கல்லூரியில ரெண்டு வாரமா குடிக்க தண்ணீர்கூட இல்லை … முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்கள் !
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் சுமார் 3000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரியில் 2 வாரங்களாக குடிநீர் என்பது கிடைக்காமல் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார் கள். இந்த பிரச்சினையை இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், கல்லூரி முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் கல்லூரியில் போதுமான கழிப்பறை வசதி கிடையாது. சரியான பாதுகாவலர்கள் கிடையாது. கல்லூரியின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சுவர் இல்லாமல் வெளியாட்கள் உள்ளே வருவது போவதுமாக இருக்கிறார்கள். ஏற்கெனவே, உள்ளூர் இளைஞர்கள் சிலர் மது பாட்டில்களுடன் கல்லூரி வளாகத்தில் சரக்கு அடித்த விவகாரம் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கல்லூரியில் வாயிற் காவலர் ஒருவர்கூட இல்லை. கல்லூரி வளாகத்தில் அதிகப்படியான முள் புதர்கள் இருக்கிறது. இதனால் கல்லூரிக்குள் அடிக்கடி பாம்புகள் உள்ளே வந்து செல்கிறது. இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளை பட்டியலிட்டு சரிசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் மாணவர்களை அணிதிரட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டனர்.
கல்லூரி முதல்வரோ, “ இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நகராட்சி தான் பொறுப்பு. அவர்களிடம் கேளுங்கள்” என்பதாக அலட்சியமாக பதிலளித்ததாக சொல்லப்படும் நிலையில், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வரும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.