இந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது?
இந்த விளம்பரத்தில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய மகள். அவங்க 5 வயதில் எடுத்தது. இந்தப் பள்ளி விளம்பரத்தில் மாடலாக விளம்பர பதாகைகளில் என் மகளின் புகைப்படத்தைப் பயன்படுத்த பெற்றோரிடம் முழு சம்மதத்துடன், ஒப்புதல் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை வாங்கி இருந்தது பள்ளி நிர்வாகம்.
மைனர் குழந்தையாகிய என் மகளின் புகைப்படம் விளம்பரப் பதாகையில் இடம் பெற பள்ளி நிர்வாகம் வாரக் கணக்கில் அனுமதிக்காகக் காத்திருந்தது. விளம்பர நோக்கம், புகைப்படம் எடுக்க பள்ளி எடுக்கப் போகும் திட்டம் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்ட பிறகே நான் கையொப்பமிட்டிருந்தேன்.
அப்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த விளம்பரத்தைப் பயன்படுத்தினார்கள். எந்தெந்த ஊர்களில் ( மாவட்டம்) பயன்படுத்தப் போகிறோம் என்பது வரை விரிவான சட்டப்பூர்வமான கடிதம் அது.
இப்போது போல் அப்போது சமூக வலைதளம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம். அதனால் சமூக வலைதளம் எதிலும் பள்ளி நிர்வாகம் இந்த விளம்பரத்தைப் பயன்படுத்தவும் இல்லை, அதற்கான அனுமதியையும் அந்த கடிதத்தில் கோரவில்லை.
இப்படியான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருப்பது போல் அரசு பள்ளிகளிலும் இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும். ( எல்லா பள்ளிகளும் அவ்வாறு உள்ளனவா என தெரியவில்லை)
யார் வேண்டுமானாலும் குழந்தைகளை சமூக வலைதளத்தில் பயன்படுத்த அனுமதிக்க இயலாது. சொல்லப்போனால், இந்தப் புகைப்படத்தைக் கூட இப்போது மேஜர் ஆகிவிட்டதால் மகளின் அனுமதியோடு தான் நானே இங்கு பகிர்கிறேன்.
பெண்கள், ( பெற்றோர் அனுமதியோடு குழந்தைகள்) தாமே முன் வந்து இங்கு சமூக வலைதளங்களில் இயங்குவது வேறு. திணிப்பதோ அல்லது அவர்களின் அனுமதி இல்லாமல், தாங்களாகவே யார் எந்தப் பதிவை வெளியிட்டாலும் பெண்ணாக, ஒரு பெண் குழந்தையின் தாயாக இங்கு சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது.
– பொன்.விமலா







Comments are closed, but trackbacks and pingbacks are open.