மத்திய அரசு என்ன மிரட்டினாலும் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
“பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிடத் தேர்ச்சி விகிதம் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் இதற்காகத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 5-வது இடத்தையும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது பெருமைக்குரியது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் வருத்தப்படாமல், துணைத் தேர்விற்குத் தயாராக வேண்டும்.
பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டிற்குப் போதுமானது. மத்திய அரசு என்ன கூறி மிரட்டினாலும், ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இருமொழிக் கொள்கையை ஆதரிக்கும் புதிய அரசின் பின்னால், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நிற்கும். தமிழ்நாட்டின் நலன் சார்ந்து அனைவரும் ஓரணியில் நிற்போம்” என்றார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.