திமுக பிரச்சாரத்தை புறக்கணித்த கூட்டணி கட்சிகள் !
சாத்தூரில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரம், வழக்கமான அரசியல் கூட்டமாக இல்லாமல், கூட்டணிக்குள் பதுங்கி கிடந்த அதிருப்தியை வெளிப்படுத்திய நிகழ்வாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் ஆதரவாக, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரடியாக களத்தில் இறங்கி, சாத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டம், கோஷங்கள், ஆர்ப்பாட்டம்—அனைத்தும் வழக்கம்போல இருந்தாலும், இந்த நிகழ்வின் அரசியல் கவனம் வேறு திசையில் திரும்பியது.
அமைச்சர் தனது உரையில், மத்திய அரசின் எல்பிஜி கேஸ் விநியோக தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் என குற்றம்சாட்டினார். அதேபோல், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், கூட்டுக்கடன் திட்டங்கள் போன்ற நலத்திட்டங்களை சுட்டிக்காட்டியதுடன், மீண்டும் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் ₹2000 உரிமைத் தொகை மற்றும் ₹8000 டோக்கன் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
ஆனால், இந்த பிரச்சாரத்தின் உண்மையான ‘ஹைலைட்’ அமைச்சரின் உரையை விட, கூட்டணி கட்சிகளின் பங்கேற்பு இல்லாமையே ஆனது.
கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் மட்டும் கலந்து கொண்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் காணாமற்போனது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் தரப்பில், “உரிய மரியாதை வழங்கப்படவில்லை… பிரச்சாரம் குறித்த தகவல்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை… சாத்தூர் நகர நிர்வாகிகளின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை. அதனால் தான் புறக்கணித்தோம்” எனத் திறம்பட தெரிவித்துள்ளனர்.
இதோடு, பிரச்சாரத்தில் பங்கேற்கும் தொண்டர்களிடமும் சில அதிருப்திகள் மேலெழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அன்றாட கூலி வேலைகளை விட்டு பிரச்சாரத்திற்கு வரும் பலருக்கு போதுமான ஆதரவு இல்லாததால், அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சில இடங்களில் ‘விட்டமின் ப’ குறைவாக இருப்பதால் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன என்ற குரல்களும் கேட்கப்படுகின்றன.
இந்த அனைத்து அம்சங்களும் சேர்ந்து பார்க்கும்போது, இது ஒரு சாதாரண ஒருங்கிணைப்பு பிரச்சனை அல்ல… கூட்டணிக்குள் தேங்கிக் கிடக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், இது வாக்கு பரிமாற்றத்திலும் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், சாத்தூரில் திமுகக்கு நிலையான ஆதரவு இருப்பதுடன், வேட்பாளர் கடற்கரை ராஜ் மீது வாக்காளர்களிடம் நல்ல மதிப்பும் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இத்தகைய குறைகளை சரிசெய்து, பிரச்சார முறையை மேலும் ஒருங்கிணைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என நிர்வாகிகளும் தொண்டர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அரசியல் வட்டாரத்தில் இப்போது ஓடும் கிசுகிசு:
“மேடையில் கூட்டணி… உள்ளுக்குள் போட்டி!”
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.