மண்ணச்சநல்லூர் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் ! எம்.எல்.ஏ. கதிரவன் உறுதி !
மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில், தி.மு.க. சார்பில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ. கதிரவன். தேர்தல் அறிவிப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே, தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றிலும் மாலை நேரங்களை மக்களுடன் செலவிட்டவர், அவர்களின் குறைகளை கேட்டறிந்தும், அவர்களோடு சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டும் தொகுதியை வலம் வந்தார்.
இந்நிலையில், மீண்டும் திமுக தலைமை தனக்கே வாய்ப்பளித்ததையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தை எல்லோருக்கும் முன்னதாக தொடங்கியும் விட்டார். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல்-05 ஆம் தேதியன்று, முசிறி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம், கொடுந்துறை, வீரமணிப்பட்டி, நாச்சம்பட்டி, ராக்கம்பட்டி, முத்தையநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் எம்.எல்.ஏ. கதிரவன் முன்னிலையில் அய்யம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த 10 பெண்கள் அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, மைக்கை பிடித்தவர் ”கிராமங்கள் அதிகம் கொண்ட இந்தத் தொகுதியில் அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் தனது முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித்திட்டப் பணிகளை பட்டியலிட்டார்.
குறிப்பாக, “பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள், சமையல் கூடங்கள்” போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததை நினைவுகூர்ந்தார்.
வாரத்தின் வியாழக்கிழமைகள் தோறும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறியும் மக்கள் தொண்டனாக தான் இதுநாள் வரை பணியாற்றி வந்ததையும் குறிப்பிட்டார்.
தன்னை மீண்டும் வெற்றிபெற வைத்தால், “இந்தப் பகுதியில் கோரைப்பாய் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மாணவர்கள் கல்வி முடித்து வேலை பெறும் வகையில் அரசு தொழிற்சாலைகள் அமைக்கவும்; தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதிகளை எளிதாக்கவும் செயற்படுவேன். தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரியாக மாற்றுவதே எனது தலையாய கடமையாக இருக்கும்.” என்று, கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடந்து தனிப்பட்ட முறையில் தனது தேர்தல் வாக்குறுதியாகவும் முன்வைத்தார்.
”திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலம் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் பெறாதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுபட்ட மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கவும்; தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ரூபாய் 8000 கூப்பன் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். ” என்பதாகவும் வாக்குறுதியளித்திருக்கிறார்.
நிறைவாக, ”எனது மக்கள் பணி, கல்விப் பணி, மருத்துவ சேவை தொய்வில்லாமல் தொடர்ந்து வழங்க நீங்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” என்ற வேண்டுகோளை மக்கள் முன் வைத்தார் எம்எல்ஏ கதிரவன்.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.