தாயை இழந்து தந்தையால் கைவிடப்பட்ட நிலையிலும் விடாமுயற்சியுடன் கல்விக்காக போராடும் மதுரை மதன்மணி !
தாயை இழந்து தந்தையால் கைவிடப்பட்ட நிலையிலும் விடாமுயற்சியுடன் கல்விக்காக போராடும் மதுரை மதன்மணி ! தாயை இழந்து தந்தை உதவி மறுத்து விடுதியில் தங்கி பிளஸ் டூ முடித்து மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் மாணவன் !
மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் மணி. சமீபத்தில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மதன் மணியின் தாயார் கடந்த 2017 ஆம் வருடம் இறந்து போனார். அதனையடுத்து தந்தை முருகன் இவரையும் இவரது சகோதரியை யும் கைவிட்டு சென்றார். இந்நிலையில் சிறுவர்களான இவர்கள் இருவரும் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தனர். பள்ளி படிப்பை தொடர முடியாமல் மிகவும் சிரமப்பட்ட சூழ்நிலையில் சமூக அலுவலர்கள் சிலரின் உதவியுடன் நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார், மதன்மணி.
மேலக்குயில் குடியில் உள்ள ஜாய்ஸ் விடுதியில் தங்கி தினமும் இரண்டு கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு சென்று மீண்டும் மாலை பள்ளியில் இருந்து விடுதிக்கு நடந்து சென்று தனது படிப்பை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது பிளஸ் டூ கணிணி பிரிவில் 600க்கு 437 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார்.
குடும்ப வறுமை சூழ்நிலையில் மேல் படிப்பை தொடர முடியாத நிலையில், வில்லாரம் மார்க்கெட்டில் காய்கறி வியாபரம் செய்துவரும் பாட்டிக்கு உதவியாக தினமும் மார்க்கெட்டில் காய் வியாபரம் செய்கிறார்.
இது குறித்து மாணவன் மதன் மணி குறிப்பிடுகையில், “எனது தாயார் மீனாட் சி 2017-ஆம் ஆண்டு இறந்தார். அதனை தொடர்ந்து எனது தந்தை முருகன் எங்களை விட்டு சென்றார். நானும் எனது சகோதரி திருச்செல்வியும் எனது பாட்டி, மற்றும் சித்தி சத்யா பாராமரிப்பில் இருந்தோம். இந்நிலையில் எனது சகோதரி திருச்செல்வி திருமணமாகி சென்று விட எனது படிப்புக்கு தடை ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் சிலரின் உதவியுடன் நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படைப்பைத் தொடர்ந்தேன். அருகில் உள்ள மேலக்குயில் குடி ஜாய்ஸ் விடுதியில் எனக்கு இடம் அளித்து உதவி செய்தனர். அதனை தொடர்ந்து தினமும் மேலக்குயில் குடியில் இருந்து நாதமலை புதுக்கோட்டைக்கு நடந்தே சென்று எனது படிப்பை முடித்தேன். எனது குடும்பம் வறுமையான சூழ்நிலையில் கஷ்டப்பட்டு 600 க்கு 437 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.
வங்கி அதிகாரி அரசு அதிகாரியாக வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் , கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலையில் நான் எனது பாட்டிக்கு உதவி செய்து அவர்கள் கொடுக்கும் வருமானத்தில் எனது சித்தி குடும்பத்துடன் இருந்து வருகிறேன். முதல்வரோ உயர் கல்வித் துறை அமைச்சர் உதவி செய்தால் என்னால் படிப்பை தொடர உதவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
– ஷாகுல்
படங்கள் – ஆனந்த்