அங்குசம் பார்வையில் ‘ஜமா’ படத்தின் திரை விமர்சனம் –
அங்குசம் பார்வையில் ‘ஜமா’ படத்தின் திரை விமர்சனம் –
தயாரிப்பு : ’Learn & Teach புரொடக்ஷன்’ சாய் தேவானந்த், சசிகலா, சாய் வெங்கடேசன் . எழுத்து—இயக்கம் : பாரி இளவழகன். இசை : ‘இசைஞானி’ இளையராஜா. வெளியீடு : ‘பிக்சர் பாக்ஸ்’ அலெக்சாண்டர். நடிகர்—நடிகைகள்—பாரி இளவழகன், அம்மு அபிராமி,
சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், சாரதி கிருஷ்ணன், ஒளிப்பதிவு: கோபால் கிருஷ்ணா, எடிட்டிங்: ஸ்ரீநாத் கோபால், பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்.
வடமாவட்டங்களில் இன்றளவும் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கும் தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தான் இந்த ‘ஜமா’, மேற்படி கலைஞர்களின் குழுவுக்குப் பெயர் தான் ‘ஜமா’. தாண்டவன் என்ற சேத்தனின் ஜமாவில் தொடர்ச்சியாக திரெளபதி வேசம் கட்டுகிறார் கல்யாணம் என்ற பாரி இளவழகன். இதனாலேயே அவருக்குள் பெண்மைத்தன்மை அதிகமாகிறது. இதனாலேயே அவருக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள்.
சேத்தனின் மகள் அம்மு அபிராமியோ, பாரியை தீவிரமாக காதலித்தும், தான் ஒரு ஆண் அல்ல என்ற குற்ற உணர்ச்சியால் அம்முவின் காதலை ஏற்க மறுக்கிறார் பாரி இளவழகன். இதனால் கோபமாகும் பாரியின் தாய் மணிமேகலை, “ கூத்தில் நீ அர்ஜுனன் வேசம் கட்டி ஆடு, அப்பத்தான் உனக்கு பெண் கொடுப்பான் தாண்டவன்” எனக் கூறுகிறார். பாரி இளவழகன் அர்ஜுனன் வேசம் கட்டி ஆம்பள ஆனாரா? அவருக்கு கல்யாணம் ஆனதா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் இந்த ‘ஜமா’.
இந்த ‘ஜமா’விற்கு உருவம் கொடுத்தது பாரி இளவழகன் என்றால், உயிர் கொடுத்து நமது உணர்வுக்குள் செலுத்துபவர் இசைஞானி இளையராஜா தான் என்பதில் சந்தேகமேயில்லை. டைட் குளோசப்பில் பாரி இளவழகன், திரெளபதி வேசம் போடும் படத்தின் முதல் காட்சியிலேயே தனது இசை வித்தையை இறக்குகிறார் இசைஞானி. படத்தின் க்ளைமாக்சில் அர்ஜுனன் வேசம் போட்டு பாரி இளவழகன் ஆடும் ஆவேச நடனத்தில் பொங்கிப் பிராவகம் எடுக்கிறது இசைஞானியின் பின்னணி இசை. பாரி இளவழகனின் ஆங்காரப் பெருமூச்சையே பின்னணி இசையாக்குவதெல்லாம் உலக சினிமாவில் இசைஞானியால் மட்டுமே முடியும்.
படத்தை எழுதி –இயக்கி கல்யாணம் கேரக்டருக்கு தனது நடிப்பால் மேன்மைப்படுத்தியிருக்கிறார் பாரி இளவழகன். அம்மு அபிராமியும் அபாரம் என்றே சொல்லலாம். பாரி இளவழகனின் சட்டையைப் பிடித்து, “இந்த உலகத்துல யார்டா ஆம்பள?” என குமுறும் காட்சியில் சபாஷ் அபிராமி. ஜமாவின் தலைவர் தாண்டவனாக சேத்தனும், பாரியின் அப்பாவாக கிருஷ்ணதயாளும் மற்ற கேரக்டர்களில் நடித்திருக்கும் நிஜ தெருக்கூத்துக் கலைஞர்களும் ஜமாவில் ஜமாய்த்திருக்கிறார்கள்.
குந்தி தேவியாக பாரி இளவழகன் நடிப்பதைப் பார்த்து கண்ணீர்விட்டு, அவரின் காலில் விழுந்து சேத்தன் மடியும் காட்சியுடன் க்ளைமாக்ஸை முடித்திருக்கலாம். ஆனாலும் இசைஞானியின் பின்னணி இசைக்காகவே அர்ஜுனன் வேசம் போட்டு பாரி ஆடுவதுடன் க்ளைமாக்சை முடித்திருப்பது ஜமாவை மேலும் ஜமாய்த்திருக்கிறது.
‘ஜமா’ நல்ல சினிமா..
–மதுரை மாறன்