”அதிக லாபமில்லை, ஆனால் நஷ்டமில்லை” –’மார்கன்’ விழாவில் உண்மை சொன்ன விஜய் ஆண்டனி!
’விஜய் ஆண்டணி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ பேனரில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி, வரும் ஜூன் 27—ஆம் தேதி ரிலீசாகிறது ‘மார்கன்’ படம். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதுடன் இசையும் அமைக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா, சமுத்திரக்கனி, வினோத் சாகர், ரீல்ஸ் ஃபேமஸ் அர்ச்சனா, கனிமொழி, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் தம்பி [சித்தப்பா மகன்] அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகிறார். படத்தை எழுதி இயக்கியுள்ளார் எடிட்டர் லியோ ஜான்பால்.
ஜூன் 27—ல் ‘மார்கன்’ ரிலீஸ் என்றாலும் இந்த மே.26—ஆம் தேதியே படத்தின் டிரெய்லரை ரிலீஸ் பண்ணி புரமோஷனை ஸ்டார்ட் பண்ணிவிட்டார் விஜய் ஆண்டனி. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், டி.சிவா, சி.வி.குமார், விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்களை டைரக்ட் பண்ணும் இயக்குனர்கள் சசி, ஜோஷ்வா சேதுராமன், பெப்பின் ஜார்ஜ் மற்றும் இயக்குனர்கள் அருண்பிரபு, மிலிந்த்ராவ், ரவிக்குமார், நலன் குமாரசாமி, ரோகின் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
கடைசியாகப் பேசிய பின்பு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பேசியதுடன் சில உண்மைகளையும் சொன்னார் விஜய் ஆண்டனி. அதன் சாராம்சம்…
“என் வாழ்க்கையில் ‘பிச்சைக்காரன்’ படம் போல இனி அமையாது. அதன் இயக்குனர் சசிக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். எனது அடுத்த படம் சசி டைரக்ஷனில் தான். இந்த மார்கன் கதையை லியோ ஜான்பால் சொன்னவுடனேயே நடிக்க ஒத்துக் கொண்டேன். லியோ மிகச்சிறந்த எடிட்டராக இருக்கிறார். இப்படத்திற்குப் பின் மிகச்சிறந்த டைரக்டராகவும் ஜொலிப்பார். ஒரு குழந்தைக்கு அம்மா எப்படியோ, அது போலத்தான் ஒரு படத்தின் கதைக்கு டைரக்டர் தான் அம்மா. இந்தக் குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது டைரக்டருக்குத் தான் தெரியும்.
நான் வரிசையாக படங்களில் நடிப்பதையும் படங்களைத் தயாரிப்பதையும் பார்த்து பலபேர், இவன்கிட்ட அம்புட்டு பணம் இருக்கா? என கேட்கிறார்கள். எல்லாமே வட்டிக்கு வாங்கித் தான் படம் பண்றேன். மாசாமாசம் ஒழுங்கா வட்டி கட்றேன். அதனால நான் கேட்டதும் நம்பிக்கையுடன் பணம் தருகிறார்கள். நான் தயாரித்த படங்கள் எல்லாமே எனக்கு அதிக லாபம் தராவிட்டாலும் நஷ்டத்தை ஏற்பட்டுத்தவில்லை. ஏன்னா நானே ஹீரோவாக நடிக்கிறேன், இசையமைக்கிறேன், சில படங்களுக்கு எடிட்டிங்கும் பண்ணுகிறேன். அதனால் இந்த சம்பளம் எல்லாம் மிச்சம் தானே. இனிமேல் மற்ற ஹீரோக்களின் படங்களையும் தயாரிக்கப் போறேன்.
எதையும் நெகட்டிவாக பார்க்காமல் பாஸிட்டிவாக பார்த்தால் எல்லாமே நன்மையில் முடியும். எனது எல்லா முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகை சகோதரர்கள், இந்த ‘மார்கன்’ படத்திற்கும் இனிவரும் படங்களுக்கும் ஆதரவும் ஊக்கமும் அளிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என மிகத் தெளிவாக உண்மையைச் சொன்னார் விஜய் ஆண்டனி.
— மதுரை மாறன்.