நடுக்குவாத நோயின் அறிகுறிகள்
நடுக்குவாத நோயின் அறிகுறிகளில் முக்கியமான நான்கு அறிகுறிகளை பற்றி சென்றவாரம் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக தலை முதல் கால் வரை உள்ள மற்ற அறிகுறிகளை இந்த வாரம் பார்ப்போம்.
நான் கீழே குறிப்பிட்டுள்ள இந்த அறிகுறிகளை நீங்கள் கற்பனை செய்து, மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
1. சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 18 முறை கண்களை சிமிட்டுகிறோம். ஆனால் நடுக்குவாத நோய் உள்ளவர்கள் கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பர், அதாவது கண் சிமிட்டுவது மிகவும் குறைவாக இருக்கும்.
2. வாசனைகளை சரிவர தரம் பிரித்து பார்க்க முடியாது.
3. முகத்தில் எந்த விதமான பாவனைகளையும் காண்பிக்கத் தெரியாது.
4. நாம் ஏதாவது பேசி சிரித்துக் கொண்டிருப்போம், ஆனால் நடுக்குவாத நோயாளிகள் எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் வெறித்து ஒரே இடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர்.
5. அவர்களுக்கு தெளிவாக பேசும் திறனும் குறைந்துவிடுகிறது. பேச்சில் ஏற்றம், இறக்கம் இல்லாமல் ஒரே மாதிரியான தோரணையில் பேசுவர்.
6. கை, கால்களின் சதைகள் இறுகி ஒரு தூண் போல் இருக்கும். இந்த இறுக்கத்தினால் உடலில் எப்போதுமே வலி இருப்பதாக உணர்வார்கள்.
7. நடக்கும் போது கைகள் முன்னும், பின்னும் செல்லாமல் உடலோடு ஒட்டிய வண்ணமே இருக்கும், அதாவது கைகளை வீசி நடக்காமல் இயத்திரமனிதனைப் போல் நடப்பர். அவர்களால் மெதுவாகத்தான் நடக்க முடியும். நடக்கும் போது ஒரு இறுக்க நிலையிலேயே நடப்பார்கள். சிறியதாக ஏதாவது கால்களில் தட்டுப்பட்டாலும், உடனே கீழே விழுந்து விடுவார்கள். நடக்க ஆரம்பிக்கும் போது மிகவும் மெல்ல கால்களை எடுத்து வைப்பர். அதாவது கால்களை தூக்கி வைக்காமல், தரையில் ஒட்டிய வண்ணமே நடப்பர். சிறிது நேரத்தில் முன்னோக்கி சாய்ந்துக் கொண்டு ஒடுவது போல் நடப்பர்.
8. மாடிப்படிகள் ஏறி இறங்குவதில் சிரமப்படுவர். ஆனால் இருசக்கர வாகனங்கள் நன்கு ஓட்டுவர்.
9. சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு இட்லியை மென்று விழுங்குவதற்கே 10 நிமிடங்களுக்கும் மேலாகும்.
10. யாரேனும் கேள்வி கேட்டால் உடனடியாக பதிலளிக்காமல், சற்று நேரம் யோசித்து விட்டு பொறுமையாகத் தான் பதில் கூற முடியும்.
11. தினமும் காலையில் மலம் வெளியேற்றுவதில் சிரமம் இருக்கும்.
12. இரவு தூக்கம் சரியாக வராமல் சிரமப்படுவார்கள். கை, கால்களை இங்கும் அங்கும் அசைத்த வண்ணமே படுத்து கொண்டிருப்பர்.
13. தன்னால் வேலைகளை செய்ய முடியாமல் போவதால், மன அழுத்தத்துடன் இருப்பார்கள்.
14. சிறுநீர் அடிக்கடி வரும், அதே சமயத்தில் சிறுநீர் வர ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படும்.
15. இல்லற வாழ்க்கையில் சரிவர ஈடுபட முடியாது.
16. ஞாபக மறதி அதிகம் இருக்கும். இதனால் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
17. எந்த விசயத்தையும் புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். எந்த கேள்வி கேட்டாலும் சற்று யோசித்தே பதில் கூறுவர். 20 வருடங்கள் முன்பு, அதாவது சிறிய வயதில் நடந்த விசயங்களைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருப்பர்.
ஆனால் இன்று அல்லது நேற்று நடந்த விசங்களை நினைவில் நிறுத்துவதில் சிரமம் இருக்கும். குளியலறையில் தண்ணீரை திறந்து விட்டுவிட்டு நிறுத்துவதற்கு மறந்து விடுவர். வீட்டை பூட்டினோமா? அடுப்பை நிறுத்தினோமா? என்பதை பற்றி அடிக்கடி மாறுபட்ட கருத்துகள் வந்து போகும்.
18. சிலருக்கு குறட்டை அதிகம் வருவதால் சரியான தூக்கம் இருக்காது. எனவே மறுநாள் பகல் முழுவதும் தூங்கிக்கொண்டே இருப்பர்.
நடுக்குவாத நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகளைப் பற்றி
அடுத்த வாரம் பார்ப்போம்.