நேற்று ஒரு பர்சனல் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் “ஹே… அண்ணன் வந்துட்டாருய்யா…” என்று ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது.
ஒரு பத்து, பதினைந்து பேர் sales executives, team leaders, sales managers என்று 25 – 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அத்தனை பேரும் தவெகவுக்கு வாக்களித்தவர்கள். வெற்றிக்களிப்பில் இத்தனை நாள் திராவிடக் கட்சிகளுக்காகக் கம்பு சுற்றிய பூமர் அங்கிளான என்னை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.
அடுத்து ஒரு மினி அரசியல் விவாதம் நடந்தது.
நிறைய கேள்விகள் கேட்டார்கள். சாம்ப்பிளுக்கு சில…
“அண்ணே விஜய் ஜெயிச்சுட்டாரு, இனிமே மோடி என்ன செய்வாரு?”
நான் இயல்பாக “அவரென்ன செய்வாரு, விஜய்க்கு வாழ்த்து சொல்லுவாரு” என்றேன்.
“இல்லண்ணே, விஜய் ஜெயிச்சா அப்புறம் மோடி என்ன ஆவார்னு கேட்டேன்”
அதன்பிறகுதான் எனக்கு அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்து “டேய்… விஜய் ஜெயிச்சது அஸம்ப்ளி எலக்ஷன்ல, பார்லிமெண்ட் எலக்ஷன்ல இல்ல”
“ஓ… அது வேற, இது வேறயோ, ஆமா அது டெல்லி, இது சென்னை, விடுங்க, விடுங்க லைட்டா கன்ஃபியூஸ் ஆகிட்டேன்”
அடுத்த கேள்வி…
“அண்ணே இப்போ விஜய் ஜெயிச்சுட்டாப்ல, அப்போ அவர்தான சிஎம்”
“ஆமாப்பா அவரத்தான் ஆட்சி அமைக்க கூப்பிடுவாங்க, ஆனா மெஜாரிட்டிய ப்ரூஃப் பண்ணச் சொல்லுவாங்க”
“அதான் தமிழ்நாடு முழுக்க ஜெயிச்சுட்டோம்லண்ணே”
“இல்லப்பா மெஜாரிட்டிக்கு 118 சீட் வேணும், ஆனா நீங்க 107 சீட்லதான் ஜெயிச்சிருக்கீங்க, அதுல விஜய் ரெண்டு தொகுதி, அதுல ஒண்ணைக் கழிச்சாலும் மெஜாரிட்டிக்கு 117 சீட் வேணும், அதுக்கு இன்னும் பத்துப்பதினோரு சீட் வேணும், floor test ல பாஸ் பண்ணுனாத்தான் சிஎம்மா தொடர முடியும்”
“என்னண்ணே எலக்ஷனே முடிஞ்சு போச்சு, அதுக்கப்புறமும் டெஸ்ட்டு எக்ஸாம்னு கத சொல்றீங்க”
அடுத்த கேள்வி…
“அண்ணே பழைய திமுக மினிஸ்டர்ல கொஞ்ச பேரு ஜெயிச்சிருக்காங்கள்ல, இப்ப அவங்க அதே மாதிரி மினிஸ்டரா இருப்பாங்களா, இல்ல விஜய் அவங்கள ட்ரான்ஸ்பர் பண்ணிடுவாரா”

நான் “எதே ட்ரான்ஸ்பரா?” என்று அதிர்ச்சி ஆவதற்குள் இன்னொரு தம்பி, “டேய், திமுக தோத்திருச்சு, ஸ்டாலினே தோத்துட்டாரு, அவங்கெல்லாம் இனிமே சட்ட சபைக்கே போக முடியாது” என்றான். (He is handling bunch of executives of his team)
நான் மீண்டும் அதிர்ச்சியாக “எதே…” என்றேன்.
“இல்லையா, இதுவும் தப்பா, அவய்ங்களும் போவாய்ங்களா” என்றான் பதில் சொன்னவன்.
பிறகு எல்லோரிடமும் “உங்க தொகுதி எம்எல்ஏ யாரு, பேரென்ன, எந்த ஊர்க்காரர், என்ன தொழில் பார்க்கிறார், எந்தக் கட்சியிலிருந்து வந்தவர்” என்று கேட்டேன்.
ஒரு சிலர் பெயர்களை மட்டும் சொன்னார்கள். மற்ற விவரங்கள் தெரியவில்லை் மற்றவர்களுக்கு பெயரே தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து கேள்வி கேட்பேன் என்பதால் “நாங்க விஜய்க்குதான் ஓட்டுப்போட்டோம், மத்ததெல்லாம் தேவையில்லை” என்று முடித்துக் கொண்டார்கள்.
இவர்கள் இப்போதைக்கு தற்குறிகள்தான். ஆனால் இதைக் குறையாகவோ, கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை. கள எதார்த்தமாகப் பதிவு செய்கிறேன்.
இத்தனையும் தாண்டி இவர்கள் இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள். அவர்களது தலைவருக்கே எவ்வளவு அரசு இயந்திரத்தைப் பற்றிய அறிவு இருக்குமென்று வேறு தெரியவில்லை.
ஆனால் எதற்கும் ஆரம்பம் என்று ஒன்று வேண்டும்தானே.
அது நல்லபடியாக ஆரம்பிக்கட்டுமென்றே நம்ப விரும்புகிறேன்.
வேறு சாய்ஸ் இல்லை என்பதும் கள எதார்த்தம்தான்.
— இளங்கோவன் முத்தையா








Comments are closed, but trackbacks and pingbacks are open.