மக்குப்பையன், முட்டாள், பைத்தியக்காரன் ! மனித அளவீடு சார்ந்த கதைகள்
சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்? தொடர் – 03
சிறுவர்களுக்கான கதைகளில் மக்குப்பையன், முட்டாள், பைத்தியக்காரன் போன்ற மனிதர்களின் அறிவை, இழிவான சொற்களைப் பயன்படுத்தி சிறுவர்களுக்கான கதைகளை எழுதும் போதும், சொல்லும் போதும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
மேலும், இத்தன்மை குறித்த தவறான கற்பிதங்கள் சார்ந்த கதைகளைச் சிறார் எழுத்தாளர்கள் எழுதாமல் இருப்பதே சிறந்தது. காரணம் இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவர்கள். சிலருக்கு நன்றாக ஓவியம் வரைய வரும். சிலருக்கு நன்றாக நீச்சல் வரும். சில குழந்தைகள் நன்றாகப் பாடுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஆனால், நாம் அதை நம்முடைய கல்விச் சூழலின் அளவீட்டை வைத்துக்கொண்டு, படிப்பு மட்டும்தான் வாழ்க்கை என்றும், அதில் சிரமப்படும் குழந்தைகளை வாழ்க்கையில் முற்றிலும் குறைபாடுடைய குழந்தை போல நோகடிப்பது தவறானதாகும்.
மீனைப் பிடித்து தரை ஓட்டப் பந்தயத்திலும், குதிரையை தண்ணீரில் நீந்தவிட்டு பந்தயம் வைப்பதற்குச் சமம். ஒவ்வொரு பெற்றோர்களின் எண்ணமும் நம்முடைய குழந்தைகள் சமூகப் பொருத்தப்பாடு உடைய குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதுதான். கதைகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை மட்டும்தான் அறிவாளி குழந்தை என்றும், விளையாட்டு, ஓவியம், பாடல் போன்றவற்றில் திறமை உடைய குழந்தையை திறனற்ற குழந்தைகளாக கதைகளில் சித்தரிப்பது தவறானதாகும்.

கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கதைகளில் குறிப்பிடலாமே தவிர, கல்வியில் பின் தங்கிய குழந்தை வாழ்க்கையை இழப்பது போன்ற கதைகளை தவிர்ப்பது நல்லது.
சிறுவர்களிடையே உரையாடல்களை கதைகள் வழி கொண்டு சென்றால் நம் சமூகத்தின் மாற்றம் நிச்சயம் உருவாகும்.
இதுவரை நம் சமூகத்தில் மனிதர்களின் அறிவு சார்ந்த அளவீடுகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது.
உதாரணமாக ஆட்டிசம் நிலையில் உள்ள சிறுவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்றும், மாற்றுத்திறனாளிகளால் சமூகத்திற்கு எந்த வளர்ச்சியும் இல்லை என்றும், ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே மிகப்பெரிய அறிவாளி என்றும், தாய் மொழியில் பேசுபவன் முட்டாள் என்றும், பகட்டான உடை அணிந்தவன் உயர்ந்தவன் அவனுக்கு அனைத்து அறிவு சார் சிந்தனைகளும் இருக்கும் என்பது போன்ற மோசமான பொதுபுத்தி நம்முடைய சமூக நீதியையே அசைத்துப் பார்க்கிறது.
இதனைக் கதை வடிவில் சிறுவர்களுக்காக எழுதுவதும், பெற்றோர்கள் சிறுவர்களுடன் உரையாடுவது போன்ற தேவை உள்ளது. அடுத்த தொடரில் விரிவாக பேசுவோம்.
தொடரும்.
— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளா், கலைசொல்லி







Comments are closed, but trackbacks and pingbacks are open.