சிறு வயதில் கின்னஸ் சாதனை…
திருச்சியைச் சேர்ந்த 5 வயது சிறுமி நிதன்யா, 58 பறவைகளின் பெயர்களை அடையாளம் கண்டு, அதன் பெயர்களைத் தெரிவித்து, கின்னஸ் சாதனை புத்தி இடம் பெற்றுள்ளார்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே பறவைகள் மீதான ஆர்வத்துடன் இருந்தார் நிதன்யா. இதையறிந்த எம்.பி.ஏ. பட்டதாரிகளான அவரது பெற்றோர் அர்ஜூன், ஹரிதா இருவரும் ஊக்கப்படுத்தினர்.
சாதனை குறித்து அவரது தாயார் ஹரிதாவிடம் பேசியபோது:
“நிதன்யாவுக்கு ஒன்றரை வயதிலேயே பறவைகள் மீது அதீத ஆர்வம் இருந்ததைக் கண்டேன். பறவைகளின் புகைப்படங்களைச் சேகரித்து அதனை நிதன்யாவுக்குக் காட்டி, அதன் பெயரை மட்டுமின்றி அதன் சிறப்புகளையும் விளக்கினேன். கைப்பேசியிலும், வீட்டில் உள்ள டிஜிட்டல் திரையிலும் பறவைகளின் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்தேன்.
பேசத் தொடங்கியதுமே பறவைகளின் ஒவ்வொரு பெயரையும் உச்சரிக்கத் தொடங்கினாள்.
நான்கரை வயதிலேயே 60 விநாடிகளில் 61 பறவையினங்களை அடையாளம் காட்டினார். இவர் அடையாளம் காட்டியவைகளில் ஈமுக்கோழி, பென்குயின், கிவி ஆகியவை பறக்க முடியாத பறவையினங்கள் என்பதால், அவை நீக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், 60 விநாடிகளில் 58 பறவையினங்களை அடையாளம் காட்டி கின்னஸ் உலகச் சாதனை படைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதற்கு முன்பாக 60 விநாடிகளில் 48 பறவையினங்களை அடையாளம் காட்டிய ஒன்பது வயது சிறுவனின் சாதனையை நிதன்யா, தனது நான்கரை வயதில் முறியடித்துக் காட்டினார்.
தொடர்ச்சியாக, 60 விநாடிகளில் 60 பறவையினங்களின் பெயர்களை அடையாளம் கூறி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். பின்னர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதிவை திருச்சியில் நிகழ்த்திக் காட்டினார். இதற்கான சாதனை உறுதி செய்யப்பட்டு 2026 ஜனவரியில்தான் முடிவு அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில்தான் சான்றிதழும், பதக்கமும் வந்து சேர்ந்தது.
நிதன்யாவின் விடாமுயற்சியே அவளுடன் இணைந்து என்னையும் இயக்கச் செய்தது. இணையவழியில் கர்நாடக சங்கீதமும் கற்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஓவியங்கள் வரைகிறார்” என்கிறார் ஹரிதா.
திருச்சிராப்பள்ளி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்கள், இளம் சாதனையாளர் நிதன்யா.அ அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி, கௌரவித்தார்.
ஒரே நிமிடத்தில் 58 பறவை இனங்களை சரியாக அடையாளம் கண்டு கூறி கின்னஸ் உலக சாதனை படைத்ததற்கும், ஒரே நிமிடத்தில் 60 பறவை இனங்களை அடையாளம் கண்டு கூறி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்ததற்கும் அவர் நிதன்யாவை மனமாரப் பாராட்டினார்.
திருச்சிராப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள நிதன்யாவின் சாதனையைப் பாராட்டிய அவர், மேலும் பல உயரிய சாதனைகளைப் படைத்து தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தி தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.