வாக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
Types of Votes – வாக்குகளின் வகைகள்.
1) 49 M
ஒரு வாக்காளரின் அடையாளம் உறுதி செய்தபின், வாக்காளர் பட்டியலில் அவர் பெயரைக் குறியீடு செய்த பின்னர், 17 A என்னும் பதிவேட்டில் அவர் வரிசை எண்ணும் எழுதி அவரிடம் கையொப்பமும் பெற்று, வாக்களிப்பதற்கான சீட்டையும் அவரிடம் தந்து அடையாள மையை இடக்கை ஆள்காட்டி விரலில் வைத்த பிறகு, வாக்கு செலுத்தும் சிறு பகுதிக்குள் செல்லும்முன், தான் வாக்களிக்கப்போகும் சின்னத்தையோ வேட்பாளர் பெயரையோ சத்தமாகக் கூறினால், அதாவது வாக்களிக்கும் ரகசியத்தை மீறினால் அவரை வாக்களிக்க அனுமதிக்ககூடாது.
போலிஸ் உதவியுடன் அவரை வாக்குச்சாவடியிலிருந்து வெளியேற்றியவுடன் 17 A பதிவேட்டில் அவர் பெயருக்கு நேரே உள்ள குறிப்புப் பகுதியில் ‘ Not allowed to vote ‘என்று எழுதி வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் கையொப்பமிட வேண்டும். இதைக் குறிப்பிடும் படிவம்தான் 49 M.
2) 49 0
வாக்காளருக்கு மை வைத்த பின் மனம் மாறி வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறினால் , அதேபோல 17 A பதிவேட்டில் அவர் பெயருக்கு நேரே ‘ Refused to vote’ என்று எழுதி மீண்டும் வாக்காளரின் கையொப்பத்தைப் பெற்று அங்கு முதன்மை அலுவலர் கையொப்பம் இட வேண்டும். இதன் விவரத்தை 49 0 என்னும் படிவத்தில் குறித்து வைக்க வேண்டும்.

3) 49 P (Tendered Vote)
ஒரு வாக்காளர் வேறு ஒருவரின் வாக்கினை செலுத்தி விட்டு சென்ற பின், உண்மையான வாக்காளர் வந்தால் அவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
(புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இருப்பதால் இந்த மாதிரி வாக்களிக்க சாத்தியமில்லை)
ஒரு வாக்காளரின் அடையாளத்தை, அவர்கள் கொண்டு வரும் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தோடு வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படத்தை ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே வாக்குப் பதிவு அலுவலர் 1 வாக்காளர் பட்டியலில் ( marked copy of Electoral roll) குறியீடு செய்வார்.
ஒருவேளை புகைப்படம் ஒத்து வரவில்லை அல்லது ஆளே வேறு என்றால், முதல் அலுவலர் சொல்வதற்கு முன்னரே , ஒவ்வொரு கட்சி மற்றும் வேட்பாளர் சார்பாக வாக்காளர் பட்டியலோடு வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருக்கும் வாக்குச்சாவடி முகவர்களே (ஏஜெண்ட்) சொல்லி விடுவார்கள் இவர் வேறு யாரோ என்று. தலைமை அலுவலர் விசாரித்து அவரை வெளியேற்றி விடுவார்.
எனவே ஒரு வேட்பாளரின் வாக்கை இன்னொருவர் செலுத்தவே முடியாது. இதில் தவறு ஏற்பாட்டால் வாக்குச் சாவடி அலுவலர்கள்தான் பொறுப்பு, பதில் சொல்ல வேண்டும். விசாரணை என்று அலைய வேண்டியிருக்கும். எனவே ஒருவர் ஓட்டை இன்னொருவர் போட அனுமதிக்கவே மாட்டார்கள். இதற்குத்தானே ஏஜெண்ட்டுகள் உள்ளே இருக்கிறார்கள்? அவர்கள் எப்படி ஒத்துக் கொள்வார்கள்? இதைத்தான் விஷயம் புரியாமல் மக்கள் ‘ கள்ள ஓட்டு’ என்கிறார்கள்.
ஒருவேளை, ஒருவர் ஓட்டை இன்னொருவர் செலுத்தியிருந்தால், அவரையும் வாக்களிக்க அனுமதிக்கலாம். ஆனால் வாக்குப் பதிவு எந்திரத்தில் செய்ய முடியாது. அவருக்கு அதே வேட்பாளர்கள் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டும் முத்திரையும் வழங்கப்படும். அதில் அவர் தன் வாக்கைச் செலுத்துவார். உரிய படிவத்தில் அவரிடம் கையொப்பம் பெற்று பிறகு அந்த வாக்குச் சீட்டைத் தனி உறையில் வைத்து அரக்கு சீல் முத்திரையிட்டு பாதுகாக்கப்பட்டு மண்டல அதிகாரியிடம் வழங்கப்பட வேண்டும்.
எனவே ஒருவர் ஓட்டை இன்னொருவர் செலுத்த முடியாது.அப்படிச் செலுத்தியிருந்தாலும் அவர் வாக்களிக்கலாம்.இதுதான் 49 P.
4.Challenge Vote (சவால் வாக்கு)
வாக்காளர் ஒருவரின் அடையாளம் பற்றி முகவர் ஆட்சேபனை தெரிவித்தல். VAO மற்றும் Police விசாரணைக்கு பின், அவர் உண்மையான வாக்காளர் என்பது உறுதியானால் அவரை வாக்களிக்க அனுமதிக்கலாம்.
சேலஞ்ச் ஓட்டு என்பது, வாக்காளர் ஒருவரின் அடையாளம் பற்றி முகவர் ஆட்சேபனை தெரிவிப்பது தான். முகவர் இப்படி தெரிவிக்கும் பட்சத்தில், அவரிடமிருந்து ரூ.2 பெறுவார்கள். ஆட்சேபனை தவறு என்றால், அந்த வாக்காளர் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆட்சேபனை சரி எனில், அந்த வாக்காளரை போலீசில் ஒப்படைப்பர்.பின், முகவரிடமிருந்து பெற்ற ரூ.2ஐ அவரிடம் திருப்பி வழங்குவர். இது தான் சேலஞ்ச் ஓட்டு.இதையும் அதற்குரிய படிவத்தில் குறிக்க வேண்டும்.
5) 49 N
Blind & மாற்றுத் திறனாளி வாக்காளர் உடன் 18 வயது நிறம்பிய உதவியாளரை அழைத்து வருதல், Blind-EVM உதவியாளர் அனுமதி.
மாற்றுத் திறனாளி -EVM உதவியாளர் அனுமதியில்லை.
6) 49 M A Testing Vote( பரிசோதனை வாக்கு)
இது மிக முக்கியமானது.ஒரு வாக்காளர் தான் வாக்களித்த பின் யாருக்கு வாக்களித்தாரோ அந்த சின்னம் தெரியாமல் VVPAT-ல் வேறு சின்னம் தெரிவதாக கூறுதல்.
அப்படித் தெரிவித்தவுடன் துணை வழி 1-ல் உரிய உறுதிமொழி-யை உரிய படிவத்தில் வாங்க வேண்டும்.
பின்பு அந்த வாக்காளருடன் வாக்குச்சாவடி முகவர்கள் சென்று அவரை வாக்குப்பதிவு இயந்திரத்தில் இன்னொரு வாக்கைப் போடச் சொல்லி விவிபாட்டில் அதே சின்னம் தெரிகிறதா அல்லது வேறு சின்னம் தெரிகிறதா எனச் சோதிக்க வேண்டும்.
வாக்காளர் புகார் சரி எனில் வாக்குபதிவு நிறுத்த வேண்டும்.
புகார் தவறு எனில் அந்த வாக்காளரை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும்.
Test Vote என்பதை 17A பதிவேடு மற்றும் 17 C பதிவேட்டில் எழுத வேண்டும்.
6)Proxy Vote (பதிலி வாக்கு)
(இராணுவ வீரரின் உறவினர்கள் அளிக்கும் வாக்கு) இதற்கு உறுதிமொழிச் சான்று அளிக்கப்பட வேண்டும்.
EVM ல் பதிவான ஓட்டுகள், 17 A பதிவேட்டில் பதிவான வாக்காளர் எண்ணிக்கை, குறியீட்டு வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை என மூன்றுமே சமமாக இருக்க வேண்டும். இதில் வாக்களிக்காத
49 O, 49 P, 49 M ( இருக்கும்பட்சத்தில்) ஆகியவற்றைக் கழித்துவிட்டு எண்ணிக்கையை நேர்ப்படுத்த வேண்டும். ஒரு சிறு பிழை நேர்ந்தாலும் நாம்தான் பொறுப்பு.எனவே மிக விழிப்புடன் செய்வோம்.

இயல்பான வாக்குகள் செலுத்தும்போதும் மேற்கூறிய வாக்குகள் அளிக்கும் சூழ்நிலைகள் ஏற்படும்போதும் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்குச் சாவடியை எவ்வாறு நிர்வகித்தல், நேர்மையாக ,சுமூகமாக விழிப்புடன் வாக்குப் பதிவை நடத்துதல், இயந்திரங்களை எவ்வாறு கையாளுதல், படிவங்களை நிரப்புதல் என தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் காலை ஒன்பது மணிமுதல் மாலை 5 மணிவரை பயிற்சி அளிக்கிறது. தேர்தல் பணி இரண்டு நாட்கள்.ஆக ஆறு நாட்கள் பணிபுரிகிறோம்.வருவாய்த் துறையினர் இரவு பகல் பாராது சுமார் ஐந்து மாதங்கள் தேர்தலுக்காக உழைக்கிறார்கள். இவையெல்லாம் சிறுதுளிதான்.இன்னும் நிறைய பேர்களின் உழைப்பு ,நேர்மையான தேர்தல் நடத்துவதில் இருக்கிறது.
இப்படித் தமிழ்நாடு, கேரளா போன்ற வெகுசில மாநிலங்களில் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் இவ்வளவு நேர்மையாக, கறார்த்தனமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
உபி, பீஹார் போன்ற மாநிலங்களில் வாக்குப் பதிவும் வாக்கு எண்ணிக்கையும் எவ்வாறு நடக்கிறது என்பது நமக்கே தெரியும். இப்போது சொல்லுங்கள். இவ்வளவு ஏற்பாடுகள், உழைப்புகள்மீறி யாராவது கள்ள ஓட்டு போட இயலுமா?
— சுகிர்தராணி, எழுத்தாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.