சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதா, த.வெ.க.? உண்மை என்ன ?
தமிழக வெற்றிக் கழகம் தங்கள் வேட்பாளர் தேர்வில் சாதி மறுத்து தேர்ந்தெடுத்துள்ளதாக நண்பர்கள் சிலர் கூறியதைக்கேட்டு ஆச்சரியப் பட்டேன்.
ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர்களது வேட்பாளர் தேர்வைப் பார்த்தால், அவர்கள் அனைவருமே அத்தொகுதிகளின் எண்ணிக்கை மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் சாதிகளாக உள்ளனர் .
கன்னியாகுமரி – தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எஸ்.ஆர்.மாதவன் அவர்கள் அத்தொகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர், அதே சமூகத்தைச் சேர்ந்த திரு தளவாய் சுந்தரம் அங்கு வெற்றி பெற்றார்.
குளச்சல் – தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் அவர்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அத்தொகுதியில் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸின் திருமிகு தாரகை கத்பட் வெற்றி பெற்றார் .
நாகர்கோவில் – தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அத்தொகுதியில் அதே சமூகத்தைச் சேர்ந்த ஆஸ்டின் வெற்றி பெற்றார்.
பத்மநாபபுரம் – தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எஸ்.கிருஷ்ணகுமார் அவர்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர், அத்தொகுதியில் அதே சமூகத்தைச் சேர்ந்த சிபிஎம் கட்சியின் ஆர்.செல்லச்சாமி வெற்றி பெற்றார்.
கிள்ளியூர் – தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எஸ்.சபீன் அவர்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர், அத்தொகுதியில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் வெற்றி பெற்றார்.
விளவங்கோடு – தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மைக்கேல் குமார் அங்குள்ள பெரும்பான்மைச் சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர், அத்தொகுதியில் அதே சமூகத்தைச் சேர்ந்த பிரவீண் வெற்றி பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த வரை அங்கு நாடார், வேளாளர், மீனவர் என மூன்று சாதியினருமே ஒவ்வொரு தொகுதிகளில் பெரும்பான்மை சாதிகளே.
அங்கு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களும் அவர்களே. கன்னியாகுமரி மாவட்டத்தில் போதுமான அரசியல் பிரதிநிதுத்துவம் பெறாத, எண்ணிக்கையிலும் கல்வியிலும் உயர்ந்த, சாம்பவர், வள்ளுவர், பறையர் மற்றும் வாதிரியார் ஆகிய பட்டியல் சமூகத்தினரையோ, வணிகம் மற்றும் கல்வியில் சிறந்த சாலியர் சமூகத்தினரையோ தமிழக வெற்றிக் கழகத்தினர் வேட்பாளர்களாக தேர்வு செய்யவில்லை. அவ்வாறு தேர்ந்தெடுத்தால் அதைக் கொண்டாடியிருக்கலாம்.
இது தவிர எண்ணிக்கையிலும் வணிகத்திலும் கல்வியிலும் குறிப்பிடத்தக்க இஸ்லாமியர், கிருஷ்ணன் வகை, கடையர், சுண்ணாம்பு பரதவர் அல்லது தொண்டைமான் சமூகம் உள்ளிட்ட அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறாத சமூகங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளம் உண்டு.
இத்தேர்தலில் வாக்காளர்கள் சாதி பார்த்தார்கள் என கூறுவது கடினம். பெரும்பாலான வாக்காளர்களுக்கு தான் வாக்களித்த வேட்பாளரின் பெயர் கூட தெரிந்திருக்க ஞாயமில்லை.
ஆனால், திராவிடக் கட்சிகளின் சாதி சூத்திரத்தையே தமிழக வெற்றிக்கழகமும் கடை பிடித்திருந்தது.
தமிழக வெற்றிக்கழகம் சாதி பார்த்தே தன் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மேலூர் பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அங்குள்ள யாரைக் கேட்டாலும் அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகப்பெரிய காரணம் எனக் கூறுவர். பல பத்தாண்டுகள் உயிரைக்கொடுத்து விடுதலைச் சிறுத்தைகள் செய்த போராட்டங்களின் விளைவாக காங்கிரஸ் அங்கு வெற்றி பெற்றது. இது தவிர திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் மேலூர் வெற்றிக்கு காரணம்.
மறுபடியும் போட்டியிட்டால் விஸ்வநாதன் அங்கு வெல்வது கடினம். ஆனால், வேலி தாண்டிய வெள்ளாடாக மாறிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் அவர்களுக்கு தன் மேலூர் வெற்றிக்கான காரணம் குறித்தோ டாக்டர் அம்பேத்கர் மேலூர் குறித்து எழுதியிருந்தது குறித்தோ அறிதல் இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இருந்திருந்தால் கூட்டணி கட்சிகளுடன் குறைந்த பட்ச ஆலோசனையை கேட்டாவது தான் ஏற்கனவே எடுத்த முடிவை அறிவித்திருப்பார்.
வருங்காலத்தில் இதுபோன்ற பொய்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை எதிர் கொள்வது கடினமே!
(பின் குறிப்பு : சாதி வாரியான எம்எல்ஏக்களை கணக்கெடுப்பது என் விருப்பமல்ல ஆனால் பொய் அரசியலை அம்பலப்படுத்துவதே என் நோக்கம்.)
— தி.லஜபதி ராய்








Comments are closed, but trackbacks and pingbacks are open.