விசாரணை என்ற பெயரில் போலீஸார் மிரட்டுவதாக நகை வியாபாரிகள் குற்றச்சாட்டு!
விசாரணை என்ற பெயரில்
போலீஸார் மிரட்டுவதாக
நகை வியாபாரிகள் குற்றச்சாட்டு!
தஞ்சை கீழ அலங்கம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுவைக் குடித்து இரண்டு கூலித் தொழிலாளிகள் இறந்தது தொடர்பாக, நகை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை விசாரணை என்ற பெயரில் போலீஸார் அழைத்துச் சென்று ‘குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு மிரட்டி துன்புறுத்துவதாக’ செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
போலீஸாரின் நடவடிக்கைகளைக் கண்டித்து தஞ்சையில் நகை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இருநூறுக்கு மேற்பட்ட பட்டறைகள் மற்றும் மெருகேற்றும் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையையொட்டி அமைந்துள்ள மது அருந்தும் கூடத்தில் மே 20ஆம் தேதி காலை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் (காலை 11.15 மணியளவில்) சட்டவிரோதமாக சில்லைறையில் விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த படைவெட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (68), பூமால்ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த ‘குட்டி’ விவேக் (36) என்ற 2 மீன் வெட்டும் தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
வாயில் நீர் வழிந்தவாறு மீன் மார்க்கெட்டில் மயங்கி விழுந்த குப்புசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மதுக்கடை வாசலில் மயங்கி விழுந்த ‘குட்டி’ விவேக் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்ற பிற்பகல் 2.45 மணியளவில் இறந்தார்.
ஏற்கெனவே செங்கல்பட்டு பகுதியிலும், விழுப்புரம் மரக்காணம் பகுதியிலும் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் மது குடித்து 23 நபர்கள் பலியானதைத் தொடர்ந்து, அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவித்தது.
அதோடு, இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், தஞ்சையில் டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில் விற்கப்பட்ட மதுவைக் குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சயனைடு கலந்த மதுவைக் குடித்ததே இவ்விருவரின் சாவுக்கு காரணம் என viscera test -ல் தெரிய வந்துள்ளதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அன்றைய இரவு 10 மணியளவில் அவசர அவசரமாக கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடனிருந்தார்.
இது கொலையா அல்லது தற்கொலையா, அதற்கான மோட்டிவ், சயனைடு எப்படி கிடைத்தது என்ன என்பன போன்ற விபரங்கள் விசாரணை முடிவில் தான் தெரிய வரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் சுமார் 10 தனிப்படைகள் அமைத்து இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று தங்களது கஸ்டடியில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அதோடு, சயனைடு எப்படி கிடைத்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே, டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கி குடிச்ச அந்த சரக்கில் தான் ஏதோ கோளாறு இருந்திருக்கு. ஆனா அதுபத்திய உண்மையை சொல்லாம அரசு அதிகாரிகளும் போலீஸாரும் மறைக்கிறாங்க என இச்சம்பவத்தில் பலியான குப்புசாமி மற்றும் ‘குட்டி’ விவேக் ஆகியோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இவ் வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவ்விருவரின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை மாநகரில் உள்ள நகை மெருகேற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று ‘சயனைடு’ கொடுத்ததாக ஒத்துக்கொள்ளச் சொல்லி துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
போலீஸாரின் இச்செயலைக் கண்டித்து தஞ்சையில் நகை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இருநூறுக்கு மேற்பட்ட பட்டறைகள் மற்றும் மெருகேற்றும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் தினமும் கடைவீதிக்கு வந்து மெருகு போடுபவர்களை அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொள்வதால் தொழில் செய்ய முடியவில்லை.
இதனால் நகை ஆபரணம் செய்யும் பொற்கொல்லர்கள் தாங்கள் தயார் செய்த அணிகலன்களை பாலிஷ் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நகைக்கடை வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்துள்ள அத்தியாவசியப் பொருளான திருமாங்கல்யம், தாலிகுண்டு மற்றும் இதர அணிகலன்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,” என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தஞ்சை நகர தலைவர் எஸ்.வாசுதேவன்.
‘திருச்சி கில்ட் ஷாப்’ என்ற பெயரில் தஞ்சாவூர் காசுக்கடை தெருவில் நகை மெருகேற்றும் தொழிலில் ஈடுபட்டுவரும் அசாருதீன், அவரது சகோதரர் ஆஷிக் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை (ஜுன் 6) பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் இன்னும் அவர்களை விடுவிக்கவில்லை.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜுன் 8) தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், இவ்வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டதாக முதலமைச்சரிடம் கூறி நல்ல பெயர் வாங்குதற்காக இவ்வழக்கை அவசர அவசரமாக முடிக்க போலீஸார் திட்டமிட்டு செயல்படுகின்றனரோ என்ற சந்தேம் ஏற்பட்டுள்ளது என்கிறார் வாசுதேவன்.