தேசியக் கல்லூரியில் “இந்தியா நிமிர்ந்து நின்ற நாள்” சிறப்பு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் “இந்தியா உயர்ந்து நின்ற நாள்” என்ற தலைப்பில் சிறப்பு நினைவு நிகழ்ச்சி இன்று டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. “எழுமின், விழிமின், உங்களுக்குள் இருக்கும் மகத்துவத்தை உணருங்கள்” என்ற எழுச்சி மிகு கருப்பொருளில் சுவாமி விவேகானந்தரின் காலத்தால் அழியாத கருத்துகள் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ச. கருத்தான் வரவேற்புரை வழங்கினார். இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய நாட்களை நினைவுகூருவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சுவாமி விவேகானந்தரின் செய்தி இளைஞர்களிடையே தன்னம்பிக்கை, துணிவு மற்றும் பொறுப்புணர்வை ஊட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்லூரி முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் செயலாளர் சுவாமி விமூர்த்தானந்தா அவர்களை வரவேற்ற அவர், 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று சிகாகோவில் நடைபெற்ற உலக சமயப் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை, இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகிற்குக் கம்பீரத்துடன் எடுத்துரைத்த நாள் என்றார். இந்தியாவின் பெருமை என்பது வரலாற்று பெருமை மட்டுமல்ல, ஒவ்வொரு தலைமுறையும் சுமக்க வேண்டிய வாழும் பொறுப்பு என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேசியக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் கு. அன்பரசு அவர்கள் தலைமையுரை ஆற்றினார். தற்கால கல்விச் சூழலில் விவேகானந்தரின் போதனைகளின் தேவையை விளக்கிய அவர், நேர்மறைச் சிந்தனை, தன்னம்பிக்கை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Math Empowered Youth அமைப்பைச் சேர்ந்த திருமதி உமையாள் அவர்கள் இளைஞர் மேம்பாடு குறித்து சிறப்பு உரையாற்றினார். தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் இளைஞர்கள் சமூக மாற்றத்தின் சக்திகளாக மாற முடியும் என்பதை அவர் எடுத்துரைத்தார்
விழாவின் சிறப்பு அம்சமாக சிறப்பு விருந்தினர் சுவாமி விமூர்த்தானந்தா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சிகாகோ உரை என்பது ஒரு துறவியின் உரை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மிக ஆழமும், உலகளாவிய பார்வையும், சகோதரத்துவமும் வெளிப்பட்ட தருணம் என்று அவர் விளக்கினார். இந்திய பண்பாடு வெறுப்பையோ, புறக்கணிப்பையோ போதிக்கவில்லை, மாறாக ஏற்றுக்கொள்ளுதல், நல்லிணக்கம், பிற மதங்களை மதித்தல் ஆகியவற்றையே போதிக்கிறது என்றார்.
“எழுமின், விழிமின்” என்ற மையச் செய்தியை விளக்கிய சுவாமிஜி, இளைஞர் பருவம் என்பது சாத்தியங்களும், மாற்றமும், தேசத்தை கட்டமைக்கும் பருவம் என்றார். அச்சத்தை வென்று, உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்து, ஒழுக்கத்தைகா கடைபிடித்து, கல்வியைச் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தேசபக்தி என்பது பொறுப்புடன் கடமையை செய்வதிலும், பிறரை மதிப்பதிலும், திறமையை வளர்த்து சமூகத்திற்குப் பங்களிப்பதிலும் வெளிப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக சமஸ்கிருதத் துறைப் பேராசிரியர் முனைவர் பாலாஜி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவி செல்வி த. ராஜராஜேஸ்வரி தொகுத்து வழங்கினார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.