திமுக vs மதிமுக… அதிமுக–பாஜக எண்ட்ரி: சாத்தூர் தொகுதி யார் வசம்?
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், விருதுநகர் மாவட்ட அரசியல் வரைபடத்தில் சாத்தூர் தொகுதி ‘ஹாட் ஸ்பாட்’ ஆக மாறியுள்ளது. கூட்டணிக்குள் நடக்கும் அமைதியான இழுபறி, வெளிப்படையாக கட்சிகள் இடையே மோதலாக மாறும் சூழல் உருவாகி வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.
ஒருபுறம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), “தற்போது எங்களிடம் உள்ள தொகுதி” என்ற வாதத்துடன் சாத்தூரை மீண்டும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என உறுதியான அழுத்தம் கொடுத்து வருகிறது. மறுபுறம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தரப்பும் இந்த தொகுதியை விட தயங்குகிறது. கடந்த முறை கூட்டணிக்காக விட்டுக்கொடுத்த தொகுதியை, இம்முறை நேரடியாக கைப்பற்ற வேண்டுமா என்ற கேள்வி திமுகவின் உள்ளக ஆலோசனைகளில் முக்கியமாக எழுந்துள்ளது.

அந்த வரிசையில், சாத்தூரில் திமுக சார்பில் கடற்கரை ராஜை களமிறக்கும் வாய்ப்பு குறித்து தீவிரமாக பேசப்படுகிறது. அதேசமயம், திமுக சார்பில் இன்னும் இரு முக்கிய உள்ளூர் நிர்வாகிகளின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக சமன்பாடு, வாக்கு வங்கி, உள்ளூர் செல்வாக்கு ஆகிய மூன்று கோணங்களில் கணக்கிட்டு திமுக தனது வேட்பாளர் தேர்வை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.
இந்த அரசியல் கணக்கின் மையத்தில் இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். விருதுநகர் மாவட்டத்தில் நிர்வாக மற்றும் கட்சி அமைப்பு மீது வலுவான செல்வாக்கு கொண்டுள்ள இவர், சாத்தூர் தொகுதியை தனது அரசியல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக வைத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. எனவே, “யாருக்கு சீட்?” என்ற கேள்விக்கு இறுதி பதில் அவரது சைகையிலேயே இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

மேலும், தற்போதைய எம்.எல்.ஏ ஏ.ஆர்.ஆர். ரகுராமன் மேற்கொண்டு வரும் தரை மட்ட போராட்ட அரசியல் — குறிப்பாக மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் — மதிமுகவின் உரிமை வாதத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் பார்க்கப்படுகிறது. இதனால் “சின்னம் யாருக்கு? தொகுதி யாருக்கு?” என்ற இரட்டை சிக்கல் கூட்டணிக்குள் தீவிரமாகியுள்ளது.
இதற்கிடையில், எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தரப்பும் சாத்தூரில் வலுவான போட்டி களத்தை அமைக்க முயற்சித்து வருகிறது. அக்கட்சியின் சார்பில் ரவிச்சந்திரன், ராஜவர்மன் போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தரப்பில் மாநில தலைவர் நைனா நாகேந்திரன் அவர்களின் மகன் பெயரும் சாத்தூர் தொகுதியைச் சுற்றி அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது.

இதே நேரத்தில், அதிமுக கூட்டணிக்குள் சில தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த ஆரம்பகட்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் மூன்று தொகுதிகளில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் தனித்த சின்னத்தில் களம் காணும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் தரப்பில் பேசப்படுகிறது. இந்த கணக்கு சாத்தூர் போன்ற முக்கிய தொகுதிகளில் எதிர்க்கட்சியின் திட்டத்தையும் பாதிக்கக்கூடும்.
இவ்வாறான சூழலில், திமுகவின் உள்ளக சமநிலையையும் கவனத்தில் கொள்ளும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடற்கரை ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு இல்லையெனில், அவர்களுக்கு எதிர்காலத்தில் முக்கிய உள்ளாட்சி அல்லது கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படும் என்ற ‘அமைதிப் பேக்கேஜ்’ பேசப்படுவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் மகன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் — திமுக இளைஞரணி விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் — இவருக்கும் சாத்தூர் தொகுதியில் வாய்ப்பு இருக்கலாம் என்ற புதிய அரசியல் பேச்சும் கிளம்பியுள்ளது. இது வெளிவந்துள்ள கணக்குகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
முடிவாக, சாத்தூர் தொகுதி இம்முறை சாதாரண ஒதுக்கீடு அல்ல; கூட்டணிக்குள் பவர் பேலன்ஸ், உள்ளக அரசியல் சமாதானம், எதிர்க்கட்சியின் கணக்கு — இவை அனைத்தும் மோதும் அரசியல் ரணகளமாக மாறியுள்ளது. இறுதி கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தைகளே இந்த பரபரப்பான சாத்தூர் புதிருக்கு தீர்வு காணப் போகின்றன.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.