திருச்சி மலைக்கோட்டையில் இன்று கோலாகலம்…!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவசுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டால் சுகபிரசவம் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக தாயுமானவர் சன்னதியில் உள்ள தங்ககொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மேளதாளங்கள் முழங்கிட ரிஷப கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து கற்பகவிருட்ச வாகனம், பூதவாகனம், வெள்ளி ரிஷபம், யானை, தங்க குதிரை ஆகிய வாகனங்களில் நாள்தோறும் தாயுமானவர், மட்டுவார்குழலம்மை சமேதராக வலம் வந்தார்.
கடந்த. 25 ந் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப்பெண் பிரசவ வைபவமும், 26 ந்தேதி திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
இதைத் தொடர்ந்து இன்று (29ந்தேதி)புதன்கிழமை திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். சித்திரை தேர் திருவிழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, பகுதி செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,திருச்சி தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வேதாத்திரி நகர் பாலு,இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயலாளர் வெங்கடேசன்,இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க நிறுவனர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி, காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்டதலைவர் எஸ்.ஆர். ஆறுமுகம், மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன் கருணாநிதி ஸ்ரீதர் கோவிந்தராஜ் கலைசெல்வி மற்றும் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையட்டி கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 30 ந்தேதி பஞ்சமூர்த்திக்கு பிராயசித்த அபிஷேகம், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.