ஆவணப்படம் திரையிடல் தடைக்குக் கண்டனம் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை !
ஆவணப்படம் திரையிடல் தடைக்குக் கண்டனம் – நல்ல கலைப்படைப்புகளுக்குப் பாதுகாப்பு – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை.
“அறக் கலகம்” தயாரித்துள்ள “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” எனும் ஆவணப் படத்தைத் திரையிடவும், படத்தைப் பார்த்த நண்பர்கள் கலந்துரையாடவும் புதுக்கோட்டை ‘வீதி’ கலை இலக்கியக் களத்தினர், ஓர் அரங்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கடந்த 12ஆண்டுகளாக மாதக் கூட்டம் – கதை, கவிதை வாசித்தல், புத்தக அறிமுகம், ஆவணப்படம் திரையிடுதல் என நடத்திவரும் நிலையில் இதன் 144ஆவது நிகழ்வாக புதுக்கோட்டை ஊடகரும், யூ-ட்யூபரும், எழுத்தாளருமான பாரதி தம்பியின் பொறுப்பில் ‘திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்தைத் திரையிட ஏற்பாடாகி இருந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்நாள் மாலை புதுக்கோட்டை காவல் துறையினர் நிகழ்வு இடத்தைத் தந்து உதவி வரும் தனியாரை அணுகி, படத்தைத் திரையிட்டால் பல இடையூறுகள் வரும் என்று சொல்லவே, இடத்தையும் மாற்றி அறிவியல் இயக்க அரங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அங்கு நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு வந்த காவல் துறையினர் ‘படத்தைத் திரையிட வேண்டாம்’ என்றனர். கடந்த தேர்தலுக்கு முன்னரே சென்னையில் வெளியிடப்பட்ட இப்படம் இப்போதும் யூட்யூபில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். இது புதிய வெளியீடும் அல்ல. அரங்கத்தில் அதிகபட்சம் 20-30பேர்தான் பார்ப்போம் என்று சொல்லியும் ‘மேலிட உத்தரவு’ என்று திரையிடலைத் தடுத்து விட்டனர்.
காவல்துறை தடுத்ததையடுத்து, நிகழ்வுக்கு வந்திருந்தோர் அனைவரும் திரையிடுவதைத் தவிர்த்து, தத்தம் செல்பேசியில் யூட்யூப் வழியாகப் பார்த்தவர்கள் அதுபற்றிய கலந்துரையாடலை நடத்தினர். இந்நிகழ்வில் ஆவணப்பட இயக்குநர்கள் தவம், தமிழ்தாசன், தமுஎகச, வீதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். படம் பற்றிய உரையாடலும் நடந்தது. இப்படம் மக்கள் ஒற்றுமையைக் காத்து கலைஇலக்கியக் கடமையைச் சிறப்பாகச் செய்திருப்பது குறித்து அதன் இயக்குநர்களைப் பாராட்டியதோடு, அங்கேயே வாசூல் செய்த தொகை ரூ.6,500 நன்கொடையாக வழங்கப்பட்டது.
“மக்கள் ஒற்றுமையைக் காக்கும் காவல் துறையின் பணியைத்தான் இந்த ஆவணப்படமும் கலை வடிவில் செய்கிறது. இதை அரங்க நிகழ்வாக திரையிடுவதில் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை” என்று தமுஎகச மாநிலக் குழு கருதுகிறது. ஆனால் புதுக்கோட்டையின் காவல்துறை தன்னிச்சையாகச் செயல்பட்டு தடை செய்து விட்டது.
மக்கள் ஒற்றுமை, மத ஒற்றுமைக்காகப் பாடுபட வேண்டிய காவல் துறை இப்படித் தன்னிச்சையாகச் செயல்பட்டு கலைப் படைப்பைத் தடுத்து நிறுத்துவதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே இந்த அரசு பொறுப்பேற்றவுடன் சமூகக்கருத்துக்களை முன்வைக்கும் சில சமூக ஊடக கணக்குகளை முடக்கியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கைகளை அரசு தொடரக்கூடாது என்றும் வலியிறுத்துகிறோம்.
அதோடு, இதுபோன்ற மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் கலைப் படைப்புகளைத் தமிழ்நாடு முழுவதும், அரங்குகளில் பொது இடங்களில் திரையிட்டு மக்களிடம் விழிப்புணர்வை வளர்க்க, தமிழ்நாடு அரசும், குறிப்பாக காவல் துறையும் அதற்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் திரைத்துறையிலிருந்து வந்தவர். அம்பேத்கர் பெரியாரைத் தமது வழிகாட்டியாகக் கூறிக்கொள்ளும் அவரும், அவரது அரசும், இது போன்ற கலைப்படைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது
மதுக்கூர் இராமலிங்கம், தலைவர்
களப்பிரன், பொதுச்செயலாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.