Elfin மோசடியின் முதல் முகம் RMWC ! திருச்சி EOW முக்கிய அறிவிப்பு !
Elfin மோசடியின் முதல் முகம் RMWC | திருச்சி EOW முக்கிய அறிவிப்பு
RMWC – என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் யாரேனும் இருந்தால், புகார் அளிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
ராஜா மருதுபாண்டியன் வெல்த் கிரியேஷன் ”Raja Maruthupandiyan Wealth Creation” என்பதன் சுருக்கம்தான் RMWC. தமிழகத்தில் பரவலாக பேசப்பட்ட எல்ஃபின் மோசடியின் தொடக்கம் RMWC மோசடிதான். எல்ஃபின் மோசடியின் சூத்திரதாரியான எல்ஃபின் ராஜா (எ) அழகர்சாமி என்பவருடன் மருதுபாண்டியன் என்பவர் கூட்டாக இணைந்து கடந்த 2013 இல் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கிய நிறுவனம்தான் RMWC. கம்பெனி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் வழக்கில் சிக்கியது. 2015 இல் விருதுநகர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் 08/2025 வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில், முதல் கம்பெனியே மோசடியில் சிக்கியதையடுத்து கூட்டாளி மருதுபாண்டியன் விலகிவிட, எல்ஃபின் ராஜா (எ) அழகர்சாமி, தனது சகோதரர் ரமேஷ்குமாரை புதிய கூட்டாளியாக வைத்துக் கொண்டு பல்வேறு பெயர்களில் அடுத்தடுத்த கம்பெனிகளை தொடங்கி தொடர் மோசடியில் ஈடுபடத் தொடங்கினர். தற்போது, RMWC உள்ளிட்டு எல்ஃபின் ராஜா (எ) அழகர்சாமி குரூப்ஸ் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடத்திய நிறுவன மோசடி வழக்குகள் அனைத்தும் ”எல்ஃபின் மோசடி” என்பதாக ஒருங்கிணைந்த முறையில் ஒன்றாக்கப்பட்டு விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராக, திருச்சி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் வழக்கை விரைவுபடுத்தி வருகிறார். இந்நிலையில்தான், RMWC நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி, நிர்மலா, தனபாக்கியம், சாந்தி ஆகியோரால் பாதிக்கப்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கடந்த 2019 இல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகளை தாக்கியது தொடர்பாக புதிய வழக்கு ஒன்று பதிவானது. தற்போது அந்த வழக்கும் எல்ஃபின் மோசடி வழக்கோடு சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், அதாவது மதுரையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி, நிர்மலா, தனபாக்கியம், சாந்தி ஆகியோரால் பாதிக்கப்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்களது புகார்களை, அளிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
புகாருக்கு அணுக வேண்டிய முகவரி :
திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகம்,
எண்: 10, அப்துல்சலாம் தெரு, மன்னார்புரம், திருச்சி – 620020.
அலுவலக வேலை நாட்களில் நேரில் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறும், ஏற்கெனவே, புகார் அளித்தவர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 161 வாக்குமூலம் வழங்க வருகைதருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.