இரட்டை ஆலயம் ! இரட்டை கல்லறை ! தொடரும் நூற்றாண்டு கால துயரம் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டம்பாளையத்தில் சுமார் 10 சென்ட் நிலத்தில் இதுவரை 300 கிறிஸ்துவ தலித்களின் சடலம் புதைக்கப்படுகிற அவலம் மற்றும் கிறிஸ்துவத்தில் நிலவும் இரட்டை ஆலயம், இரட்டை கல்லறை என்கிற சாதிய பாகுபாட்டை அம்பலப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான எவிடென்ஸ் கதிர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் அருகில் உள்ள கிராமம் கோட்டப்பாளையம். இக்கிராமத்தில் வசித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 89 வயது கொண்ட ஆசிரியர் ராஜு அவர்கள் வயது மூப்பின் காரணமாக கடந்த 17.07.2026 அன்று இறந்து போனார். அவரது சடலத்தை பொது கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என்று அங்கிருக்கக்கூடிய சில சாதி கிறிஸ்துவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் சட்டம் மற்றும் தொடர் போராட்டத்தின் விளைவாக ராஜு அவர்களின் சடலம் 20.07.2026 அன்று விடியற்காலை 1.30 மணியளவில் பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கிறிஸ்துவ கல்லறையில் இத்தகைய சாதி பாகுபாடு இருந்ததனால் அவரது சடலம் 3 நாட்களுக்கு பிறகு புதைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து எமது எவிடென்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் 21.07.2026 அன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

இக்கிராமத்தில் புனித மரிய மதலேனாள் திருத்தலம் உள்ளது. மிகவும் பிரமாண்டமான பெரிய ஆலயமாகும். தலித் குடியிருப்பில் மிக சிறிய அளவில் சுமார் 40 பேர் மட்டுமே உட்காரக்கூடிய புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. அதுவும் புனித செபஸ்தியார் ஆலயம் 2014ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்த ஆலயம் குடில் போன்றே இருந்துள்ளது.
இங்குள்ள கல்லறை சாதி கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும், தலித் கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும் உள்ளது. அதாவது இக்கிராமத்தில் சாதி கிறிஸ்துவர்கள் 60 விழுக்காடும், தலித் கிறிஸ்துவர்கள் 40 விழுக்காடும் உள்ளனர். இரண்டு கல்லறையுமே புறம்போக்கு நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சாதி கிறிஸ்துவர்கள் கல்லறை 2 ஏக்கர், 92 சென்ட் உள்ளது. தலித் கிறிஸ்துவர்கள் கல்லறை வெறும் 10 சென்ட்டுக்குள் தான் உள்ளது.
அங்குள்ள தலித் கிறிஸ்துவ மக்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 10 சென்ட் கல்லறையில் தான் 500-க்கும் மேற்பட்ட பிணங்களை புதைத்து வருகிறோம் என்று அதிர்ச்சியான தகவலை கூறினார்கள். ஒரே குழியில் 2 – 3 பிணங்களும் புதைக்கப்படுகிற அவலம் வேதனை அளிக்கிறது. தலித் கல்லறை அசுத்தமாகவும் துர்நாற்றத்துடன் உள்ளது. பொது கல்லறை காம்பவுண்ட் கட்டப்பட்டு சுகாதாரத்துடன் நல்ல கட்டிட வசதியுடன் நுழைவு வாயிலுடன் உள்ளது.
இக்கிராமத்தில் சாதி ரீதியான தனி சப்பரம், தனி கோவில், தனி கல்லறை இருப்பது வேதனையின் உச்சம். இங்குள்ள அனைத்து மக்களும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். கத்தோலிக்கம் என்றால் அனைவருக்கும் பொதுவானது என்று அர்த்தம். ஆனால் இங்குள்ள நிலை சாதியால் மக்களை பிளவுபட வைத்திருப்பது நூற்றாண்டு கால துயரம்.
சாதி கிறிஸ்துவர்கள் இறந்து போனால், புனித மரிய மதலேனாள் திருத்தலத்திலும், தலித் கிறிஸ்துவர்கள் இறந்துபோனால் புனித செபஸ்தியார் ஆலயத்தில் பூசை நடத்துவது சாதிய பாகுபாடாகும். கோட்டாட்சியர் இத்தகைய உத்தரவு போட்டிருப்பது சாதிய பாகுபாட்டிற்கு ஆதரவான நிலைப்பாடாகும். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.