திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து செய்த கண்தானம் மற்றும் உடல்தானம் !

0

திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து செய்த கண்தானம் மற்றும் உடல்தானம்

திருச்சி, திருவெறும்பூர், குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் கரு. பேச்சிமுத்து. வயது 79. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஓய்வுக்குப் பிறகு, திருக்குறள் புத்தகத்தை அச்சிட்டு, இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வந்தார். திருக்குறளும் ஏழிளந்தமிழும், பிழை தவிர் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களிடையே உரையாற்றி தமிழ்ப்பணி செய்து வந்தார்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான சிறப்பு ஊதியம், அரசுப் பேருந்துகளில் துணையாள் ஒருவருடன் இலவசப் பயணம் ஆகிய சிறப்புகளைச் செய்து, தமிழ்நாடு அரசு இவரைக் கௌரவித்தது.

தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து
தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து

சமூக அக்கறை கொண்ட இவர், கண்தானப் பதிவும், உடல்தானப் பதிவும் செய்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 30.08.2023 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது விருப்பப்படி, அவரது குடும்பத்தினர், திருச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு அவரது கண்களை தானமாக வழங்கினர். அவரது உடலை திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

மனிதநேயம் மிக்க இச்செயலுக்கு, அப்பகுதி மக்கள், அவரது குடும்பத்தினரைப் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.