”கெவர்மெண்டு ஸ்கூல்ல … எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் சர்வ சாதாரணமாக கஞ்சா புழங்குது. ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. இதுக்கு ஏதாவது நடவடிக்கை எடுங்க”னு, துணை சபாநாயகரிடம் த.வெ.க. நிர்வாகி கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிசங்கர் துணை சபாநாயகராக பதவியேற்ற பிறகு, முதன் முறையாக மே-15 அன்று துறையூருக்கு வருகை புரிந்தார். அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு சிறப்பான வரவேற்பளித்தனர். துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா முதல் அண்ணா பேருந்து நிலையம் வரை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ திறந்த காரில் பொதுமக்களை சந்தித்தவாறு ஊர்வலமாக வந்த துணை சபாநாயகர், அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். துறையூர் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த ரவிசங்கரை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது உடன் இருந்த த.வெ.க. நிர்வாகிகள் சிலர் துறையூர் பகுதியில் உள்ள குறிப்பாக சிலோன் ஆபீஸ் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மலையப்பன் சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் குறிப்பிட்ட ஒரு சில பள்ளிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் புழக்கம்அதிகரித்து காணப்படுவதாகவும்; இதனால் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என துணை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.
நிர்வாகிகளின் கோரிக்கையை கேட்ட துணை சபாநாயகர் ரவிசங்கரும் , “சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினராவது போதை வஸ்துக்களின் பிடியில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில், துறையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக கல்விக்கூடங்கள் அருகில் இது போன்ற போதை வஸ்துக்களின் புழக்கத்தை தீவிரமாக கண்காணித்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷிடம் வலியுறுத்தி கூறினார்.
இதனைக் கேட்ட காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ், ”இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ” என துணை சபாயநகர் ரவிசங்கரிடம் உறுதியளித்தார். துறையூர் பகுதியில் கல்விக்கூடங்கள் அருகில் கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கம் அதிகரித்துள்ளது குறித்து ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் துணை சபாநாயகர் இடத்தில் குற்றம் சாட்டிய சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— ஜோஷ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.