எல்ஃபின் மோசடி வழக்கில் முக்கிய ஏஜெண்ட் சுந்தர்ராஜன் அதிரடி கைது !
எல்ஃபின் மோசடி வழக்கில் எல்ஃபின் ராஜாவின் நம்பிக்கையான கூட்டாளியும் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய ஏஜெண்டுமான சுந்தர்ராஜன் என்பவரை திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல இடங்களில் கிளை பரப்பி இயங்கி வந்த ELFIN E.Com Pvt Ltd என்ற நிறுவனம்; பொதுமக்களிடமிருந்து 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துவிட்டு பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றியதாக புகாரில் சிக்கியது.
திருச்சி எல்ஃபின் மோசடி 2022 ஆம் ஆண்டு அம்பலமான நிலையில், இதே கும்பல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பதும்; அவை தொடர்பாக வழக்குகள் பதிவாகியிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, R.M.W.C, ELFIN E.com.pvt Ltd..Sparrow Global Trade Trichy ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான மோசடி வழக்குகள் திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை எல்ஃபின் மோசடி நிறுவனத்தின் உரிமையாளர் எல்ஃபின் ராஜா தொடங்கி, 18 பேருக்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தென்காசி மாவட்டத்தின் முக்கிய ஏஜெண்டாக இருந்து வந்த சுப்பிரமணி (எ) v.S.மணியை கைது செய்திருந்தார்கள். அடுத்து, 2024 – டிசம்பரில் தொட்டியத்தை சேர்ந்த சந்திரசேகரனை கைது செய்திருந்தார்கள். இதன் தொடர்ச்சியாகவே, தற்போது சுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

விருதுநகரில் R.M.W.C என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு, மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 2019 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கிலும் சுந்தர்ராஜனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
மிக முக்கியமாக, கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்து வந்த சுந்தர்ராஜன், எல்ஃபின் ராஜாவுக்கு நம்பகமானவராக இருந்து வந்திருக்கிறார் என்கிறார்கள். எல்ஃபின் ராஜா பல்வேறு கம்பெணிகளின் பெயரை சொல்லி வசூலித்த பணத்தையெல்லாம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலத்தில்தான் முதலீடு செய்திருக்கிறார் என்கிறார்கள். அவ்வாறு பல்வேறு இடங்களில் நிலத்தை வாங்கிப்போடுவதற்கு நம்பகமான மேனேஜராக சுந்தர்ராஜன் செயல்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் தொடர் கண்காணிப்பில், சிவகாசியில் பதுங்கியிருப்பதையறிந்து, கடந்த ஜன-27 ஆம் தேதியன்று கைது செய்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து, திருச்சி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளை முடித்து, இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
மேலும், R.M.W.C, ELFIN E.com.pvt Ltd..Sparrow Global Trade Trichy ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்திருப்பின் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், மன்னார்புரம், திருச்சிராப்பள்ளியில் புகார் அளிக்கலாம் என்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, கவர்ச்சிகரமான திட்டங்களுக்கும் அதிக வட்டிக்கும் ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் பணத்தை இழந்து ஏமாறாதீர்கள் என்றும் எச்சரிக்கிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
— அங்குசம் செய்திப் பிரிவு.