கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை-05 அன்று காலை 6.15 மணி. தனது வீட்டுக்கு அருகிலிருந்த வயலில் கத்தரிச் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார், பழனி. அப்போது ஒரு டாடா சுமோ காரிலும், மூன்று மோட்டார் சைக்கிள்களிலும் வந்த ஒரு கூலிப்படை கும்பல் ஒன்று பழனியை அரிவாளால் வெட்டியும், ஆத்திரம் அடங்காமல் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்கிறது. அந்த கும்பலில் ஒருவன், பழனியின் துண்டிக்கப்பட்ட தலையை தனியே எடுத்துக்கொண்டு டாடா சுமோ காரில் உட்கார்ந்திருந்த அந்தக் கும்பலின் தலைவரிடம் காட்டுகிறான். அந்தக் கும்பலின் தலைவனின் தலையசைவுக்குப்பிறகு, அந்த துண்டிக்கப்பட்ட பழனியின் தலை வாய்க்காலுக்குள் வீசப்படுகிறது.

தெலுங்கு சினிமாப்படம் ஒன்றின் க்ரைம் த்ரில்லர் காட்சி அல்ல இது. நம்ம தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உத்தனப்பள்ளியையடுத்த பாலேபுரம் என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் இது. சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் கிளைமாக்ஸ் முடியவில்லை. கொல்லப்பட்டதும்; கொலை செய்ததும் ஏதேனும் ஒரு கூலிப்படைக்கும்பலாக இருக்குமோ? என்றுதானே நினைக்கிறீர்கள். நிச்சயமாக, இல்லை.
இவ்வளவு குரூரமாக கொல்லப்பட்ட பழனி, பெரியார் திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர். கூலிப்படைத் தலைவனாக முன்னின்று இக்கொடூரத்தை அரங்கேற்றியது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த, தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன். இந்த ஒரு வழக்கு என்றில்லை, இதுவல்லாமல் வேறு பல கொலை வழக்குகளும் இருக்கின்றன. காலக்கொடுமைதான், வெண்மணி தியாக வரலாற்றை கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இப்படி ஒரு தலைவர். அதுவும் சட்டமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரம் வேறு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த, தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன்(A-2) மற்றும் அவரது அண்ணன் வரதராஜன்(A-1), மாமனார் இலகுமையா(A-3) உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு மன்றத்தில், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. பலரும் பிறழ் சாட்சிகளாக பல்டியடித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கின் போக்கை மாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கின் விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டுமென்றும்; சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார். இதனையடுத்து, 2023 இல் சேலம் மாவட்ட முதன்மை அமர்வுக்கு வழக்கு மாற்றம் பெறுகிறது. வழக்குரைஞர்கள் மதுரம் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகிறார்கள். எதிரிகள் தரப்பில் வழக்குரைஞர்கள் ப.பா.மோகன், பாலமுருகன் ஆகியோர் வாதாடுகிறார்கள்.
தற்போது, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் முன்னிலையில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட 22 பேர்களில் நால்வர் உயிரிழந்து விட்டனர். இதுவரை 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற சாட்சி விசாரணையில், தேன்கனிக்கோட்டை தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்ற சித்ரா, மகேந்திர & மகேந்திரா நிறுவன ஊழியர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் சாட்சியமளித்திருக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது …
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.