‘ஆனந்தன் காடு’ தமிழர்களுக்கெதிரான படமா?” – டைரக்டரின் விளக்கம் !
‘மினி ஸ்டுடியோ’ எஸ்.வினோத்குமார் &’ ஷோ பீப்பிள்’ பேனரில் ஆர்யா தயாரித்து வரும் 25-ஆம் தேதி மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் படம் ‘ஆனந்தன் காடு’. மலையாள இயக்குனர் ஜியேன் கிருஷ்ணகுமார் டைரக்ட் பண்ணியிருக்கும் இப்படத்தில் நடித்துள்ளவர்கள் பெரும்பாலும் மலையாள நடிகர்கள் தான். ஆர்யா மட்டும் தான் தமிழ் நடிகர்[ இவரும் மலையாளிதானேனு யாரும் கேட்ராதீக]. இப்படத்தை கோகுலம் மூவிஸ் கோபாலன் ரிலீஸ் பண்ணுவதால் உற்சாகமடைந்த எஸ்.வினோத்குமார், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தினார். தமிழர்களையும் குறிப்பாக விடுதலைப்புலிகளையும் தவறாகச் சித்தரிப்பது போல டிரெய்லரில் காட்சிகள் இருந்தன.

டிரெய்லர் ஸ்கிரீனிங் முடிந்த பிறகு பேசிய டைரக்டர் ஜியேன் கிருஷ்ணகுமார், “இது வெறும் ஆக்ஷன் படமல்ல. மனிதர்களின் வாழ்க்கையில் பல அடுக்குகள் கொண்ட உணர்வுகளை உள்ளடக்கியது தான் இந்த ஆனந்தன் காடு. மற்றபடி தமிழர்களுக்கு எதிராகவோ, விடுதலைப்புலிகளுக்கு எதிராகவோ படத்தில் எந்த ஒரு காட்சியும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்கிறேன். எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கில் இதை நாங்கள் உருவாக்கவில்லை” என விளக்கம் அளித்தார்.
ஹீரோ ஆர்யா, “முரளிகோபியின் வலுவான கதையும் திரைக்கதையும் ஆனந்தன் காடுக்கு பெரும்பலம். எந்த சமரசமும் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார் டைரக்டர். இதில் யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை. தமிழர்களை தவறாக காண்பிக்கும் படத்தில் நான் இருக்கமாட்டேன்”.
எஸ்.வினோத்குமார், “அறுபது கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது படம். ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிறோம். இதற்காக கோகுலம் கோபாலன் சாருக்கு மிகப்பெரிய நன்றி”.
நடிகர் இந்திரன்ஸ், “தமிழில் நான் கருப்பு படத்தில் கமிட்டாவதற்கு முன்பே இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டேன். எனது சினிமா கேரியரில் மிகவும் சவாலான கேரக்டர் கொடுத்துள்ளார் டைரக்டர்”.
— ஆண்டவர்









Comments are closed, but trackbacks and pingbacks are open.