ஆடி முதல் வெள்ளி – களைகட்டிய அம்மன் கோவில்கள் ! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருச்சி மாவட்டம் , துறையூர் நகரில் உள்ள திரௌபதி அம்மன், செளண்டீஸ்வரி அம்மன், அங்காளபரமேஸ்வரி , நல்லகாவல்தாய் அம்மன், சாலை மாரியம்மன , பாலக்காட்டு மாரியம்மன், தேவி கருமாரியம்மன், தீப்பாஞ்சியம்மன், பெரிய மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
துறையூர் கூட்டுறவு நகரில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .
அம்மனுக்கு பட்டுப்புடவை சாற்றுபடி செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, அம்மனுக்கு கூழ், நீர்மோர், பானகம் , இளநீர், சர்க்கரை பொங்கல், நிவேதனம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது . வெள்ளிக்கிரீடத்தில் சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் வெள்ளிக்கிழமை என்பதால் ராகுகால நேரத்தில் பிரகாரத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பெண் பக்தர்கள் எலுமிச்சம் பழ தீபமேற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் உள்ள உற்சவர் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி மாத முதல் வெள்ளி என்பதால் துறையூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.