எஸ்.எஸ்.எல்.சி. – எம்.பி.பி.எஸ்… ரெண்டும் நாலு எழுத்துதானே?
மதுரை வாடிப்பட்டி அருகே வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் 20 வருடங்களாக …
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியில் ஜெயா கிளினிக் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார் ஜெயா(எ) ஜெயக்குமார். இருபது வருடங்களாக வராத சந்தேகம், சமீபத்தில் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. சந்தேகமடைந்த சிலர், மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு புகாரை தட்டிவிட்டனர்.
வழக்கமாகவே, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுபோன்ற போலி கிளினிக்குகளை கண்டறிந்து களையெடுப்பதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுள் ஒன்று. பாவம் கடுமையான பணிச்சுமையின் காரணமாக இதுபோன்ற களப்பணிகளுக்கு செல்ல முடியாத இக்கட்டில் இருந்தநிலையில், புகார் வந்த பிறகும் போகாமல் இருந்தால் எப்படி? சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் கிளம்பிச்சென்றார்கள்.
சர்ச்சைக்குரிய ஜெயா கிளினிக்கை அதிரடியாக சோதனை நடத்தியதில், ஜெயா (எ) ஜெயக்குமாரின் கல்வித்தகுதி வெறும் எஸ்.எஸ்.எல்.சி.தான் என்பதை கண்டுபிடித்தார்கள். மேலும், எம்.பி.பி.எஸ். டாக்டரை போலவே, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவமுறையில் ஊசி, மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்ததையும் அவர்களின் புலன் விசாரணையில் கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து போலி டாக்டர் ஜெயா (எ) ஜெயக்குமாரை வாடிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். நடிகர் விஜயகாந்தின் புகழ்பெற்ற காமெடி வசன காட்சியைப்போல, எஸ்.எஸ்.எல்.சி… எம்.பி.பி.எஸ். ரெண்டும் நாலு எழுத்துதான் என்பதாக நினைத்து மருத்துவம் பார்த்திருப்பாரோ, போலி டாக்டர் ஜெயா (எ) ஜெயக்குமார் ?
— ஷாகுல், படங்கள் : ஆனந்த்








Comments are closed, but trackbacks and pingbacks are open.