குடிஅரசு அலுவலகத்தில் பெரியாரிடம் பணியாற்றி பயிற்சிப் பெற்றவர் இளம் வயது கலைஞர். அவருடைய அபார உழைப்பு எல்லாரையும் வியக்க வைத்தது. உடனிருந்த சிலருக்கு லைட்டா பொறாமையையும் உண்டாக்கியது. எல்லா இடத்திலும் இது இயல்புதானே
பெரியாரிடம் போய், “ஐயா.. இந்தக் கருணாநிதி ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்கிறான்யா’‘ என்று வத்தி வைத்தனர். கலைஞரைப் பெரியார் அழைத்தார். ‘குற்றச்சாட்டு’ப் பற்றிக் கேட்டார். “குளிக்கிறதுக்கே நேரத்தை செலவழிச்சா வேலையை யாரு பார்க்குறது?”
கலைஞர் சொன்னார், “குளிக்கிறதும் ஒரு வேலைதானேங்கய்யா.. விடியக்காலையிலேயே குளிச்சிட்டு மற்ற வேலைகளைப் பார்ப்பேன். வேலை முடிஞ்சதும் சாயங்காலம் மறுபடி குளிப்பேன்’‘.
பெரியார் தன் இளம் தொண்டனை நம்பினார். குடிஅரசு அலுவலகத்தில் சளைக்காமல் உழைக்கும் கூட்டத்தில் கலைஞருக்கு சிறப்பான இடம் உண்டு. அடுத்ததாக ஒரு ‘குற்றச்சாட்டு’ எழுந்தது. “ஐயா.. கருணாநிதி கவிதை எழுதுறேன்னு சொல்லி எதையோ கிறுக்கிட்டு, பேப்பரை வீணாக்குறான்யா”
மீண்டும் பெரியார் அழைத்தார். அவருக்கு அக்கப்போர் இலக்கியத்தில் ஆர்வம் கிடையாது. புராணம் – இதிகாசம் – புலவர்கள் எல்லாரும் அறிவியலுக்குப் புறம்பாக இருந்ததில் அவருக்கு கோபமும் இருந்தது. தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞர், இப்படி ஏதாவது கிறுக்கி, கெட்டுப் போகிறாரோ என்ற சந்தேகத்துடன், கலைஞர் எழுதியவற்றைக் கொண்டு வரச் சொன்னார் பெரியார்.
ஈட்டி முனைகளே.. எழுங்கள்!
தீட்டிய கூர்வாட்களே.. திட்டமிதோ!
கட்டிய நாய்கள் அல்லவே நாம்
எட்டிய மட்டும் பாய்வதற்கு!
தட்டிய மாத்திரத்தில் தருக்கர்
கொட்டம் அடங்க வேண்டும்.
பெரும் விருப்பமுள்ளவராம்
வெறும் பதவியில் பல பேர்!
அவர் வேண்டாம்.
நெருப்பின் பொறிகளே..
நீங்கள்தான் தேவை!
-என்று கலைஞர் எழுதியதைப் பெரியார் படித்தார். இளைஞர்களை ஈர்க்கும் வலிமை கொண்ட இளைஞர் என்பதைப் புரிந்து கொண்டார்.
இது போல கலைஞர் எழுதிய ‘நெருப்புப் பொறி‘ எழுத்துகள் தொகுக்கப்பட்டு, பெரியாரின் குடிஅரசு அச்சகத்திலேயே ‘கவிதையல்ல…’ என்ற தலைப்பில் 1945-ல் புத்தகமாக அச்சானது. தமிழ்ப் புதுக்கவிதை உலகில் இது முன்னோடிப் புத்தகமாகும். கலைஞரின் புகழ்பெற்ற, ‘புறநானூற்றுத் தாய்’ கவிதையும் குடிஅரசு காலத்தில் அவர் எழுதிய ‘நெருப்புப் பொறி’தான்.
தொடரும்







Comments are closed, but trackbacks and pingbacks are open.