ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷனின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் & பொருளாளர் மலேசியா ஆர். மணி, மாநில செயலாளர் ஆர். ஸ்டாலின், மற்றும் மாநில கூடுதல் செயலாளர் டி. பக்கிரி சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, மகளிர் அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்றும், இதுவரை சங்கக் கிளைகள் இல்லாத மீதமுள்ள மாவட்டங்களிலும் புதிய கிளைகளைத் தொடங்கி, அமைப்பை வலுப்படுத்த மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்வது.
ரியல் எஸ்டேட் துறையில் உள்ள அனைவரும் இந்த அமைப்பில் இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பது.
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, ரியல் எஸ்டேட் துறையில் சதுரடிக்கு முதலமைச்சர் நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட ரூ. 40 கட்டணத்தை ரத்து செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.
மேலும், டி. டி. சி. பி மற்றும் ஆர். இ.ஆர்.ஏ. அனுமதிகளை எளிமையாக்கியது, பத்திரப்பதிவுத் துறையில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்தது ஆகியவற்றிற்கு சங்கத்தின் சார்பாக பாராட்டு,
28-6-26.. அன்று தலைமைச் செயலகத்தில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் குறிப்பிட்டது போல, நிலத் தகராறுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க:
நில விவகாரங்கள் தொடர்பான வழக்குகளுக்குத் தீர்வு காண, நீதிமன்றங்களில் மாதந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
ஒரே இடத்திற்கு பல போலி பத்திரங்கள் இருப்பதை கண்டறிந்து, முறைகேடாகப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு அதிகாரிகள் குழு அமைத்து உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிய வேண்டும்.
நில அளவையின் போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். தன்னிச்சையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவதையும் தடுக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் முகவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நில முகவர்களுக்கு, எளிய முறையில் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் நடந்தால் 2.% கமிஷனும், 1 கோடி ரூபாய்க்குக் கீழ் வணிகம் நடந்தால் 3.% கமிஷனும் நிர்ணயிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் அவர்களிடம் நேரில் முறையிடவும், கோரிக்கை மனுவை அளிக்கவும் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக முதலமைச்சர் அலுவலகத்தில் முறையான அனுமதி கோரப்பட்டுள்ளது என மாநிலத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.