பேராசிாியரான திருநங்கை ! மாற்றத்திற்கான விதையூன்றியது லயோலா கல்லூரி !
இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, கிறிஸ்தவத்தின் பெயரால், இயேசு சபையினரால் 1925 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட லயோலா கல்லூரியின் சாதனை, சரித்திர பெருமை வாய்ந்ததவை.
மனிதர்களை பெரும் உயரங்களுக்கு கொண்டு செல்லும் பேராற்றல் வாய்ந்தது கல்வி ஒன்று தான். அந்தப் பேராற்றலை இந்த சமூகத்திற்கு கொடையாக அளித்துக் கொண்டிருக்கிறது லயோலா கல்லூரி.
ஒரு கல்வியாண்டில் மட்டும் 10,000 மாணாக்கர்களுக்கு தொய்வின்றி கற்பித்தல் பணியை இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது லயோலா கல்லூரி.
அதன் பலனாக லட்சக்கணக்கான கல்வியாளர்களையும், அறிவியலாளர்களையும், அரசியல் பிரமுகர்களையும், பல்துறை சாதனையாளர்களையும் உருவாக்கி இருக்கிறது லயோலா.
அந்த வகையில், லயோலா கல்லூரி சதுரங்க விளையாட்டுக்கு வழங்கிய வரம் தான் சர்வதேச சதுரங்க போட்டி சாதனையாளர் விஸ்வநாதன் ஆனந்த்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜோசப், தற்போதைய நீதிபதி சுந்தரேஷ், மு. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாட்டின் தற்போதைய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், ஏசியா நெட் நிறுவனர் சசிகுமார், தமிழக வெற்றிக் கழக தலைவரும், பிரபல நடிகருமான விஜய், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், கல்வியாளர்கள் மால்கம் ஆதிசேசய்யா, ஜி.விஸ்வநாதன் போன்றோர் எல்லாம் கூட லயோலா கல்லூரி நமக்கு அளித்த கொடைகள் தான்.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தைப் பரிட்சாத்த முறையில் நடைமுறைப்படுத்தியதும் சென்னை லயோலா கல்லூரி தான்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தல் கணிப்புகளை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது லயோலா கல்லூரி.
அதேபோல சமூகத்தில் நிலவும் சூழலை அடிப்படையாகக் கொண்டு, கருத்துக்கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியையும் நீண்ட காலம் செய்து வருகிறது லயோலா கல்லூரி.
அப்படி பல சிறப்புகளுக்குத் தகுதி உள்ள சென்னை லயோலா கல்லூரி, ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை டாக்டர்.என். ஜென்சி என்பவரைக் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்து தனது நூற்றாண்டுப் பெருமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நூற்றாண்டு காலமாகச் சமூகத்தில் பெருமைமிகு மாற்றங்கள் நிகழக் காரணமாகத் திகழும் லயோலா கல்லூரி, சகோதரி ஜென்சியை உதவி பேராசிரியராக நியமனம் செய்து தனது பெருமை மிகு கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதிப்பித்துக் கொண்டுள்ளது.
“லயோலா: மாற்றங்களுக்கான திறவுகோல்” என்கின்ற மக்களின் புரிதல் மேலும் வலுப்பெற வேண்டும் என்று விரும்பும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், தனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறது.