முருக பக்தர்களுக்கு இப்போது என்ன பிரச்சினை ?
என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் யாராவது இருக்க முடியுமா?
உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் இந்து மதத்தைக் காப்பதற்காகவே அண்ணா திமுகவை உதறிவிட்டு பாஜகவில் சேர்ந்து இப்போது மாநில தலைவராகியிருக்கிறீர்கள்.
இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டிற்கு ஒரு சிறிய உதாரணம்: கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து ஏதோ பேசி விட்டார் என்று சொல்லி அவருடைய நாக்கை அறுப்பதற்கு பத்து கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்த தீவிர இந்து மதக் காப்பாளர் மட்டுமல்ல, அந்த அளவுக்கு பெரும் கோடீஸ்வரர் .
மேலும் இந்து மதத்தை விமர்சிப்பவர்களை கொலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நீங்கள் சொன்ன போது ஆர்எஸ்எஸ் காரர்களே அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள்.
ஊழல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உங்கள் மீது நிலுவையில் இருக்கின்றன என்கிற அளவுக்கு உங்களை நான் நன்கு அறிவேன். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.
வரும் ஜூன் 22 ஆம் தேதி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடிக்கு அருகில் ஒரு பிரம்மாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி நடத்தப் போவதாகவும் அதற்கான பந்தல் கால் முகூர்த்தத்தில் நீங்கள் கலந்து கொண்டது பற்றியும் ஒரு செய்தியை படித்தேன்.
இந்து முன்னணி நடத்தினால் , என்ன பாஜக நடத்தினால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
இந்த மாநாட்டில் அரசியல் எதுவும் இல்லை, முழுக்க முழுக்க பக்தர்களின் மாநாடு என்று குறிப்பிட்டி ருக்கிறீர்கள்.
அரசியல் இல்லை என்றால் முருக பக்தர்களுக்கு இப்போது என்ன பிரச்சனை?
விபூதி விலை ஏறி விட்டதா? பஞ்சாமிர்தத்துக்குப் பஞ்சம் வந்து விட்டதா?
மொட்டை அடிப்பதற்குத் தான் கட்டணம் உயர்ந்து விட்டதா?
அப்படி எதுவும் இல்லையே!
அப்படியானால் இந்த மாநாட்டின் நோக்கம் என்ன? கடந்த காலத்தில் எல். முருகன் வேல் யாத்திரை நடத்தினார். சல்லிக் காசுக்கு பயனில்லை. திருப்பரங்குன்றம் பிரச்சனையை கையில் எடுத்தீர்கள்.
அது மண்ணைக் கவ்வி விட்டது. இதற்குப் பிறகும் முருகன் மாநாடு நடத்துகிறீர்கள் என்றால் அதிலும் 5 லட்சம் பேரைக் கூட்டுவதாக அறிவித்திருக்கிறீர்கள் என்றால் நான் அறிந்த வரை இதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்க முடியும்.
இந்து முன்னணி என்ற ரவுடி கும்பலை வைத்துக் கொண்டு ஒரு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துவதற்கு நீங்கள் திட்டமிட்டு இருக்கிறீர்கள்.
அல்லது ஏதேனும் ஒரு கலவரம் நடத்துவதற்கு முயற்சிக்கிறீர்கள் என்பதாகத்தான் இருக்க முடியும்.
இதனை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு காரணம் ஏமாறப்போகும் ஒரு சில அப்பாவி முருக பக்தர்களை உங்கள் மூலமாக எச்சரிப்பதற் காகத்தான்.
காளியப்பன்.
மக்கள் அதிகாரம். தஞ்சை .
வாழ்த்துகள்