ரங்கராஜ் பாண்டேவை ‘ரவுண்ட்’ கட்டிய கவிதா பாரதி!
தயாள் பத்மநாபன் தயாரிப்பு & டைரக்ஷனில் உருவாகி, ஜூலை 10-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’. வெற்றி, பிரிகிடா, ‘சித்தப்பு’ சரவணன், ரங்கராஜ் பாண்டே, சுப்பிரமணிய சிவா, லிஸி ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். திரைக்கதை-வசனம் : கவிதா பாரதி, ஒளிப்பதிவு : எம்.வி.பன்னீர்செல்வம், இசை : தர்புகா சிவா, பி.ஆர்.ஓ : ரேகா.
பத்து நாட்களுக்கு முன்பு படத்தைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நடந்த நிலையில், டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.23-ஆம் தேதி இரவு நடந்தது. இதில் டைரக்டர் தயாள் பத்மநாபன், கவிதா பாரதி, சுப்பிரமணிய சிவா, ரங்கராஜ் பாண்டே, நடிகை லிஸி ஆண்டணி, மியூசிக் டைரக்டர் தர்புகா சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தர்புகா சிவா, லிஸி ஆண்டனி, படத்தின் எடிட்டர் ஆகியோர் படத்தின் இருக்கும் சிறப்புகள் குறித்துப் பேசினார்கள்.

கதைக்குழுவில் இருக்கும் ஷான் பேசும் போது, “தயாள் சார் இந்தக் கதையை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு, அதில் வரும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு ரங்கராஜ் பாண்டேவிடம் பேசிவிட்டதாகச் சொன்னதும் ஷாக்கானேன். ஏன்னா ரங்கராஜ் பாண்டே எப்படிப்பட்டவர்னு எல்லாருக்கும் தெரியும். சிலர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பு இருக்கும். ஆனா பாண்டே மீது காரணத்துடன் வெறுப்பு இருக்கும். இவரு ஒத்துவருவரான்னு தயாள்கிட்டே கேட்டேன். பேசி முடிச்சுட்டேன்னு சொன்னார். சரி, அது உங்க இஷ்டம்னு சொல்லிட்டேன். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டேவின் நடவடிக்கைகள் பாராட்டும்படியா இருந்துச்சு” என முதல் ரவுண்டை ஆரம்பித்தார்.
அடுத்துப் பேச வந்தார் அண்ணன் கவிதா பாரதி. “இடம், சூழல், நேரத்தைப் பொறுத்து சுருக்கமாகவும் சொல்ல வந்த கருத்தை நறுக்காகவும் பேசும் ஆற்றல் உள்ளவர் தலைவர் கலைஞர். அதே மாதிரி நானும் சுருக்கமாக பேசிடுறேன்” என தலைவர் கலைஞர் குறித்துப் பேசி பாண்டேவுக்கு லைட் ஷாக் கொடுத்தார். அதன் பின் ரங்கராஜ் பாண்டேவை ரவுண்ட் கட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டார் அண்ணன் கவிதா பாரதி. “இங்கே மட்டுமல்ல, எங்கேயும் எப்போதும் பாண்டேவுடன் நமக்கு ஒத்துப் போகாது. அவரின் கொள்கை எப்போதுமே நமக்கு எதிரானது தான். இந்தப் படத்தில் வரும் பாரதிதாசன் பாடலை திரையிட்ட போது, அதில் கவிஞர் பாரதிதாசன் என போட்டிருந்தார்கள். அவரை பாவேந்தர்னு தான் சொல்லணும். இங்கே பாரதிக்கு இருக்கும் முக்கியத்துவம் பாரதிதாசனுக்கு இல்லை. அதிலும் ஒரு அரசியல் இருக்கு” என கேப்விடமால் அடித்த கவிதா பாரதி, “படத்தின் ஷூட்டிங்கில் பாண்டே நடந்து கொண்டவிதத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். போலீஸ் அதிகாரியான அவரின் கேரக்டர் மூலமே ‘ஒரே நாடு,ஒரே சட்டம்’ என்பதையும் பேச வைத்துள்ளோம். இந்தப் படத்தின் உரையாடல் நல்ல விவாதத்தினை உருவாக்கும்” எனப் பேசி பாண்டேவுக்கு பேண்டேஜும் போட்டார் கவிதா பாரதி.

சுப்பிரமணிய சிவா என்னை நினைத்தாரோ…”இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமை மிக்க ஊடகவியலாளர், பிரபல அரசியல் தலைவர்கள் எல்லோரையும் பேட்டி எடுத்தவர், சகலகலா வல்லவர், நல்லவர்” என பாண்டேவை கூல் பண்ணினார்.
இறுதியாக மைக் பிடித்த ரங்கராஜ் பாண்டே, “அண்ணன் கவிதா பாரதி பேசும் போது, கொள்கையில் நேரெதிரி எனப் பேசினார். கொள்கைகள் மாறுபாடு இருந்தாலும் நமக்குள் அண்ணன் -தம்பி உறவு மாறாது. பாரதிதாசனுக்காக அவர் குரல் கொடுக்கிறார். பாரதிக்காக நான் குரல் கொடுக்கிறேன், அவ்வளவு தான்” என மிகவும் தன்மையாகப் பேசிய பாண்டே, “ கர்நாடகத்தில் எழுத்தாளர்கள், படைப்பாளர்களுக்கு விருது கொடுக்கும் போது, மேடையில் அவர்களை அமர வைத்து ஆட்சியாளர்கள் எழுந்து நின்று விருது கொடுத்து கெளரவிப்பார்கள். அதைப் போல் தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும்” என ரங்கராஜ் பாண்டே பேசியதை கேட்டு உற்சாகமாக கைதட்டி வரவேற்றார் கவிதா பாரதி..
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.