பள்ளி மாணவர்கள் படையெடுப்பில் திருச்சி புத்தகத்திருவிழா 2026 !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில், பிப்-14 முதல் பிப்-22 வரையில் திருச்சி புத்தகத் திருவிழா 2026 நடைபெற்று வருகிறது. வழக்கமாக, வார நாட்களில் மாலை நேரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த புத்தகத் திருவிழாக்கள் இப்போதெல்லாம், பகல் முழுவதும் நடைபெறும் வண்ணம் மாற்றியமைத்திருக்கிறார்கள். இந்த மாற்றம், பள்ளி மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

திருச்சி புத்தகக்காட்சி தினமும் தொடங்கும் வேளையில், முதல் வாசகர்களாய் உள்ளே நுழைவது ஏதேனும் ஒரு அரசுப்பள்ளி மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவரவர்களின் வாய்ப்பு – வசதிக்கு ஏற்ப, தனியார் வாகனத்திலோ அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்தோ பள்ளி பிள்ளைகைள அழைத்து வருகிறார்கள். புத்தக்காட்சியின் நுழைவாயிலிலேயே, பள்ளி ஆசிரியர் ஒருவர் பதிவேட்டுடன் அமர்ந்திருக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

திருச்சி புத்தகத்திருவிழாஎந்த ஒன்றியத்திலிருந்து? எந்த பள்ளியிலிருந்து? எத்தனை மாணவர்கள்? எப்போது உள்ளே நுழைந்தார்கள்? எப்போது வெளியே வந்தார்கள்? எவ்வளவு ரூபாய்க்கு நூல்களை வாங்கினார்கள்? என்ற விவரங்களையும் அழைத்து வந்த ஆசிரியர் பற்றிய விவரங்களையும் பதிவு செய்து கொள்கிறார்கள்.

நாம் அவர்களிடம் விசாரித்தோம். “திருவெறும்பூர் ஒன்றியத்திலிருந்து வந்திருக்கிறோம். எங்கள் தொகுதியின் அமைச்சர் இப்படி ஒரு விசயத்தை முன்னெடுத்திருக்கிறார். அதற்கு உதவியாக நாங்களும் செய்யனும்ல. அதுக்காகத்தான் இதனை செய்து வருகிறோம்.” என்றார்கள்.

திருச்சி புத்தகத்திருவிழாவருகைதரும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களை முதல் வேளையாக, புத்தகக்காட்சியின் முகப்பு முன்பாக அவர்களை நிறுத்தி வந்ததற்கு அத்தாட்சியாக ஒரு குழுப்படத்தை தவறாமல் எடுத்துக் கொள்கிறார்கள்.

“ஒரு நாளைக்கு குறைஞ்சது முப்பது நாப்பது பள்ளிகளில் இருந்து வருகிறார்கள். நேற்று (பிப்-18) மட்டும் சுமார் 1200 மாணவர்கள் வந்திருக்கிறார்கள்.” என்றார் பதிவுகளை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து சுற்றறிக்கை எதுவும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. திருச்சியில் இப்படி ஒரு புத்தகக்காட்சி நடைபெறுகிறது என்பதை ஒரு அறிவிப்பாக அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி, கட்டாயம் எதுவுமில்லை. மாணவர்களை அழைத்துவரவில்லை என்றால், தண்டனை என்றெல்லாம் கிடையாது. அவரவர்கள் விருப்பத்திலிருந்துதான் வந்து செல்கிறார்கள்.” என்றார், இன்னொரு ஆசிரியர்.

அதிலும் குறிப்பாக, பிப்-19 அன்று கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. தமிழை எழுத்துக்கூட்டி கூட படிக்க பழகியிருக்காத பிளே ஸ்கூல் மாணவர்களையும் அழைத்து வந்திருந்தார்கள். வயலூர் ரோடு, செங்கதிர்ச்சோலை வாசன் கார்டன் பகுதியில் செயல்படும் ”சிறகுகள் பிளே ஸ்கூல்” பள்ளி மழலைகள் அவர்கள். ”செல்ஃபோனை பயன்படுத்தக்கூடாது என்பதை இப்போதிருந்தே கண்டிப்போடு பிள்ளைகளுக்கு சொல்லிவருகிறோம். அவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையட்டுமே என்றுதான் அழைத்து வந்தோம்” என்கிறார், பிள்ளைகளை பொறுப்போடு அழைத்துவந்த பள்ளியின் தாளாளர் தேவமனோகரி.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி புத்தகத்திருவிழாநாமும், அரங்கை வலம் வந்தோம். மாணவர்கள் ஒரே குழுவாகவும், நண்பர்களோடு சேர்ந்து தனித்தனி குழுவாகவும் பிரிந்து புத்தக்காட்சி சாலையை வலம் வந்தார்கள். அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காக மட்டுமே வந்ததாகவும் தெரியவில்லை. ஆர்வத்தோடு, புத்தகங்களை புரட்டிப்பார்க்கவும் செய்தார்கள். ஆர்வமிகுதியில் புத்தக கடைக்காரர்களிடம் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தெனாலிராமன் சிறுகதைகள், திருக்குறள் புத்தகம், விளையாட்டு பயிற்சி புத்தகங்கள் என அவரவர்களுக்கு பிடித்தமான சிறு நூல்களை, அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி வாங்கவும் செய்தார்கள். பத்து ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலும், அதற்கு மறக்காமல் பில் வேண்டும் என்று கேட்டு வாங்கவும் தவறவில்லை. அரசுப்பள்ளி மாணவர்கள் அவ்வளவு விவரமானவர்களாகவே வலம் வந்தார்கள். பத்து பிள்ளைகளில் ஒரு பிள்ளைகளிடத்தில் ஏதேனும் ஒரு புத்தகத்தை பார்க்கும்படி இருந்தது அவ்வளவு மகிழ்வை தந்தது.

ஆட்டம், பாட்டம், குதூகலம், செல்ல சேட்டைகளுக்கும் பஞ்சமில்லை. இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்த மாணவர்களை, சில ஸ்டால் பணியாளர்கள் அதட்டிக்கொண்டும் இருந்தார்கள். பள்ளிக்கூடத்து பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று ரசித்துக்கொண்டே, அவர்களுடன் பேசினோம்.

திருச்சி புத்தகத்திருவிழா“முதல் நாளே ஸ்கூல்ல சொன்னாங்க. வீட்ல காசு வாங்கிட்டு வந்துட்டோம். ஜாலியாத்தான் இருக்கு.” என்றான், அரசுப்பள்ளி மாணவன் ஒருவன். காண்வெண்ட் பள்ளி பிள்ளைகளும் வந்திருந்தார்கள். அவர்கள், ஆங்கில நூல்கள் வெளியிடும் புத்தகக்கடையை தேடி சென்றார்கள். சுற்றி வந்தார்கள். பாக்கெட் சைஸ் ஆங்கில நாவல்களை தேர்வு செய்தார்கள்.

“விளையாட்டு பொம்மைங்ககூட விப்பாங்க. எல்லாம் அத வாங்கிடாத. நூறு, இருநூறு சொல்வாங்க. சின்ன சின்னதா புக்கு வாங்குங்க. ஒருத்தன் பின்னாடி ஒருத்தன் வரிசையா போங்க”னு ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார், ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் ஒருவர்.

திருச்சி புத்தகத்திருவிழா“சில பேரு சில விதமா சொல்லத்தான் செய்வாங்க. பசங்கள கட்டாயப்படுத்தி கூட்டி வர்றாங்க, அப்படின்னு. பசங்கள பொருத்தவரைக்கும் இது ஒரு அனுபவமாக இருக்கும். பின்னாடி அவனுக்கு பயனா இருக்கும். அதுக்குத்தான் நாங்க, இதை செய்திட்டிருக்கோம்” என்றார், பதிவுகளை மேற்கொண்டிருந்த அந்த ஆசிரியர்.

உண்மைதான். பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற புத்தகத்திருவிழாக்கள் நல்லதொரு கற்றல் அனுபவம்தான். மறுப்பதற்கில்லை. அடுத்தமுறையேனும், தேர்வு காலமாக இல்லாமல், தேர்வு கால நெருக்கடி இல்லாமல், மாணவர்கள் பேரார்வத்தோடு பங்கேற்பதை மாவட்ட நிர்வாகம் உத்தரவாதப்படுத்தினால், அந்த கற்றல் அனுபவத்தில் இன்னும் இனிமை கூடுமே!

–              அங்குசம் செய்திக்குழுவினர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.