85 வயது மேலானவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது எப்படி ?
85 வயது மேலானவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டுப் போடும் வசதி. அப்பாவிற்காக என் கணவர் விண்ணப்பித்து இருந்தார். இன்று வருகிறோம் என்று செய்தியும் பின்னாடியே ஒரு ஃபோன் காலும் வந்தது.
அப்பா ஏழரை மணிக்கே தயாராகி விட்டார். ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகு சற்று படுத்துக் கொள்ளேன் என்றால் கேட்கவே இல்லை. வந்துவிடுவார்கள் என்று உட்கார்ந்து கொண்டே இருந்தார். 12.30 மணிக்கு சற்று நேரத்தில் வந்து விடுவோம் என்றனர். டேபிள் எல்லாம் ஒதுக்கி வைத்துக் கொண்டு ரெடியாக இருந்தார் அப்பா. அப்பா தமிழ்நாடு செக்ரடேரியட்டில் டெபுடி செக்ரட்ரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வயது 92.
ஒரு ஏழெட்டு பேர். அரசாங்க அதிகாரிகள், போலீஸ், ஒரு ஃபோட்டோகிராஃபர் சகிதம் வந்தனர். வாக்குச் சீட்டை விளக்கி எங்கே டிக் போட வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவருக்கு உதவி தேவைப்படுமா என்று கேட்டனர். வாட்சப், இன்ஸ்டாமார்ட், ஸ்விகி, நெட்ஃப்ளிக்ஸ் எல்லாம் தெரியும். ஆபரேட் பண்ணுவார் என்றதும் ஆச்சர்யப் பட்டனர்.
பின்னர் இரண்டு இடத்தில் கையொப்பம் இட வேண்டும். “ஐயா கையொப்பம் இட முடியுமா? கை நடுங்குமா” என்று கேட்டார் ஒருவர். “எத்தனை G.O. இந்தக் கையால் சைன் பண்ணி இருக்கிறேன் தெரியுமா? நானே போடுகிறேன்” என்றார். சரி சார் என்று புன்னகையுடன் தாளைப் பிடித்துக் கொண்டார். கை நடுங்கத்தான் செய்தது. ஆனால் போட்டு விட்டார். பின்னர் மறைவு ஏற்படுத்த நாங்கள் அனைவரும் அதைப் பார்க்க முடியாத இடத்தில் நின்று கொள்ள வேண்டும் என்றனர். நின்று கொண்டோம். வாக்குச் சீட்டை மடித்து ஒரு கவரில் வைத்து ஒட்டி அவர்கள் கொண்டு வந்திருந்த பெட்டியில் போட்டாயிற்று.
ஜனநாயகத்தில் பெருமைப்படக் கூடிய ஒரு தருணம். அதிகாரிகள், போலீஸ், புகைப்படக்காரார் அனைவருக்கும் மிக்க நன்றி.
🙏 வாழ்க ஜனநாயகம்.
– *வல்லபசீனிவாசன்*








Comments are closed, but trackbacks and pingbacks are open.