அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்) இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) – உங்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்வதில் மனம் வேதனை கொள்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்ற 10 ஆம் நாளுக்குள், அதுவும் விரலில் வைத்த மை அழிவதற்குள் நீங்கள் அனைவரும் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதவி விலகிய அனைவரும் ஒரே குரலில் சொன்ன இரண்டு செய்திகள் 1. அதிமுகவின் எதிரி கட்சியான திமுகவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முயன்றார் 2. ஆளும் கட்சியில் இணைந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகித் தொகுதி மக்களுக்குப் பல நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பதாகும்.
எடப்பாடி திமுகவோடு இணைந்து ஆட்சி அமைத்துக் கட்சியின் வளர்ச்சிக்கு எதிரானது என்றால், தவெக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று லீமாரோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது கட்சி நலனுக்கு உகந்ததா? எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரால் தொகுதி சார்ந்த நலத் திட்டங்களை நிறைவேற்றமுடியாது என்பது சமுக்காளத்தில் வடிகட்டிய பொய். ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பு செய்கிறது என்றால் மக்களைத் திரட்டி ஆளும் கட்சிக்கு எதிராகப் போராட்டங்களை மேற்கொள்ளலாம். எதிர்க்கட்சியில் இருந்து செயல்படமுடியாது என்பது மக்களாட்சியின் மாண்பைக் கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
நம் நாட்டில் பின்பற்றப்படும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்துதான் மக்கள் நலன் சார்ந்த சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றன. சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் தலைவர் முதல்வர் என்றால், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடிய தலைவர் என்ற பொருளில் அல்ல; நிழல் முதல்வர் (Showdo Chief Minister) என்பதே உண்மையான பொருளாகும்.
பெரும்பான்மை கொண்ட ஆளும்கட்சி அதிகாரத் திமிரில் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கடிவாளம் போட்டு, ஆளும் கட்சியை அடக்கும் திறன் படைத்தது எதிர்க்கட்சியே. நீங்கள் சொல்வதுபோல் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்றால் ஆளும் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் சர்வாதிகாரம் கொண்டதாக மாறிப்போகும். ஆளும் கட்சியில் இருப்பது ஒரு வாய்ப்பு என்றால் எதிர்க்கட்சியில் இருப்பதும் ஒரு வாய்ப்பே என்பதை நீங்கள் உணரவில்லை என்பது மக்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீங்கள் விலகியதைக் கடுமையாகக் கண்டித்துப் பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் அனைவரும் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் உணர்வுகளைக் காலில்போட்டு மிதித்தவர்களைத் தோல்வி அடையச் செய்யுங்கள். அவர்கள் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை ஊருக்குள் நுழைய விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக ஊடகங்களில், கட்சி மாறுவதற்குக் குதிரைப் பேரத்தின் அடிப்படையில் 100 கோடிகளைப் பெற்றுக் கொண்டதாகச் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஊழலை ஒழிக்க வந்த தவெக கட்சி தனக்கான அறுதிப்பெரும்பான்மைக்குச் சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குகிறது என்ற அவப்பெயரையும் சுமந்து கொண்டிருக்கின்றது.
இன்னும் பலர், “சட்டமன்ற உறுப்பினர்கள் முறையான காரணம் தெரிவிக்காமல் பதவி விலகியதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் இவர்கள் அனைவரும் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர், “இடைத்தேர்தலுக்குச் செலவழிக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை மீண்டும் இவர்கள் போட்டியிட்டால் அவர்களிடம் வசூல் செய்யவேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்தக் கோபம் பெருங்கோபமாக மாறினால், பதவி விலகிய நீங்கள் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் நீங்கள் தோற்கடிக்கப்படுவது நிச்சயம்.
“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும்” என்று இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் வரிகளைப் பொதுமக்கள் சார்பில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மக்கள் சக்தி மகத்தானது என்பதை உங்களுக்குக் காலம் உணர்த்தும்.
— தமிழன்புடன், ஆதவன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.