இனி வரலாறு இவனை என்றென்றும் புகழ்ந்து பேசும் !
இந்த பதிவை எழுதுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக காத்திருந்தேன். திமுக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மிகவும் எதிர்பார்த்தது , நீட் ஒழிப்பிற்காக தான். அனிதாவின் மரணம் அப்படி ஒரு வடுவை ஏற்படுத்தியிருந்தது. எப்படியாயினும் திமுக நீட்டை ஒழிந்துவிடும் என்றே நம்பினேன். அன்று தான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு சிறப்பு பதிவிட வேண்டும் என்று காத்திருந்து, இப்பொழுது அடுத்த தேர்தலே வந்துவிட்டது.
2021 தேர்தலின் பொழுது திமுகவிற்கு ஆதரவாக பல பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு முக்கிய காரணம் கமலின் வருகை. இந்த முறை, விஜய். ஆனாலும் திமுகவின் வெற்றியின் மேல் பெரிய பயம் இல்லை. காரணம் செயல். செயல் தலைவர் ஸ்டாலின் சாதித்ததை, கலைஞரே சாதித்திருப்பாரா என்பது சந்தேகமே.
கலைஞரின் மரணத்தில் அரசியல் அனாதையாக உணர்த்த தருணத்தில், இனி தமிழ்நாட்டை யார் காப்பாற்ற போகிறார்கள் என்ற அச்சம் கூடவே இருந்தது. எப்பொழுது, கலைஞருக்கு சட்டப்போராட்டம் மூலம், தன் தலைவனுக்கு அருகில், மெரினாவில் இடம் கிடைத்ததை அறிந்து, இரு கரம் கூப்பி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தாரோ, அந்த தருணத்தில் ஸ்டாலின் மேல் நம்பிக்கை பிறந்தது. கொள்கையுடன் செயலிலும் எதையாவது சாதிப்பார் என்றே கலைஞருக்கு அடுத்து ஸ்டைலனை தலைவராக மனம் ஏற்றுக் கொண்டது.
பதவி ஏற்ற முதலாம் நாளிலேயே அவர் இட்ட அந்த 5 கையொப்பங்களிலும், அவரை நிமிர்ந்து பார்க்க வைத்துவிட்டார். அன்றில் இருந்து இந்த தருணம் வரையில், ஒவ்வொரு விஷயத்தை கேள்விப்படும் பொழுதும், அவரை குறித்து பதிவிட கைகள் பரபரக்கும். நேற்று அவர் ஒன்றிய அரசிற்கு விடுத்த எச்சரிக்கையை பார்த்ததும், அறிஞர் அண்ணா , பெரியார் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது தான் நினைவிற்கு வந்தது. ‘பெரியார் சிரித்து பார்த்திருக்கிறேன், அழுது பார்த்திருக்கிறேன், ஆனால் பயந்து ஒரு போதும் பார்த்ததில்லை’
தமிழ்நாடு அல்ல, வேறு நட்பு மாநிலம் அல்ல, ஒன்றிய அரசு மிக சமீபமாக வெளியிட்டு இருக்கும் நிதி ஆயோக் அறிக்கையின் படி, தமிழ்நாடு முதல் மூன்று இடத்தை பிடித்தவைகள் :
– அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம்
-உற்பத்தித் துறையில் அதிக எணிக்கையில் வேலைவாய்ப்பு
-உற்பத்தி வளர்ச்சி
-மின்னணு, பொறியியல், ஜவுளி மற்றும் தோல் ஏற்றுமதி
-உயர் கல்வி மாணவர் சேர்க்கை குறியீடு
-சமூக முன்னேற்ற குறியீடு
-நிலைத்தன்மை (sustainability )
-ராகி , கரும்பு விளைச்சலில் முதலிடம்
-சிறுகுறு தொழிலில் இரண்டாம் இடம், அதிலும் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு 26% பெண்களின் பங்கேற்பு
இன்னும் பட்டியல் நீளம் . ஆனாலும் இந்த பதிவு அதற்கானதில்லை.
(2021 க்கு முன்னர் மேற் குறிப்பிடவைகளில் தமிழ்நாடு எங்கிருந்தது என்று ai ல் தேடி அறிந்து கொள்ளலாம்)
நூறு ஆண்டு பெறுவாழ்வும், 85 ஆண்டுகால பொது வாழ்வும் வாழ்ந்த ஒரு போராளியின் மரணத்தின் பொழுது, ‘வீர வணக்கம்’ என்று கைகளை உயர்த்தி கோஷமிட்ட முதலமைச்சருக்கான பதிவு இது.
எங்கே போனாலும், ‘படிங்க….. படிங்க….கல்வி ஒன்று தான் உங்களை உயர்த்தும்’ என்று மீண்டும் மீண்டும் அழுந்த உரைக்கும் முதலமைச்சருக்கான பதிவு இது.
எதிரிகள் எவ்வளவு தரம் தாழ்ந்து பேசினாலும், எவ்வளவு அவதூறுகளை அள்ளி தெளித்தாலும், நெறி தவறாது, பொறுமை இழக்காத முதலமைச்சருக்கான பதிவு இது.
உனக்கென்ன, நீ foreign ல இருக்க என்று சொல்லும் ஊருக்கு மத்தியில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தை அமைத்து, எங்கிருந்தாலும் உங்களுக்கும் தமிழ்நாடு சொந்தம் என்று செயலில் உணர்த்தும் முதலமைச்சருக்கான பதிவு இது.
எல்லாவற்றிக்கும் மேலாக, தன்னை பற்றிய அவதூறுகள், தன் தந்தையை பற்றிய அவதூறுகள், தன் குடும்பத்தை பற்றிய அவதூறுகள், கட்சி குறித்தான அவதூறுகளுக்கு அறம் காத்து, தமிழ்நாட்டிற்கு தீங்கு என்றதும் அரசீற்றம் காட்டி, போராட்டக்களத்திற்கு வர காத்திருக்கும் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் முதலமைச்சருக்கான பதிவு இது.
இனி வரலாறு இவனை என்றென்றும் புகழ்ந்து பேசும்.
— சுமதி விஜயகுமார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.