு பெண்கள் நைட்டி அணிந்தபடியே ஓடி வருகிறார்கள். பதறியடித்துக் கொண்டு, அந்த மாணவி யார் என்று முகத்தைப் பார்க்கிறார்கள். உடனடியாக ஸ்ரீமதி என்று அடையாளம் தெரிய, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நான்கு பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அப்போது மணி ஜூலை 13 அதிகாலை 5.15. அதுவும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் ஏன்?
ஸ்ரீமதி உடம்பில் கை, கால், முதுகு மற்றும் தலைப் பகுதியில் சிராய்ப்பும் எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்ரீமதி தங்கியிருக்கும் மூன்றாவது மாடியின் கீழ்ப் பகுதியில் முதல் மாடி உயரத்திற்கு மரங்கள் வளர்ந்துள்ளன. மேலேயிருந்து விழுந்தபோது அந்த மரங்களின் கிளைகளில் ஸ்ரீமதி உரசி அதன் பின் கீழே விழுந்துள்ளதால் மரக் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன. அதைப் பரிசோதிக்கும் வகையில் ஸ்ரீமதி உயரம் மற்றும் அவரது வெயிட் அளவுக்கு ஒரு பொம்மையைச் செய்து மாடியில் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து தள்ளிவிட்டபோது, அந்த உருவ பொம்மையும் மரங்களில் உரசி விழுவதை உணர்ந்துள்ளனர் விசாரணை அதிகாரிகள்.
கீழே விழுந்த ஸ்ரீமதிக்கு கை, கால் மற்றும் மார்பு, விலா எலும்பு முறிவும், தலையில் பலத்த அடியும் உடம்பில் சிராய்ப்பும் ஏற்பட்டுள் ளது. உடல்கூறாய்வில் பாலியல் வல்லுறவு இல்லை என்றும், கால், கை, மற்றும் மார்பு, விலா எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது, தலையில் அடிபட்டுள்
ளது, உடம்பில் சில இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இறப்பதற்கு முன்பு அடிபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள் மருத்துவர்கள். உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாலும் நீண்ட நேரம் அப்படியே கிடந்ததால் உடம்பிலே சில பகுதிகளில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

டாக்டர் சொன்னது
இதைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி செய்யும் டாக்டர் ஒருவரிடம் பேசினோம்.
”அந்த மாணவி மேலேயிருந்து விழுந்தபோது உடலின் சில பகுதிகளில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது, சுமார் 10.30 மணிக்கு விழுந்தவர் நிச்சயம் நான்கு மணி முதல் ஐந்து மணி நேரம் வரையில் உயிரோடுதான் இருந்திருப்பார். அதன் பிறகுதான் இறந்திருப்பார். தலையில் பலமாக அடிப்பட்டதால் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளதால் சத்தம் போட்டு யாரையும் அழைக்க முடியவில்லை. உயிரோடு அடிபடும்போது இரத்தம் அதிகமாக வெளியேறும். இறந்தபிறகு அடிபட்டால் இரத்தம் உறைந்துவிடும். இதையெல்லாம் பிரேதப் பரிசோதனை செய்யும் டாக்டரிடம் நேரடியாகக் கேட்டால் விளக்கமாகச் சொல்வார்” என்றார்.

ஸ்ரீமதி எழுதிய கடிதம்!
ஸ்ரீமதி எழுதிய கடிதம் பற்றிய விவரங்களை விசாரித்தோம். ‘நான் நல்லாதான் படிப்பேன். கெமிஸ்ட்ரி படிக்க வே வரலை. கெமிஸ்ட்ரி டீச்சர் என்னை ரொம்ப பேசுறாங்க’ என 16 லைன் எழுதுகிறார். அப்போது அந்த பேனாவில் ரீஃபில் முடிந்துவிட்டது. ஸ்டெடி ஹாலில் அருகே மற்ற மாணவிகளின் பேனாக்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒரு பேனாவை எடுத்து லெட்டரைத் தொடர்ந்து எழுதுகிறார். (அதுவும் ரெட் கலர் ரீஃபில்தான்) அந்த இரண்டாவது பேனாவால்தான், ’ஸ்கூல் பீஸ் திரும்பி கொடுத்துவிடுங்கள் என்றும், ஸாரி அப்பா, ஸாரி அம்மா, ஸாரி சந்தோஷ் மற்றும் துர்கா, மேகலா, நசிரா, நிவேதா, வேல்விழி போன்ற தோழிகளுக்கு ஸாரி சொல்லி முடிக்கிறார். காலியான அந்த ரீபிள் அங்கே கிடந்துள்ளதையும் பத்திரமாக எடுத்து வைத்துள்ளோம்” என்கிறார்கள் போலீஸார்.

பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு!
”பள்ளி விடுதியில் வார்டன் இருந்தாலும் இரவு பாதுகாவலர் அவசியம் இருந்திருக்க வேண்டும் அல்லது விடுதி பகுதி என்பதால் ஒவ்வொரு ஃப்ளோரிலும் மாணவிகள் வெளியே எட்டிப் பார்க்காத வகையிலும், தவறியோ திட்டமிட்டோ குதிக்க முடியாத அளவுக்கும் தடுப்புகள் அமைத் திருக்க வேண்டும். இதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும். பள்ளியிலும், விடுதியிலும் இதுபோன்ற கட்டிடப் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கிறதா என்பதை அரசுத் துறைகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் பள்ளி நிர்வாகமும் கட்டிடத்தில் பாதுகாப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தவில்லை. அதை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளும் ஆராயவில்லை.

ஒரு மாணவி மாடியில் இருந்து இரவு கீழே விழுகிறார் என்றால் இப்படி ஒரு சம்பவத்தை தடுக்கும் வகையிலோ அல்லது விழுந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வகையிலோ இரவு முழுதும் ஒரு மணி நேரத்துக்கு அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வளாகத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீமதி விழுந்ததும் சத்தம் கேட்டு ஓடோடி போய் பார்த்திருந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. ஸ்ரீமதி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கீழே குதித்திருந்தாலும் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் ஓர் உயிரை காப்பாற்றியிருக்கலாம். இவ்வளவு சர்ச்சைகளைத் தடுத்திருக்கலாம். இதற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவும் அலட்சியம்தான் முக்கிய காரணம்” என்கிறார் சிபிசிஐடி போலீஸார்.

நாம் விசாரித்த அளவில் ஸ்ரீமதி மரணம் என்பது தற்கொலைதான் என உறுதியாகத் தெரியவருகிறது. இரவே யாராவது கவனித்திருந்தால் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று அந்த பிஞ்சை காப்பாற்றியிருக்கலாம் என்ற தகவல் மனதை கனக்க வைக்கிறது. ஆனால் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும், இரவுப் பாதுகாப்புப் பணியில் ஏற்பட்ட தொய்வும்தான் ஸ்ரீமதியின் உயிரைப் பறித்திருக்கின்றன.

கல்வியின் மூலம் எதிர்கால வாழ்வை வளப்படுத்துவதற்காகத்தான் பள்ளிக் கூடங்கள் செயல்பட வேண்டும். ஆனால் மாணவ மாணவிகளின் தனிப்பட்ட பலவீனங்களையோ, விருப்பங்களையோ குறிவைத்து தாக்கி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதா பள்ளிகளின் வேலை? இந்த விவகாரத்தில் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதே எதிர்கால ஸ்ரீமதிகளுக்கு நாம் செய்யும் நீதியாகும்.

நன்றி : -வணங்காமுடி, மின்னம்பலம்.காம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.