“2025-ல் 25-ஆவது படம்” – விக்ரம் பிரபு உற்சாகப் பேட்டி!
‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிப்பில் ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் கதை எழுத, வெற்றிமாறனிடம் இணை இயக்குனராக இருந்த சுரேஷ் ராஜகுமாரி டைரக்டராக களம் இறங்கும் படம் ‘சிறை’. இதில் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனந்தா நடிக்கிறார். தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் அக்ஷய் குமார் இந்த ‘சிறை’ மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘சிறை’ ரிலீசாவதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்தார் படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு.

“2025-ல் 25-ஆவது படமாக ‘சிறை’ அமைந்தது எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். நான்கூட என்னோட படங்களின் எண்ணிக்கையை நினைச்சுப் பார்த்ததில்ல. எனது நலன் விரும்பிகள் சிலர் தான் “இது உனக்கு 25-ஆவது படம்”னு சொன்னதும் ரொம்வும் ஹேப்பியாகிட்டேன். நான் சினிமாவுக்கு வந்து 13 ஆண்டுகளில் 25 படம்கிறது கம்மி தான். அதுக்கு நானும் ஒரு காரணம், அஞ்சு வருசத்துக்கு முன்னால நாட்டையே புரட்டிப் போட்ட கொரோனாவும் ஒரு காரணம்.
என்மேல் நம்பிக்கை வைத்து இயக்குனர் தமிழ் இந்தக் கதையைச் சொன்னார். அவர் மேல் நம்பிக்கை வைத்து நானும் ஒத்துக் கொண்டேன். கதையை டைரக்டர் சுரேஷ் பக்காவான் ஸ்கிரிப்டாக்கி, அதைவிட பக்காவா ஷூட்டிங் ப்ளானும் போட்டதால் எந்த தடங்கலும் இல்லாம படம் நல்லபடியா முடிஞ்சு இப்ப ரிலீசுக்கு ரெடியா இருக்கு. வேலூர், சென்னை, மதுரை, சிவகங்கை ஏரியாக்களில் ஷூட்டிங் நடத்திருக்கோம். எல்லாமே சிறப்பாக முடிவதற்கு தயாரிப்பாளர் லலித்குமார் சார் தான் முக்கியக் காரணம்.
இந்தப் படத்தில் லலித் சாரின் மகன் அக்ஷய் அறிமுகமாகிறார். சிவகங்கைல ஷூட்டிங் நடக்கும் போது அவரை சாணிலாம் அள்ளவிட்டார் டைரக்டர் சுரேஷ். சினிமான்னா எல்லாமே இருக்கும், எதுவும் நடக்கும்பான்னு அவனை உற்சாகப்படுத்துனேன். படத்துல எல்லா கேரக்டர்களுடனும் நான் டிராவல் பண்ணிருக்கேன்.
“டாணாக்கரனிலும் போலீஸ், இதுலயும் போலீஸா?”
“அதுல போலீஸ் டிரெய்னிங்ல படும் கஷ்டம், அப்புறம் கடைநிலை போலீஸா படும் அவஸ்தைன்னு இருக்கும். ஆனா இதுல போலீஸ் அதிகாரியா வர்றேன்”
“இதுக்காக ஸ்பெஷலா எதும் ஒர்க் பண்ணிருக்கீங்களா?”
“நல்லா சாப்பிட்டேன், தூங்குனேன் அவ்வளவு தான். மத்தபடி கேரக்டருக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க நன்றாக உழைச்சிருக்கேன். நான் மட்டுமல்ல எல்லாரும் சேர்ந்து படம் ஜெயிக்கணும்னு உழைச்சிருக்கோம்”
“உண்மைக்கதைன்னு சொன்னீங்க. அது என்ன உண்மை?”
“மாத்தி மாத்திக் கேட்டு என்வாயால கதைய சொல்ல வைக்கலாம்னு ட்ரை பண்றீங்க. அது நடக்காது. படம் பார்த்த பிறகு நிறைய கேள்விகளை கேட்பீர்கள். அப்ப பதில் சொல்றேன்”
“நீங்க நடிச்ச 25 படங்கள்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரேயொரு படம்?”
“நிறைய இருக்கு சார். ஆனா நீங்க ஒண்ணு மட்டும் தான் சாய்ஸ் கொடுத்ததால என்னோட முதல் படம் கும்கி’யைத் தான் சொல்லணும். அதுல இன்னொரு சுவாராஸ்யமும் சோகமும் என்னன்னா, அந்தப் படம் ரிலீசாவதற்கு மூணு நாளைக்கு முன்னால என்னைச் சுத்தியிருந்தவங்களே படம் ஓடாதுன்னு நெகடிவா பேசுனாங்க. ஆனா ரிலீசன்று அவர்களே, “படம் சூப்பர்ஹிட்”ன்னு சொன்னாங்க”
“நீங்க மறக்க நினைக்கும் படம்”
“ 2018-ல் வந்த ‘துப்பாக்கி முனை’ ங்கிற படம் தான். அதுல நிறைய கசப்பான அனுபவங்கள், படமும் ஃப்ளாப்புங்கிறது ஒத்துக்குறேன். அதுக்கு காரணங்கள் நிறைய இருந்தாலும் இப்ப அதையெல்லாம் பேசுவது நாகரீகமா இருக்காது”
“லவ்மேரேஜ்ங்கிற படத்துல சிறப்பா நடிச்சிருந்தீங்க. படமும் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா சரியா போகலையே?”
“ஒன்றை வருசத்துக்கு முன்னால ரிலீசாக வேண்டிய படம் சார் அது. சொன்ன தேதில, சொன்ன மாதிரி படத்தையும் எடுத்துக் கொடுத்துட்டாரு டைரக்டர். ஆனா தயாரிப்பாளர்களுக்கிடையே நடந்த சண்டையில எங்க சட்டை கிழிஞ்சிருச்சு. அதனால் இப்ப நானும் உஷாராகிட்டேன்”
“நடிகர்திலகத்தின் அன்னை இல்லத்தில் சில சிக்கல்கள், பஞ்சாயத்துகள் இருந்துச்சே?”
“அதையெல்லாம் சுமூகமாக பேசி முடிச்சாச்சு. ‘சிறை’ ரிலீசுக்குப் பிறகு சீக்கிரமே அதே அன்னை இல்லத்தில் உங்களுக்கு விருந்து வைக்கிறேன். இப்போது ‘சிறை’க்கு உங்களின் ஆதரவும் அன்பும் தேவை”
இப்படி பல கேள்விகளுக்கு சளைக்காமல், சிரித்த முகத்துடன் பதில் சொன்னார் விக்ரம் பிரபு.
— ஆண்டவர், படங்கள் : யுவராஜ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.