ஆற்றுமண் கடத்தும் ஆயுதப்படை போலீசு ! மாமூல் சர்ச்சையில் தாசில்தார் ! வெளியான வீடியோ !

0

ஆற்றுமண் கடத்திய புகாரில் ஆயுதப்படை போலீசு! மாமூல் சர்ச்சையில் தாசில்தார்! கிருஷ்ணகிரி களேபரம் !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மணல் திருட்டை தட்டிக்கேட்ட தாசில்தாரை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டு ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையடுத்த பொடார் என்ற கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொது ஏரியிலிருந்து உரிய அனுமதியின்றி ஆற்றுமண்ணை அள்ளிக்கொண்டு சென்ற டிராக்டரை ஊத்தங்கரை தாசில்தார் திருமலைவாசன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து விசாரித்துள்ளனர்.

தாசில்தார் திருமலைவாசன்
தாசில்தார் திருமலைவாசன்

”போனவாரம் 5000 வாங்கிகிட்டு வண்டிய விட்டீங்களே, இப்போ மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள்?” என தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார், அங்கிருந்த பிரபாகரன் என்பவர். இதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டரை வைத்துக்கொண்டு அதே ஊரைச் சேர்ந்த இன்னும் சிலருடன் சேர்ந்துகொண்டு மண் அள்ளுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவ்வாறு அனுமதியின்றி பொது இடத்திலிருந்து எடுக்கப்படும் மண்ணை அருகிலுள்ள சிப்காட்டுக்கு சப்ளை செய்து நல்ல காசு பார்க்கிறார்கள் என்கிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

தற்போது, சர்ச்சையில் சிக்கியிருக்கும், பிரபாகரன் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விசயம். போலீசு என்ற செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் மணல் திருட்டை வாடிக்கையாக செய்துவருவதாகவும்; போலீசில் புகார் கொடுத்தாலும் அதிகாரிகளை சரிகட்டி ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்.

பிரபாகரன் ஆயுதப்படை போலீஸ்
பிரபாகரன் ஆயுதப்படை போலீஸ்

குறிப்பாக, கோயில் நிலத்திலிருந்து 1000 லோடு வரை மண்ணை திருடிவிட்டார்கள் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு கோயிலின் செயல் அலுவலரே கல்லாவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இன்னும் வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை. சி.எஸ்.ஆர். மட்டுமே போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

மற்றொரு தரப்போ, ”திருவண்ணாமலை நெடுஞ்சாலை பணிக்காக கலெக்டரே அனுமதி கொடுத்திட்டாங்கனு சொல்லி காண்ட்ராக்ட் காரங்க வரைமுறையில்லாம பொடார் ஏரியிலிருந்து மண்ணை அள்ளிச் செல்கிறார்கள். அதே ஊர்க்காரன் அவன் தேவைக்கு நாலு லோடு அடிச்சா அது தப்பா”னு எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

4 bismi svs

”போலீசாகவும் இருந்து கொண்டு, சொந்தமாக டிராக்டரையும் வைத்துக்கொண்டு மண் அள்ளுவதை பிசினஸாக பார்த்து வருவதுதான் பிரச்சினை. அதேசமயம் தாசில்தாரும் சரியா கடமையை செஞ்சிட்டாருனு சொல்லிட முடியாது. அவருக்கு மாமூல் சரியாகப் போய்ச் சேரலைனுதான் வண்டியை மடக்கியிருக்கிறார். அப்புறம் தொழில் போட்டியில் சிலர் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அதுதான் இந்த பிரச்சினை இப்போ வெளிய வந்திருக்கிறது” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர்.

பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று தாசில்தார் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில், ஆயுதப்படை போலீசு பிரபாகரன் உள்ளிட்டு ஜெகநாதன், கோவிந்தசாமி, சம்பத், அருள் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.பதிலுக்கு, மணல் அள்ளுவதை கண்டுகொள்ளாமல் இருக்க தாசில்தார் மாமூல் கேட்டதாகவும் தங்களை தாக்கிவிட்டதாகவும்கூறி மேற்படி ஐந்து நபர்கள் தரப்பில் மருத்துவமனையில் அட்மிட்டாகி எதிர்ப்புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள்.

வெளியான வீடியோ லிங்

https://www.youtube.com/watch?v=x8buSfSETdM

தற்போது கைதாகியிருக்கும் இதே நபர்கள் மீது மூன்று மாதங்களுக்கு முன்பு கோயில் இ.ஓ.வே. புகார் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார்களே, என்ற கேள்வியோடு கல்லாவி இன்ஸ்பெக்டர் தமிழரசியிடம் பேசினோம். விவரங்களை கேட்டுக்கொண்டவர் “விசாரித்துவிட்டு பிறகு பேசுகிறேன். தற்போது சாலைமறியல் போராட்டத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.” என்றார்.

டி.எஸ்.பி. கோ.பார்த்திபன்
டி.எஸ்.பி. கோ.பார்த்திபன்

இதே கேள்வியோடு, ஊத்தங்கரை டி.எஸ்.பி. கோ.பார்த்திபன் அவர்களிடமும் பேசினோம். அவரும் விசயத்தை கேட்டுக்கொண்டவர், “விசாரித்துவிட்டு, பிறகு பேசுகிறேன்.” என்பதாக கூறினார். ஊத்தங்கரை தாசில்தார் திருமலைவாசனிடம் பேசினோம். ”விசாரித்துவிட்டு பேசுகிறேன். அவசரமாக மீட்டிங் ஒன்றுக்கு செல்கிறேன். பிறகு பேசுகிறேன்.” என்றார்.

வெளியான வீடியோ லிங்.. 

– விசாகன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.