5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாடு
புதுக்கோட்டை இன்று ஹைக்கூ கோட்டையாக மாறியுள்ளது உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிறுவுனர் கா.ந.கல்யாணசுந்தரம் புகழாரம் !
கடந்த ஞாயிறு மே 17, 2026 அன்று புதுக்கோட்டையில் 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக உலக மாநாடு கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் சிறப்பாக நடந்தது. விழாவினை புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்துடன் இனிய நந்தவனம் மற்றும் தமிழ் ஹைக்கூ கவிதையாளர் இயக்கம் இணைந்து நடத்தின. விழாவில் புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தலைமையுரையாற்றினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா அவர்கள் தொடக்கவுரையாற்றினார். உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிறுவுனர் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம், துபாயிலிருந்து வருகை தந்த கவிஞர் முத்துவை ஹிதாயத், பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் முத்துநிலவன், முதுபெரும் ஹைக்கூ கவிஞர் அமுதபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
புதுக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளைச்சுட்டிக் காட்டி புதுக்கோட்டை இன்று ஹைக்கூ கோட்டையாக மாறியுள்ளது என கா.ந.கல்யாணசுந்தரம் பேசினார். நான்கு மாநாடுகள் கடந்து வந்த பாதை குறித்து இனிய நந்தவனம் இலக்கிய அமைப்பின் தலைவர் சந்திரசேகரன் தமது பல அனுபவங்களையும் மாநாட்டுச் சிறப்புகளையும் விளக்கினார். ஹைக்கூ மாநாடு எதற்காக என்பது குறித்து தமிழ் ஹைக்கூ கவிதையாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் பேசுகையில் “உலகெங்கும் உள்ள ஹைக்கூ கவிஞர்களை ஒரே இடத்தில் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறது எனவும் தமிழ் கவிதை உலகில் ஹைக்கூவின் தடம் உச்சம் தொட்டுள்ளது என்றும் விரிவாகப் பேசினார்.
முன்னதாக ஹைக்கூ கவிதைகள் கண்காட்சி,புத்தக அரங்கம் திறக்கப்பட்டது. விழா மேடையில் “தூண்டில்” மாநாட்டு மலரை காவல்துறை கண்காணிப்பாளர் ஐபிஎஸ் அதிகாரி மணி சண்முகம் வெளியிட வாசகர் பேரவையின் செயலர் கவிஞர் சா.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். முன்னதாக கவிஞர் மகா சுந்தர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் ஹைக்கூ படைக்கவிதைப் போட்டிக்கான படங்களை தருமபுரி அரசுக் கல்லூரி முனைவர் கோ.கண்ணன் அவர்கள் வெளியிட கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப .சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார். முடிவில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் ஹைக்கூ கவிதைகள் வாசிப்பு அரங்கில் 60 க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்று கவிதைகள் வாசித்தனர். கவிஞர் மு.கீதா, பீர் முகம்மது இருவரும் ஒருங்கிணைத்த கவியரங்கில் அனைவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பிடம் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிர்வாகிகள் புதுகை ஆதிரா, ந.வேலாயுதம், க.குணசேகரன், கவிநிலா மோகன் மற்றும் பல கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தனர். ஹைக்கூ முற்றம் கவிஞர்கள் பலரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து முனைவர் ஆதிரா முல்லை அவர்கள் தலைமையில், கவிஞர் டெய்சி இராணி அவர்கள் ஒருங்கிணைப்பில் எனக்குப் பிடித்த ஹைக்கூக்கள் என வாசிப்பு அரங்கினை கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்கள் தொடங்கி வைக்க, cஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அயலகக் கவிஞர்கள் பங்கேற்று என்னை எழுதிய ஹைக்கூ என அனுபவப்பகிர்வுகளைக் கூறினர், இந்த நிகழ்வுக்கு மலேசியாவிலிருந்து வந்திருந்த கவிஞர் பச்சைபாலன் தலைமை வகித்தார். அயலகக் கவிஞர்கள் மகேந்திரன் நவமணி,செந்தில்குமார்,முகம்மது இர்ஷாத்,சிவா லெனின்,மற்றும் பெரியார் விஜயன் ஆகியோர் தமது அனுபவுரைகளைத் தந்தனர். இந்த நிகழ்வு கவிஞர் நேசன்மகதி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு கைத்தட்டலைப் பெற்ற நிகழ்வாக அமைந்தது.
உலகெங்கிலும் வந்திருந்த கவிஞர்களின் 43 ஹைக்கூ நூல்கள் மேடையில் வெளியிடப்பட்டன. நூலாசிரியர்களுக்கு பயனாடை அணிவித்து விழாக்குழுவினர் பாராட்டினார். ஓவியக்கவிஞர் அமுதபாரதி அவர்கள் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலும் வெளியிடப்பட்டது. விழாவின் இறுதியில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவரும் தமிழ் ஹைக்கூ முன்னோடிகளில் ஒருவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி அவரவர்களுக்கு ஹைக்கூ பேரொளி விருது வழங்கப்பட்டது. அயலகக் கவிஞர்கள் பச்சை பாலன்,செந்தில் குமார், முகம்மது இர்ஷாத்,மகேந்திரன் நவமணி,சிவா லெனின் மற்றும் செலுகை சி.பழனிவேல் ஆகியோருக்கு ஹைக்கூ சுடரொளி விருதுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.
விழா நிறைவுப் பேருரையாற்றிய புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தங்கம் மூர்த்தி அவர்கள் பேசுகையில் மாநாடு ஆகச்சிறந்த முறையில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது என்றால் விழாக்குழுவினர் மற்றும் அனைத்து ஹைக்கூ கவிஞர்களின் ஒட்டுமொத்த உழைப்பும் பங்களிப்பும் எனக்குறிப்பிட்டார்.. மேலும் நேர மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்ட தொகுப்பாளர் கவிராசன் இலக்கியக் கழகத்தின் தலைவர் முருகபாரதி அவர்களைக் கெரவித்துப் பாராட்டினார். புதுக்கோட்டை ஹைக்கூ மாநாட்டில் ஹைக்கூ ஆளுமைகள், ஆய்வாளர்கள் , ஆர்வலர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மலேசியா, சிங்கப்பூர் , துபாய், இலங்கை , அமெரிக்கா என அயலகக் கவிஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு மாபெரும் வெற்றி அடைந்தது தமிழ் ஹைக்கூ வரலாற்றின் ஏடுகளில் பதிவானது.
6ஆவது உலக தமிழ் ஹைக்கூ மாநாடு அடுத்த ஆண்டில் மலேசியா நாட்டில் முன்னின்று நடத்துவதாக மலேசியாவிலிருந்து வருகைதந்த கவிஞர் பச்சைபாலன் அறிவித்து அழைப்பு விடுத்தார். அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
விழா முடிவில் பேராசிரியர் மு.கருப்பையா நன்றி கூறினார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.