டப்பா டான்ஸ் ஆடும் ‘டான் பிக்சர்ஸ்’
தனுஷ் ஹீரோ & டைரக்ஷனில் ‘இட்லிக் கடை’ சுதா கொங்கரா டைரக்ஷனில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ தனது டைரக்ஷனில் முரளி அதர்வாவின் ‘இதயம் முரளி’ & சிலம்பரசனின் 49—ஆவது படம் என ஒரே நேரத்தில் நான்கு படங்களைத் தயாரித்து நானூறு கோடிகளைக் களத்தில் இறக்கிவிட்டு, கதிகலங்கி நிற்கிறாராம் ‘டான் பிக்சர்ஸ்’ அதிபரான ‘ரெட்ஜெயண்டி’ன் ஆசி பெற்ற ஆகாஷ் பாஸ்கரன். ஏன்னா ‘இடலிக்கடை’யை இந்த ஆகஸ்டில் ரிலீஸ் பண்ணுவதாக திட்டம் போட்டு ஷூட்டிங் நடத்தினார்கள்.
அதே ஆகஸ்ட் 14—ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’யை ரிலீஸ் பண்ணுவதாக தடாலடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த ஏப்ரலில் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இதனால் அக்டோபருக்கு ‘இட்லிக் கடை’யை தள்ளிவைத்தது டான் பிக்சர்ஸ். இன்னும் 25 நாட்கள் ஷூட்டிங் நடத்த வேண்டியுள்ளது என காரணம் சொல்லப்பட்டாலும் ஃபைனான்ஸ் சிக்கல் தான் நிஜக்காரணமாம்.
ஏன்னா சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ யின் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பித்து, மதுரை, காரைக்குடி, சிதம்பரம் பகுதிகளில் ஷூட்டிங்கை முடித்து இலங்கையில் இருபது நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடத்தினார்கள். இந்த ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே ‘இதயம் முரளி’ முதல்கட்ட ஷூட்டிங்கை சென்னையில் 30 நாட்கள் முடித்துவிட்டு, முரளி அதர்வா, கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஸ்வீட் ஹீட் கயாதுலோஹர், ப்ரீத்தி முகுந்தன், ஏஞ்சலின், நிஹரிகா, பிரக்யா நக்ரா போன்ற பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் அமெரிக்காவில் ஷூட்டிங் நடத்த கிளம்பிவிட்டார் ஆகாஷ் பாஸ்கரன். காரணம் படத்தின் முக்கால்வாசி கதை அங்கே தான் நடக்கிறதாம்.
‘இதயம் முரளி’ ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்த போது, ‘பராசக்தி’யின் ஷூட்டிங் இலங்கையில் நடந்தது. திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிந்து ஹீரோ சிவகார்த்திகேயன், டைரக்டர் சுதா கொங்கரா உட்பட அனைவரும் கிளம்பிவிட்டனர். ஆனால் அங்கே ஷூட்டிங் நடத்த உதவிய ஏஜென்ஸிக்கு 10 கோடி ரூபாய் பாக்கி வைத்ததால், டைரக்டர் சுதா கொங்கராவின் தங்கை, படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஒருவர் உட்பட நான்கு பேரை 15 நாட்களாக லாக் பண்ணிவிட்டதாம் அந்த ஏஜென்ஸி.
இந்த வில்லங்கமான சங்கதி அமெரிக்காவில் இருக்கும் ஆகாஷ் பாஸ்கரனுக்குத் தெரியவந்ததும் பதறிப் போய், சென்னையில் இருக்கும் மேலிடத்தை தொடர்பு கொண்டு கதறியுள்ளார். உடனே 10 கோடி ரிலீஸ் செய்யப்பட்டு, ஏஜென்ஸி பிடியிலிருந்த அந்த நான்கு பேரும் இலங்கையிலிருந்து ரிலீஸாகி சென்னை வந்துள்ளனர்.
என்னதான் டப்பா டான்ஸ் ஆடினாலும் அசராத ஆகாஷ் பாஸ்கரன், அஜித்தை வைத்து ஐந்தாவது படத்தை 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க தடாலடி முடிவெடுத்துள்ளாராம். “ஹரே ஓ சம்போ… இது எதுல போய் முடியுமோ?”
என்ன தான் டப்பா டான்ஸ் ஆடினாலும் ‘டான் பிக்சர்ஸ்’ கல்லா டப்பா செம வெயிட்டானதப்பா…
–மதுரை மாறன்.