அங்குசம் பார்வையில் ‘அனந்தன் காடு’
தயாரிப்பு : ‘மினி ஸ்டுடியோஸ்’ எஸ்.வினோத்குமார் & ‘ஷோ பீப்பிள்’ ஆர்யா. டைரக்ஷன் : ஜியென் கிருஷ்ணகுமார், ஆர்ட்டிஸ்ட் : ஆர்யா, நிகிலா விமல், ரெஜினா கஸாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ், போஸ் வெங்கட், ரஞ்சி பணிக்கர், சித்திக், அஞ்சலி நாயர், அச்யூத்குமார், ஒளிப்பதிவுன்: எஸ்.யுவா, இசை : பி.அஜனீஷ் லோக்நாத், எடிட்டிங் : ரோஹித் வாரியத், ஸ்டண்ட் : ஆர்.சக்தி சரவணன், பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே.அஹமத் & பாரஸ் ரியாஸ்.
கோவாவில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே பீச் ரிசார்ட் ஒன்றில் தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சுனிலை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். அந்த இளைஞன் யார்? சுனிலை ஏன் மிரட்ட வேண்டும்?
ஃப்ளாஷ்பேக் 1989. கடலூர் மாவட்டத்தில் ஒரு நள்ளிரவு நேரம். காரில் வரும் இளைஞன் ஒருவன் இந்திரன்ஸ் தலைமையிலான குழுவினர் வழிமறித்து, அவனை காரிலேயே கட்டிப் போட்டு தீவைத்துக் கொளுத்துகின்றனர். இந்த தீவைப்பு ஏன்?
ப்ளாஷ்பேக் 1990. ஈழத்தமிழ் மண்ணில் வல்வெட்டித்துறையில் சிங்கள ராணுவ ரவுடிகள், விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் இருக்கும் முகாம்களில் புகுந்து, “வெற்றிக்குமரன் யார்?” எனக்கேட்டு மக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். வெற்றிக்குமரன் வருகிறான். அவனையும் சித்ரவதை செய்து, அவன் கண் முன்பே இளம் பெண்ணை சீரழிக்கிறான் ராணுவக் காடையன் ஒருவன். அப்போது தீடீரென அதிரடியாக வந்து ராணுவக் காடையர்களைக் கொன்று குவித்து வெற்றிக்குமரனை காப்பாற்றி கைத்துப்பாக்கி ஒன்றைக் கொடுக்கிறார் புலிகளின் தலைவர்.
அதன் பின் 1991. தேசிய கட்சி ஒன்றின் தலைவரான ரஜிஷ் [ ராஜீவ் காந்தி] கொல்லப்படுகிறார். அப்போது கேரளாவின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார். அவரிடம் ஒரு கேரக்டர் வந்து திண்டுக்கல் வீரப்பெருமாள் முதலியார் உங்களைப் பதவி விலகச் சொல்கிறார் என மிரட்டுகிறார். இப்போது இந்திரன்ஸ் குழுவின் உதவியை நாடுகிறார் முதல்வர். அதன் பின் திண்டுக்கல், சிவகங்கை என கதை பயணிக்கிறது.
என்ன கதை? எங்கே நடக்குது? என்ன நடக்குதுன்னு நமக்கு புரிவதற்குள் இடைவேளை விட்டுவிட்டார்கள்.
பொதுவாக மலையாள சினிமாக்களில் தமிழர்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் சித்தரிப்பதையே பொழப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ‘அனந்தன் காடு’வில் தமிழர்களை, குறிப்பாக விடுதலைப்புலிகளை மேன்மையாக காட்டி, கேரள அரசியல்வாதிகளின் குறிப்பாக காங்கிரஸ் முதலமைச்சரின் கிரிமினல்தனங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஜியென் கிருஷ்ணகுமார். விடுதலைப்புலி வீரன் வெற்றிக்குமரனாக ஆர்யாவின் ஆக்ரோஷம், சாந்தம், உள்ளுக்குள் எரியும் பகை நெருப்பு, சுனிலிடம் மாட்டிச் சித்ரவதைக்குள்ளாகும் இளம் பெண்ணை அவனிடமிருந்து மீட்கும் ஆவேசம் என வெரைட்டியாக வெளுத்துக்கட்டிவிட்டார் ஆர்யா. ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணனின் திண்டுக்கல் வீரப்பெருமாள் முதலியாரைப் போட்டுத் தள்ளும் ஆக்ஷன் சீக்வென்ஸ், க்ளைமாக்ஸில் ராஜஸ்தானில் கேரள முதலமைச்சரைப் போட்டுத்தள்ளும் ஆக்ஷன் சீக்வென்ஸிலும் கடும் உழைப்பைக் கொட்டியுள்ளார் ஆர்யா. சபாஷ் ப்ரோ.
சூர்யாவின் ‘கருப்பு’வில் அப்பாவியாக வந்த இந்திரன்ஸா அனந்தன் காட்டில் இப்படி ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார் என பிரமிக்க வைக்கிறார். அவரிடம் வேலைபார்க்கும் இளைஞர்களில் தங்கராஜ் என்ற கேரக்டரில் நடித்திருப்பவரின் நடிப்பு அபாரம்.
சினிமா நடிகையாகவே வரும் ரெஜினா கஸாண்ட்ராவுக்கு இரண்டே சீன்கள் தான். நிகிலா விமலுக்கும் அவ்வளவாக வேலை இல்லை. ஈழத்தமிழனாக சில காட்சிகளே வந்தாலும் போஸ்வெங்கட்டிற்கு வெயிட்டான கேரக்டர். கொடூர போலீஸாக சுனிலுக்கு க்ளைமாக்ஸில் கரெக்டாக கனெக்ஷன் கொடுத்துள்ளார் டைரக்டர்.
யுவாவின் ஒளிப்பதிவும் அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் அனந்தன் காட்டின் பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லருக்கு எஃபெக்டை கூட்டுகிறது.
கேரள முதலமைச்சரை திண்டுக்கல் வீரப்பெருமாள் முதலியாரால்[அச்யூத்குமார்] எப்படி மிரட்ட முடியும்? என்ற சந்தேகம் எழுகிறது. அதே போல் இடைவேளை வரை கதையைப் புரிந்து கொள்வதும் ரொம்பவே சிரமம்.
அங்குசம் பார்வையில் ‘அனந்தன் காடு’ 43/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.