சேலம் காங்கிரஸில் சலசலப்பு – வரிசையாக செல்லும் புகார் கடிதம்!
சேலம் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், இவர் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த நிலையில் இவர் மீது காங்கிரஸ் தலைமைக்கு வரிசையாக ரிப்போர்ட் செல்ல தொடங்கி இருக்கிறது.
இதுகுறித்து சேலம் காங்கிரஸ் கதர் சட்டைக்காரர் புலம்பியது, மாநகர் மாவட்டத் தலைவர் கட்சி மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தை விட கரன்சி மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். சேலம் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடங்கி, திமுக தலைமை கொடுத்த தேர்தல் செலவு வரை எதிலும் சரியான கணக்குகள் அவரிடம் இல்லை.
மேலும் பிரச்சாரத்தில் கூட ஈடுபாடோடு செயல்படவில்லை, இதனாலேயே 5 வார்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இரண்டு வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் காங்கிரஸ் கவுன்சிலர்களை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர்களோடு பாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார் என்ற செய்தியும் உள்ளது.
மேலும் சொல்லப்போனால் சேலம் மாநகராட்சி துணை மேயர் காங்கிரசுக்கு கிடைக்க மாவட்டத் தலைவர் காரணம் கிடையாது. மாறாக காங்கிரஸுக்கு துணை மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில தலைமை எடுத்த முயற்சியின் அடிப்படையில்தான் துணை மேயர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தோல்வியடைந்த வேட்பாளர்கள் மற்றும் சீட்டு கிடைக்காத நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் மீது வரிசையாக ரிப்போர்ட் அனுப்பி வருகிறார்களாம்.