அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….
அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு – உங்கள் மீது எனக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு என்பதையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ் சமூக செயல்பாடுகள் மீது மதிப்பு உண்டு என்பதையும் சொல்லிக்கொண்டு இக்கடிதத்தை ஆரம்பிக்கின்றேன்.
திமுக எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றது. நேற்று நடந்த கழக கூட்டத்தில் நம் தோல்விக்கு காரணம் என்ன – என்னென்ன செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே இந்த பதில்.
முதல் விஷயம் – மத்திய அரசு பல்வேறு பரப்பிலான ஊடுருவுகளை செய்த போதெல்லாம் நீங்கள் அதை வெகு தீவிரமாக எதிர்த்தீர்கள் -அதில் ஜெயிக்கவும் செய்தீர்கள் என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அவை சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை .

இன்னொரு விஷயம் போராட்டங்களின் மூலமாக தான் இளைஞர் படை ஒன்று கூடும் .இப்போதெல்லாம் மேடைப்பேச்சுகளோடு முடிந்து போவதால் போராட்டங்கள் இளைஞர்களை விட்டு விலகியே இருக்கின்றன. அப்படி எனில் தவேகா எப்படி வென்றது அதுவும் வாய்ப்பேச்சின் மூலமாகவும் இணையதள ஊடுருவல் மூலமாகவும் தானே என்று கேட்கலாம்.
தவேகாவின் வெற்றி ஒருவிதமான திரை பிம்பம் – பல்வேறு வீடுகளில் குழந்தைகள் இருந்து இளைஞர்கள் வரை “எங்கள் விஜய் அண்ணாவுக்கு ஓட்டு போடுங்கள் “என்று சொன்னதனால் இடப்பட்ட வாக்குகள் அதிகம் . இரண்டாவது விஷயம் அப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் எமர்ஜென்சி என்றால் என்னவென்றோ நீங்கள் அதை எதிர்க்க என்னவெல்லாம் பாடுபட்டீர்கள் என்றும் வரலாறு தெரிவிக்கப்படவே இல்லை .
இதற்கு மாவட்ட இளைஞர் அணியில் நிச்சயமாக செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நம் கழகத்தின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயமாக பாடங்களாக -அரசியல் பாடங்களாக சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
மனுஷ்யபுத்திரன் போல சுய லாபங்களுக்காக பதவியை உபயோகித்து கொண்டவர்களை ஒதுக்கியிருக்க வேண்டும்.

அடுத்தாக நமது EVM மெஷின் குறித்த ஊழல் குறித்து நாம் எங்குமே பேசவில்லை . அது குறித்து நமது நாடெங்கும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன .EVM மிஷின்கள் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று திமுக முதலிலேயே ஒரு பெரும் போராட்டத்தை நிகழ்த்தியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .
நிச்சயமாக நீங்கள் வேங்கைவயல் சம்பவத்திலும் கவின் இறந்த இடத்திலும் நேரில் சென்று பிரச்னையை தீர்த்திருக்க வேண்டும் . செவிலியரின் பிரச்சனைகளை நீங்கள் ஒரு முறை கூப்பிட்டு அவர்களிடமே பேசி இருந்தால் நிச்சயமாக அது முடிவுக்கு வந்திருக்கும் . இப்படி தீர்க்கப்படாத பிரச்சனைகள் மேலான புகார்கள் அடுக்கப்பட்டு அடுக்கப்பட்டு ஏதோ ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது திமுக ஆட்சிக்கு ஒரு மாற்றான் தாய் பார்வை இருப்பது போலவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை இனிமேலாவது மாற்ற வேண்டும்.
முக்கியமாக கரூர் சம்பவத்தின் போது ராகுல் சொன்னாரென்று எஃப் ஐ ஆர் போடுவதில் இருந்த மெதுவான தன்மை எல்லாமே- நமக்கு எதிராக தான் மக்கள் மத்தியில் திரும்பின . அங்கயே ஆரம்பிட்கு விட்டது ராகுலின் ஆட்டம்.
நீங்கள் கள அரசியலில் இருந்து பூத்த மலர் . கண்ணாடி ஜன்னல்கள் வழியே கொத்தும் பறவைகளும் – உள்ளிருந்து பார்க்கும் போது கண்ணாடி பறவையே.
அன்புடன்
தமயந்தி








Comments are closed, but trackbacks and pingbacks are open.