அது என்ன பாகிஸ்தான் பார்டரா ?!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைக்கோடியில் கல்லணை உள்ளது. திருச்சி மாவட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் சுமார் 90 கோடி மதிப்பில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அப்போது இருந்த எம்.எல்.ஏ. எம்.ரெத்தினசபாபதியின் பெரும் முயற்சியில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
இந்த வழியாக போக்குவரத்து நடைபெற்றாலும் கூட, திருச்சியில் இருந்து கல்லணை வரை வரும் பேருந்து கிளிக்கூடு என்ற இடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச்சென்று விடுவதால், அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வரும் பொதுமக்கள் நெடுதூரம் நடந்து வந்து பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதேபோல், தஞ்சாவூரில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பேருந்துகள் கல்லணையில் இறக்கிவிட்டுச் செல்வதால், திருச்சி செல்லும் பயணிகள் வெகுதூரம் கிளிக்கூடு பகுதிக்குச் சென்று பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக, வயதானவர்கள் பள்ளி – கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டியபிறகும் இந்த இரு வழித்தட பேருந்துகளையும் தஞ்சை பக்கமும் திருச்சி பக்கமும் பாலம் வழியாக வந்து பயணிகளை இறக்கிவிட்டு செல்லும் வகையில் சம்பந்தபட்ட இரு போக்குவரத்து துறை அதிகாரிகளும் முயற்சிப்பதோடு புதியதாக வந்த அரசின் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
— தஞ்சை க.நடராசன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.