கட்சிகளை சேர்த்து வைக்கும் கார்ப்பரேட்

0

திமுகவையும், அதிமுகவையும் எம்ஜிஆர் காலத்திலேயே சேர்க்க ஒரு முயற்சி நடந்ததாகவும், அதன் பின் அது அப்படியே கைவிடப்பட்டதாகவும் திராவிட இயக்க வட்டாரத்தில் சில மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
ஆனால், திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து வைப்பது பெரிய விஷயம் அல்ல. இந்தியா சிமெண்ட் சீனிவாசன் போன்ற மாபெரும் தொழிலதிபர்கள் நினைத்தால், அதை எளிதில் நடத்தி வைத்துவிடலாம் என்ற ஒரு கமெண்ட், சென்னையில் நடந்த அந்த புத்தக வெளியீட்டு விழாவில் எதிரொலித்தது.

பிரபல தொழிலதிபரும், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைவரும், கிரிக்கெட் வாரியங்களில் பல உயர் பொறுப்புகளை வகித்து இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருப்பவரான என்.சீனிவாசன் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் Defying the Paradigm டிசம்பர் 28 சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது.

என்றைக்கோ அவுட் ஆவார் என்று வர்ணனையாளர்களால் கணிக்கப்பட்டாலும்… எதிர்க்கட்சிகளின் பலமுனை பாலிடிக்ஸ் பந்துகளை எப்படி எப்படியோ முறியடித்து, இன்னும் நாட் அவுட் முதல்வர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிசாமி புத்தகத்தை வெளியிட. கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில்தான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் சீனியர்களான துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, எ.வ.வேலு, தனது மருமகன் சபரீசன் புடை சூழ வந்து கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்துவிட்ட ஸ்டாலின் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டார். கொஞ்ச நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்து விழா மேடைக்கு சென்றார்.
புத்தகம் வெளியீட்டுக்குப் பின் பலர் பேசுவது தமிழ் மரபு. ஆனால் இந்த விழாவில் டோனி உள்ளிட்ட விஐபிகள் பேசி முடித்த பின்னர்தான் புத்தகத்தை வெளியிட்டனர். புத்தகம் வெளியிட்ட பின் பேசியவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சீனிவாசனும் மட்டும்தான்.

இவ்விழாவில் ஸ்டாலினை எதிரே அமர வைத்துக் கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவில் தமிழ்நாடு மிக முன்னேறிய நிலையில் இருக்கிறது. தொழில் துறையில் நாம் சிறப்பாக இருக்கிறோம். இதற்குக் காரணம் தமிழகத்தின் மனித வளம், தடையில்லா மின்சாரம், தொழில் நடத்த சுமுகமான நிலைமைதான்” என்று அடுக்கினார்.

இது கார்ப்பரேட் நிகழ்ச்சி என்பதால் தமிழக முதல்வருக்கும் அடுத்து நிறைவாக இந்தியா சிமெண்ட் சீனிவாசன் பேசினார். அவர் தமிழக முதல்வரே, அமைச்சர்களே, எதிர்க்கட்சித் தலைவரே என்றுதான் தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன் லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை நியமிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்று சொல்லி தவிர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆனால் இந்தியா சிமெண்ட் என்ற
கார்ப்பரேட் நிறுவனம் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டாலும் பரவாயில்லை
என்று கலந்துகொள்கிறார்.

இதே நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமியும் கலந்துகொண்டார்.
இதில் இருந்து தமிழகத்தில் கழகங்களை மட்டுமல்ல…வேறு எந்த துருவங்களையும் கூட கார்ப்பரேட்டுகள் நினைத்தால் சேர்த்து வைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் விழாக்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துகொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை.
ஆனால் மக்கள் பிரச்சினைகளிலும் முக்கிய ஆலோசனைகளிலும் கூட இதே போல இணைந்து கலந்துகொண்டால் என்ன என்பதுதான் இவ்விழாவைப் பார்த்தவர்களின் கருத்து.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.