தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் !
தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.05.2026) காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கு தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கோரினார்.
இதனைத் தொடர்ந்து அரசை ஆதரித்து சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றினர். தீர்மானத்தை எதிர்த்து, தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் உரையாற்றினர். தே.மு.தி.கவைச் சார்ந்த பிரேமலதா பேசுகையில், “இந்த அரசு ஆட்சிக்குப் பெரும்பான்மை வேண்டும் என்ற நோக்கில் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. விஜய் அவர்களின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பதவி தந்திருப்பது கடும் கண்டத்திற்குரியது” என்று கூறினார். அ.ம.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு சுயேட்சை உறுப்பினராக உள்ள காமராஜ் அரசை ஆதரித்து உரையாற்றினார்.
அ.தி.மு.க. குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ இந்தப் பேரவையில் அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 47 அ.தி.மு.க. உறுப்பினர்களும் அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்போம். காரணம், நேற்று (12.05.2026) அ.தி.மு.க.வில் ஒரு குழுவாக இயங்குவோம் என்று அறிவித்த நிலையில், அவர்களை முதல் அமைச்சர் நேரில் சந்தித்துப் பேசியது கட்சியின் பிளவுக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது என்பதால், நாங்கள் தீர்மானத்தை எதிர்க்கிறோம்” என்று உரையை நிறைவு செய்தார்.
பா.ம.க. மற்றும் பா.ஜ.க. அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலைமை வகிப்பதாகக் கூறினர். பிளவுபட்ட அ.தி.மு.க. குழுத் தலைவர் எஸ்.பி.வேலுமணியைப் பேரவைத் தலைவர் பேச அழைத்தபோது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் பேரவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதற்கிடையில் பேரவைத் தலைவர் பேசும்போது, “அவர் பேச வாய்ப்பு கேட்டார் கொடுத்திருக்கிறேன். யாரைப் பேச வைக்கவேண்டும் என்பது என்னுடைய உரிமை” என்று கூறி வேலுமணியை பேசச் சொன்னார். கூச்சல் குழப்பத்திற்கிடையே வேலுமணி அரசை ஆதரிக்கிறோம் என்று கூறினார்.
நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “இந்த அரசுக்கு மக்கள் 35% வாக்கினைத்தான் அளித்துள்ளார்கள். இந்த அரசுக்கு எதிராக 65% மக்கள் வாக்களித்திருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு அ.ம.மு.க. உறுப்பினரின் ஆதரவைப் பெற்றுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த திமுக அரசு நடைமுறைப்படுத்திய நலத்திட்டங்களை இந்த அரசு தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அரசு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவைப் பெறாது என்ற நிலையில்தான் தி.மு.க.வில் இருந்த கூட்டணி கட்சிகள் அரசை ஆதரித்தன. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் ஒரு குழுவும், தற்போது சுயேட்சையாக உள்ள உறுப்பினரும் அரசை ஆதரிக்கின்றனர். இந்த அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவித்து, வாக்கெடுப்பில் நாங்கள் வெளிநடப்பு செய்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார். இந்த வாக்கெடுப்பு நிகழ்ச்சியில், உதயசூரியனில் வெற்றி பெற்ற ம.தி.மு.க உறுப்பினர்கள் 2 பேர் அவைக்கு வருகை தராமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
பின்னர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது டிவிசன் வாரியாக வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 பேரும் எதிராக 22 பேரும் நடுநிலை வகித்து 5 பேரும் வாக்களித்தனர். 116 பேரின் ஆதரவு இருந்தாலே அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெறும் நிலையில், அ.தி.மு.க.வின் பிளவுபட்ட குழுவில் இருந்த 25 பேரின் ஆதரவைப் பெற்று 144 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
அ.தி.மு.க.வின் விப் என்னும் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி “அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது எதிர்த்து வாக்களிக்க வேண்டும். ஆதரித்து வாக்களித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்றும் கூறினார். கொறடாவின் உத்தரவை மீறி 25 பேர் வாக்களித்துள்ள நிலையில், அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடிதம் ஒன்றைக் கொடுப்பார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கொறடா உத்தரவை மீறியவர்களை உடனே தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. பேரவைத் தலைவர் பிரபாகர் முடிவெடுக்கக் காலம் கடத்தினாலும், அவர்களை ஒரு குழுவாக அங்கீகரித்தாலும் அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்று நீதிக்காகப் போராடும் நிலை ஏற்படும்.
முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் – இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும். குதிரைபேர அரசாகச் இருக்கமாட்டோம். குதிரை வேக அரசாக செயல்படுவோம்” என்று வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன் சட்டப்பேரவையில் கூறினார். ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கியது குறித்துப் பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தார். விஜய் அரசுக்கு வெற்றி என்றாலும், அ.தி.மு.க. பிளவைத் தொடர்ந்து, ஒரு குழு ஆதரிப்பது என்பது சட்ட ரீதியில் விஜய் ஆட்சிக்குத் தலைவலியாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன. விஜய் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.